வேறு பெயர்கள் :
குன்றக்குடி நாயனார், குன்றக்குடித்தேவர், குன்றப்பெருமாள் கோயில்
பாதுகாக்கும் நிறுவனம் :
இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் மரபுச் சின்னமாக விளங்குகிறது.
அருகில் உள்ள கோவில்கள் / தொல்லியல் சின்னங்கள் :
மலையடிப்பட்டி குடைவரைகள், கவிநாட்டுக் கண்மாய், தாயினிப்பட்டி
சுருக்கம் :
கீரனூர் பகுதியிலுள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த குடைவரைக் கோயில்களைக் கொண்ட ஊர் குன்னாண்டார் கோயில் ஆகும். குன்றக்குடி என்பதே இவ்வூரின் பழம்பெயராகும். இங்குள்ள சிவன்கோயில் இறைவன் குன்றக்குடித் தேவர், குன்றக்குடி நாயனார், குன்றப்பெருமாள் என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றார். இப்பெயர்களே குன்றாண்டார் என்று அழைக்கப்பட்டு இன்று குன்னாண்டார் கோயில் என்று மருவி இவ்வூருக்கு உரிய பெயராக விளங்குகிறது. அழகிய ஆடல்மண்டபம், கோபுரம் இரு குடைவரைகளைக் கொண்ட கோயிலாகக் குன்னாண்டார் கோயில் காட்சியளிக்கிறது. முற்றுப்பெற்ற குடைவரையும் முற்றுப்பெறாத குடைவரையும் குன்னாண்டார் கோயிலில் உள்ளன. வழிபாட்டில் உள்ள பெரிய குடைவரையின் கருவறையில் மூலப்பாறையில் வெட்டியெடுக்கப்பட்ட சிவலிங்கம் காணப்படுகின்றது. இதன் வாயிலில் பக்கத்திற்கு ஒருவராக இரண்டு துவாரபாலகர்களின் சிற்பங்கள் எடுப்பான தோற்றத்துடன் காணப்படுகின்றன. குடைவரையின் முன்மண்டபத்தில் அழகிய கம்பீரமான தோற்றத்துடன் விநாயகரும் உமையுடன் அமர்ந்திருக்கும் சிவபெருமானின் உருவமும் புடைப்புருவமாகக் காணப்படுகின்றன. சிவபெருமானின் மார்பில் காணப்படும் புரிநூல் வழக்கத்திற்கு மாறாக வலது தோளிலிருந்து புறப்பட்டு இடது கை வழியாகச் செல்கிறது. குன்னாண்டார் கோயிலில் பல்லவர், சோழர், பாண்டியர், நாயக்கர் கால அறுபதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. இவை இக்கோயிலுக்குக் கொடுக்கப்பட்ட தானங்கள் பற்றித் தெரிவிக்கின்றன. இக்கோயிலில் பழமையான கலைச்சிறப்பு வாய்ந்த பல சிற்பங்கள் உள்ளன.