தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

வருணனை

  • 4.3 வருணனை

    காப்பியத்திற்குத் தேவையான கூறுகளில் ஒன்று வருணனை. சீறாப் புராணத்திலும், பல்வேறு வகையான வருணனைகள் இடம் பெற்றுள்ளன. பெண் வருணனை, ஞாயிற்றின் தோற்றமும் மறைவும் பற்றிய வருணனை, இயற்கை வருணனை ஆகியவை அமைந்துள்ளன. காப்பிய ஆசிரியர்களின் வருணனைச் சிறப்புகளில் ஒன்று கேசாதி பாத வருணனை ஆகும். கேசம் என்றால் தலைமுடி என்று பொருள். பாதம் என்பது காலின் பாதத்தைக் குறிக்கும். தலைமுடி முதல் காலின் பாதம் வரை உள்ள உடல் உறுப்புகளை வருணிப்பதைக் கேசாதி பாத வருணனை என்பார்கள்.

    இசுலாமும் வருணனையும்

    நபிகள் நாயகத்தின் வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்பு உடையவர்களாக இருந்த பெண் பாத்திரங்களை வருணிக்க முடியாது. இசுலாமிய வரம்பு இத்தகைய வருணனைக்குத் தடையாக அமைந்துள்ளது. எனவே உமறுப் புலவர் தன் தனித்திறனை நபிகள் காட்டிய அற்புதங்கள் ஒன்றினில் அமைத்துப் பாடுகிறார்.

    4.3.1 பெண் வருணனை

    திமிஷ்கு நாட்டு மன்னன் ஹபீபு, தன்னுடன் ஒரு சதைக் கட்டியை எடுத்து வந்து, அதற்கு உயிர் கொடுத்து ஒரு பெண் உருவாக அமைக்கும்படி நபிகளிடம் கேட்டார்.

    நபிகள் நாயகம் இறை ஆணைப்படி ஜம் ஜம் எனும் கிணற்று நீரைத் தெளித்து இறைவனை இரந்து வேண்டினார். தசைக்கட்டி பெண் உருவாக மாறியது. அதை உமறுப் புலவர் சிறப்பாகப் பாடியுள்ளார்.

    கண்ணின் செயல்கள்

    நபிகள் நாயகம் தசைக் கட்டியிலிருந்து உருவாக்கிய பெண்ணின் கேசாதி பாத வருணனையினை உமறுப் புலவர் கண்ணியத்துடன் பாடியுள்ளார். அந்தப் பாடலில் கண்ணைப் பற்றி மிகவும் சிறப்பாக வருணனை செய்துள்ளார்.

    மடற்குழை கிழித்துத் தடக்குழல் குழைத்து
         வரியளி யினைச்சிறைப் படுத்திக்
    கடற்குளம் தேறாது அலைதரச் செய்து
         கணைஅயில் கடைபடக் கறுவி
    விடத்தினை அரவப் படத்திடைப் படுத்தி
         மீனினம் பயப்படத் தாழ்த்தித்
    திடக்கதிர் வடிவாள் எனக்கொலை பழகிச்
         சிவந்துஅரி படர்ந்தமை விழியாள்

    (தசைக்கட்டியைப் பெண்ணுருவமைத்த படலம் - 20 : 1958)

    (மடற்குழை = விரிந்த காது; கிழித்து = ஊடுருவி; தடக்குழல் = நீண்ட தலைமுடி; குழைத்து = தளர்ந்திடச் செய்து; வரியளியினை = கோடுகள் கொண்ட சிறகுகளை உடைய வண்டுகளை; தேறாது = தெளியாது; கணை = அம்பு; அயில் = வேல்; படக்கறுவி = சினந்து; விடம் = நஞ்சு; அரவப் படம் = பாம்பின் படம்; திடக்கதிர் = உறுதியும் ஒளியும்; அரிபடர்ந்த = செவ்வரி படர்ந்த)

    தசையிலிருந்து உருவான பெண்ணின் கண்கள் அவளது காதுகளை ஊடுருவித் தாக்கின; தலைமுடியினைத் தாழ்வுறச் செய்தன; வண்டுகளைச் சிறைப்படுத்தின; கடல்களிலும் குளங்களிலும் அலையை வற்றச் செய்து; அம்பு, வேல் போன்ற கருவிகள் கோபத்தால் செயல்படாதவாறு செய்தன; நஞ்சினைப் பாம்பிடம் போக்கி, கெண்டை மீன் இனத்தை அஞ்சிடுமாறு தாழ்வுபடுத்தின; வாளை ஒப்பக் கொலைத் தொழிலைக் கற்றதாகி, சிவப்பு ஏறி வரிபடர்ந்த கண்களாயின என எந்த விதமான விரசமுமில்லாமல் இசுலாமியர்களின் மரபை மீறாமல் அதே நேரத்தில் காப்பிய நயமும் குன்றாத வகையில், மேற்குறிப்பிட்ட பாடலில் பெண்ணின் உறுப்புகளை வருணித்துப் பாடியுள்ளார் உமறுப் புலவர்.

    தனித்தன்மை

    பொதுவாகப் பெண்களை வருணிப்பது இசுலாமிற்கு ஏற்புடையது இல்லை என்பதை உணர்ந்து, குறை சொல்லாதவாறு மிகவும் பக்குமாகப் பாடியமை உமறுப் புலவரின் தனித்தன்மையாகும்.

    4.3.2 ஞாயிறு வருணனை

    நபிகள் நாயகம் பிறந்ததனால் என்ன என்ன நிகழ்ந்தன என்பதனைச் சீறாப் புராணத்தில் உமறுப் புலவர் மிகவும் சிறப்பாகக் கூறியுள்ளார்.

    ஞாயிற்றின் தோற்றம்

    ஞாயிற்றின் தோற்றத்திற்கும் மறைவிற்கும் நபிகள் நாயகம் பிறந்ததை ஒப்பிட்டுக் கூறியுள்ளார். அதன் பயனாக அறியாமை என்னும் இருள் மறைந்தது; வறுமை என்னும் அந்தகாரம் அழிந்தது. இதனை அறிந்த ஞாயிறு என்னும் பகலவன் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தான்; மகிழ்ச்சி எனும் கடலிலே மூழ்கினான். இவ்வாறு கடலில் குளித்து மகிழ்ச்சி அடைந்து, இருளை அகற்றும் தன் கதிர்களைப் பரப்பிக் கொண்டு ஞாயிறு எழுந்தான். இதனை உமறுப் புலவர்,

    தரையினில் பரந்தகுபிர் இருட் குலமும்
         சாற்றிய கலிஇருட் குலமும்
    வரைவிலாது ஒடுங்க முகம்மது நபிஇம்
         மானிலத்து உதித்தனர் என்றே
    கரையிலா உவகை ஆனந்த வெள்ளக்
         கடலிடைக் குளித்துறக் களித்து
    விரைவினில் திமிரக் கடற்பகை துறந்து
         வெய்யவன் கதிர்கள் விட்டு எழுந்தான்

    (நபிஅவதாரப் படலம், 108 (273)

    (தரை = உலகம்; குபிர் = ஒன்று என்னும் இறைநெறி மறுப்பு; மானிலம் = உலகம்; உதித்தனர்= பிறந்தார்; உவகை = மகிழ்ச்சி; வெய்யவன் = சூரியன்; கதிர் = ஒளி)

    என்று அழகு ஓவியமாகப் பாடியுள்ளார்.

    மேலும் நபிகள் நாயகத்தைக் காண்பதில் பகலவன் (ஞாயிறு) மகிழ்வும் ஆனந்தமும் தூய்மையும் விரைவும் அடைந்ததாக உமறுப் புலவர் காட்டுகிறார்.

    ஞாயிறு தோன்றியதைப் பாடிய உமறுப் புலவர், ஞாயிறு மறைந்ததையும் பாடியுள்ளார். அதை இங்கே காண்போம்:

    ஞாயிற்றின் மறைவு

    அபூஜகில் என்பவன் நபிகள் நாயகத்தின் பகைவன். தீயகுணத்தை உடையவன். தீமைகள் செய்தே வாழ்பவன். அவன் ஒருநாள், ஆலயத்தினுள் சென்று தான் வழிபடும் தெய்வத்தின் முன் நின்றான். துரோகியான அவன் முகத்தைக் கூடப் பார்க்கக் கூடாது என எண்ணினான் பகலவன். கோபம் ஏற்பட்டது. உடனே ஓடி மறைந்தான் என்பதை,

    எதிரி னின்றுதன் தேவ தைதனைப் புகழ்ந்து ஏத்திக்
    கதிர்கொள் பொன்முடிக் கோயிலின் வாயிலைக் கடந்த
    சதியன் தன்முகம் நோக்குதல் தவறுஎனச் சிவந்து
    கொதிகொதித்து அழன்று அருக்கன்மேல் கடலிடை குதித்தான்

           (கபீபு ராசா வரிசை வரவிடுத்த படலம்,  29:2002)

    (தேவதை = குலதெய்வம்; கதிர்கொள் = ஒளியான; சதியன் = சதிகாரன் (அபூ ஜகில்); அருக்கன் = சூரியன்)

    என்னும் பாடலில் உமறுப் புலவர் சிறப்பாக எடுத்துரைக்கிறார்.

    ஞாயிற்றிடம் காணப்படுகின்ற இயற்கையான சிவந்த நிறத்தையும், வெப்பத்தையும் தீயோன் அபூ ஜகிலின் செயலால் ஏற்பட்டவை என்று கூறுகிறார். மாலையில் மறையும் ஞாயிற்றின் இயற்கைச் செயலினைத் தீயோனைப் பார்த்ததால் நிகழ்ந்தது என்று குறிப்பிடுகின்றார். இவ்வாறு காட்சிப் படுத்தியிருப்பது உமறுப் புலவரின் கற்பனை வளத்தினை வெளிப்படுத்துவதாக அமைந்து உள்ளது.

    4.3.3 குறிஞ்சி நிலக்காட்சி

    ஞாயிற்றின் தோற்றம் மறைவு போன்ற இயற்கைக் காட்சிகளை வருணித்த உமறுப் புலவர் குறிஞ்சி நிலக் காட்சியையும் வருணித்துள்ளார்.

    குறத்தியர் பாடல்

    குறிஞ்சி நிலத்தில் தினைப் பயிர்கள் உள்ளன. அவற்றின் இலைகள் நீண்டவை; அவற்றின் பளுவான கதிர்கள் காரணமாக அந்த இலைகள் வளைந்தன. குறத்தியர் மணம் தரும் பூக்களைத் தலை முடியில் சூடியுள்ளனர். தினைக் கதிர்களை உண்ணச் சிவந்த வாய் உடைய கிளிகள் வந்திருந்தன. கிளிகளை விரட்டக் கவண் கல்லைக் குறத்தியர் எறிந்தனர்; பாடினர். கிளிகளும் ‘கீச்’ என ஒலி எழுப்பின. இந்த இனிய ஓசைகள் பாடலாகக் கேட்டன. காட்டுப் பசுக்கள் அப்பாடலைக் கேட்டு உறங்கின. இத்தகைய வளமான மலைச்சாரலைப் போர் வீரர்கள் அடைந்தனர் என்பதனை உமறுப் புலவர்,

    நீட்டுஇலை மிடறு சாய்த்த
         நெடுங்கதிர் தினையின் சார்பில்
    கோட்டலர் கமழும் கூந்தல்
         குறத்தியர் கவண்கல் ஏந்திப்
    பாட்டிசை மிழற்றும் செவ்வாய்ப்
         பசுங்கிளி கடியும் ஓதை
    கேட்டுஇனிது ஆமா துஞ்சும்
         கிளைவரைச் சாரல் போந்தார்

    (பதுறுப் படலம், 31:3382)

    (நீட்டுஇலை = நீண்ட இலை; மிடறு = கழுத்து; சாய = வளைய; கோட்டலர் = மரக்கிளைகளில் பூத்த மலர்கள், வயிற்பூ, வாவிப்பூ, அயற்பூ எனப் பிரிப்பர்; கமழும் = மணக்கும்; கவண்கல் = பொடிக்கற்களை வைத்துச் சுழற்றி எறிவதற்காக இரு பக்கங்களிலும் நீண்ட சிறு கயிறு கட்டப்பெற்ற சிறியதான தொட்டில்; கூந்தல் = தலைமுடி; மிழற்றும் = பாடும்; கடியும் = விரட்டி ஓட்டும்; ஓதை = ஒலி; துஞ்சும் = தூங்கும்; ஆமா = காட்டு மாடு; கிளை = கன்றுகள்; வரை = மலை; சாரல் = அடிவாரம்)

    என்று பாடியுள்ளார்.

    1)

    இசுலாமிய இரட்டைக் காப்பியங்கள் யாவை?

    2)

    சீறாப்புராணம் - பொருள் விளக்குக.

    3)

    நுபுவ்வத்துக் காண்டத்தின் சிறப்பினை விவரிக்க.

    4)

    இசுலாமியர்களின் ஐம்பெருங் கடமைகள் யாவை?

    5)

    நபிகள் நாயகம் பிறந்ததற்குக் கூறப்பட்ட உவமைகள் யாவை?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 26-07-2017 16:36:44(இந்திய நேரம்)