தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

தமிழின் தனிச்சிறப்பு

  • 2.6 தமிழின் தனிச்சிறப்புகள்

    தமிழின் தனிப்பெரும் சிறப்புகளை எல்லாம் இப்பிள்ளைத்தமிழ் எடுத்துக் கூறுகின்றது. குமரகுருபரர் சைவத்தையும் தமிழையும் வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் போற்றி உள்ளார்.

    சங்கம் வைத்து மொழி வளர்த்த பெருமை மதுரைக்கு உண்டு. எனவே, மதுரை என்றவுடன் தமிழும், தமிழ் என்றவுடன் மதுரையும் நினைவுக்கு வருவது இயல்பு. இதை வெளிப்படுத்துவதுபோல்

    தமிழொடு பிறந்து பழமதுரையில் வளர்ந்த கொடி

    (மீனா.பிள். 34)

    என்று மீனாட்சி தமிழோடு பிறந்ததாகக் கூறித் தமிழுக்கு ஏற்றம் தந்துள்ளார்.

    2.6.1 பைந்தமிழ்ப் பின்சென்ற பசும் கொண்டல்

    மேலும் தமிழுக்கு ஏற்றம் தரும் வகையில், தமிழை இறைவனோடு தொடர்புபடுத்திப் பாடும் மரபும் உண்டு. தமிழ் மீது திருமாலுக்குள்ள பற்றை வெளிப்படுத்தும் வகையில், பிள்ளைத்தமிழில் ஒரு நிகழ்ச்சியைப் புனைந்துரைத்துள்ளார் குமரகுருபரர்.

    பணிகொண்ட முடவுப் படப்பாய்ச் சுருட்டுப்
         பணைத்தோள் எருத்துஅலைப்பப்
    பழமறைகள் முறைஇடப் பைந்தமிழ்ப் பின்சென்ற
         பச்சைப் பசும்கொண்டலே

    (மீனா.பிள். 2)

    (முடவு = வளைந்த, படப்பாய் = பாம்புப் படங்கள் உள்ள படுக்கை/ திருமாலின் படுக்கை, பணை = திரண்ட, எருத்து = பிடரி, பழமறைகள் = வேதங்கள்)

    என்ற பாடல் அடிகள் திருமாலைப் போற்றியுள்ளன. திருமால் தமிழ்ப் புலவர் ஒருவருக்காகக் காஞ்சியை விட்டு நீங்கிய புராணக் கதையை இப்பாடல் அடிகள் விளக்கி உள்ளன.

    • ஆழ்வார் வரலாறு

    பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப் பசுங்கொண்டல் என்னும் தொடர் திருமழிசை ஆழ்வார் வரலாற்றைக் குறிப்பிடுகின்றது. திருமழிசை ஆழ்வாரின் பாடலுக்கு ஏற்ப அவர் பின்னால் திருமால் சென்றார் என்னும் பொருள் கொண்டது. கிழவி ஒருத்தியை ஆழ்வார் இளம் பெண்ணாக மாற்றினார். இதனை அறிந்தான் பல்லவ மன்னன். ஆழ்வாரின் மாணவன் கணிகண்ணன் மூலம் தன்னையும் இளம் பருவத்தினனாக ஆக்குமாறு ஆழ்வாரை வேண்டினான். கணிகண்ணன் மறுத்தான். இதனால் மன்னன் அவனை நாடு கடத்தினான். இச்செய்தி அறிந்ததும் ஆழ்வார்,

    கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி
    மணிவண்ணா நீ கிடக்க வேண்டா - துணிவுடைய
    செந்நாப் புலவன் யான் செல்கின்றேன் நீயும் உன்தன்
    பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்

    (கச்சி = காஞ்சி, பைந்நாகப்பாய் = பாம்புப் படுக்கை)

    என்று பாடுகின்றார். உடனே திருமாலும் காஞ்சிபுரத்தை விட்டு அகன்றார். தமிழ்ப் புலவருக்காகத் திருமால் இவ்வாறு செய்ததையே பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப் பசுங்கொண்டல் என்று பிள்ளைத்தமிழ் குறிப்பிட்டுள்ளது.

    2.6.2 அன்பின் ஐந்திணை

    தமிழ்க்கடலின் அன்பின் ஐந்திணை எனத் தொடங்குவது இறையனார் அகப்பொருள் என்னும் இலக்கண நூலாகும். இந்த அகப்பொருளின் தெளிந்த அமுதமாகிய கூட்டினை உண்பவள் கலைமகள் என்ற செய்தியைப் பிள்ளைத்தமிழ் சுட்டி உள்ளது.

    தெள்ளித் தெளிக்கும் தமிழ்க்கடலின் அன்பின்ஐந்
         திணைஎன எடுத்த இறைநூல்
    தெள்அமுது கூட்டுஉணும்

    (மீனா.பிள். 9)

    (இறைநூல் = இறையனார் அகப்பொருள், இலக்கணநூல்)

    எனும் பாடல் அடிகள் மேல் கருத்தை விவரிக்கும். தமிழ் பற்றிய குறிப்புகளைப் பல்வேறு இடங்களில் குமரகுருபரர் குறிப்பிட்டுள்ளார்.

    co1242d4.gif (14067 bytes)

    இவ்வாறாகத் தமிழ் சிறந்த அடைமொழிகளுடன் போற்றப் பெற்றுள்ளதை அறிய முடிகின்றது.

புதுப்பிக்கபட்ட நாள் : 08-08-2017 13:18:49(இந்திய நேரம்)