Primary tabs
-
ஒரு வகுப்பார் அல்லது நாட்டார் தம் கருத்தைப் பிறருக்குப் புலப்படுத்துதற்கு ஒரு கருவியாகக் கொள்ளும் ஒலித்தொகுதியே ‘மொழி’ என்பார் பாவாணர்.
நம் மனத்தின் உள்ளே, ஏதாவது ஒன்றைப் பற்றிச் சிந்திப்பதும் மொழியின் ஒருநிலை ஆகும். பலர் சேர்ந்து ஓர் இனமாக வாழ்கிறார்கள் என்பதற்கு அவர்களின் நிறமோ, பழக்கவழக்கங்களோ காரணமில்லை; அவர்கள் ஒருமொழி பேசுவோராக இருப்பதுதான் காரணமாகும் என்பர். எனவே மொழி என்பது ஓர் இனத்தின் புற அடையாளம் எனலாம்.
மொழிதல் என்றால் சொல்லுதல் என்பது பொருள். பேச்சு மொழியே முதலில் தோன்றியது. அறிஞர் மு. வரதராசனார்,
‘பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி; ஆயினும் எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் அடுத்த நிலையில் வைத்துக் கருதப்படும் மொழியாகும். இவைகளே அன்றி வேறுவகை மொழிநிலைகளும் உண்டு. எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காணப்படுவது ஆகியவைகளும் மொழியே ஆகும்’
என்று கூறுகிறார். எனவே மொழி என்பதைப் பேச்சு, எழுத்து, எண்ணம் என்றும் பல நிலைகளில் அறியலாம். ஒலிவடிவான குறியீடுகளைக் கொண்டது பேச்சுமொழி; வரிவடிவான குறியீடுகளைக் கொண்டது எழுத்துமொழி.
ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய கண்டங்களில் ஆயிரக்கணக்கான மொழிகள் பேசப்படுகின்றன. இம்மொழிகள் பல மொழியினங்களில் அடங்குவன. திராவிட மொழியினம், ஆரிய மொழியினம், முண்டா மொழியினம் என்பவை இந்தியாவில் உள்ளன. கிரேக்கம், இலத்தீன், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம், வெல்ஷ் ஆகிய ஐரோப்பிய மொழிகளும் ஆரிய மொழியினத்தைச் சார்ந்தனவே. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு, பிராகுவி போன்ற மொழிகள் திராவிட மொழியினத்தைச் சார்ந்தவை. தமிழம் என்னும் பெயரே திராவிடம் எனத் திரிந்தது என்பார் மொழி அறிஞர் பாவாணர் அவர்கள். சீனமொழி, திபேத்திய மொழி, பர்மிய மொழி, சயாம் மொழி ஆகியவை ஓரினத்தைச் சேர்ந்தவை.
பெ.சுந்தரம் பிள்ளைரஷ்யாவிலும் துருக்கியிலும் வழங்கும் மொழிகள் சிந்திய மொழிகளாகும். அரேபியாவிலும், வட ஆப்பிரிக்காவிலும் வழங்கும் மொழிகள் செமிட்டிக் மொழிகளாகும். தமிழ்மொழி, கிரேக்க மொழி, இலத்தீன் மொழி, எபிரேய மொழி, சீன மொழி, சமஸ்கிருத மொழி ஆகியவை உலக மொழிகளில் பழைமையானவை. இவற்றில் தமிழ் மூவாயிரம் ஆண்டுக் கால வரலாற்றைக் காட்டுவதுடன் இன்று வரை வழக்கிலிருந்து மறையாமல் இருந்து வருகிறது. எனவே, மனோன்மணியம் நாடகம் எழுதிய பேராசிரியர் பெ.சுந்தரம் பிள்ளை அவர்கள், தமிழ் வாழ்த்துப் பாடலில், வட வாரியம் போல் வழக்கொழியா உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துவமே என்று குறிப்பிடுகிறார்.
2.1.2 பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு
பேச்சு மொழி ஓடும் ஆறு போன்றது; எழுத்து மொழி அந்த ஆற்றில் மிதக்கும் பனிக்கட்டி போன்றது என்பர் அறிஞர். குளிர் மிகுதியால் பனி உறைந்து வேறுபட்டதைப் போல் கற்றவர்களின் முயற்சியால் மொழி இறுகி அமைந்ததே எழுத்து மொழி. பிரெஞ்சு மொழி, சீனமொழி ஆகியவற்றில் பேச்சு மொழியும் எழுத்து மொழியும் மிகவும் வேறுபாடு உடையனவாக உள்ளன. தமிழில் பேச்சு மொழியிலிருந்து எழுத்துமொழி மிகவும் வேறுபாடு உள்ளது.
- பேச்சும் எழுத்தும்
பொதுவாக எல்லா மொழிகளிலும் பேச்சு மொழியில் வாக்கியங்கள் அளவில் சுருங்கியதாக இருக்கும். எழுத்து மொழியில் வாக்கியங்கள் நீண்டு அமையும். பேச்சு மொழியில் உணர்ச்சிக் கூறுகள் அதிகமாக இருக்கும். எழுத்து மொழியில் உணர்ச்சிக் கூறுகள் குறைந்திருக்கும். தமிழும் இதற்கு விதிவிலக்கு அல்ல.
அப்பா, எம்புட்டுப் பெரிசுப்பா இந்த மலை!பேச்சு மொழி
ஏ! அப்பா! எவ்வளவு பெரிய மலைபேச்சுமொழியின் உயர்நிலை
அது மிகப் பெரிய மலைஎழுத்து மொழி
2.1.3 இலக்கியச் சிறப்பு - செவ்வியல் பாங்கு
உலக மொழிகள் எல்லாவற்றிலும் இலக்கிய வளம் இருப்பதாகச் சொல்வதற்கில்லை. பேச்சளவில் அமைந்தவை, ஓரளவு இலக்கியம் உடையவை, ஓரளவு இலக்கணம் உடையவை என்ற நிலையில் உள்ள மொழிகளும் இருக்கின்றன. சில நூறு சொற்களை வைத்துக்கொண்டே வாழும் மொழிகளும் உள்ளன. தமிழில் இரண்டாயிரம் ஆண்டுக்கால இலக்கியங்கள் உள்ளன. தொன்மையும், பிறரைச் சாராத, பிறவற்றிலிருந்து உருவாகாத சுய மரபும், செறிவும் சிறப்பும், வாய்ந்த பழமையான இலக்கியங் கொண்ட மொழியைச் செம்மொழி (Classical language) என்பர். தமிழ் உலகிலுள்ள தொன்மையான மொழிகளில் ஒன்று. இன்றைய இந்திய இலக்கியங்களை விட ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது. கி.மு. 200ற்கு முற்பட்ட தொல்காப்பியம் எனும் சிறந்த இலக்கண நூலை உடையது. எட்டுத் தொகை, பத்துப்பாட்டு என்னும் மிகச் சிறந்த இலக்கியத் தொகுப்புகளைக் கொண்டது. சமஸ்கிருதம் தென்னிந்தியாவில் பரவுவதற்கு முன்னரே- செல்வாக்குப் பெறுவதற்கு முன்னரே, தனித்தன்மை வாய்ந்த மொழியாகத் தோன்றியது. பிற மரபைச் சாராது, பிற மரபிலிருந்து தோன்றாது, சுய மரபை உடையது. எனவே தமிழும், கிரேக்கம், இலத்தீன், சீனம், பெர்சியன், சமஸ்கிருதம் போன்ற உலகச் செம்மொழிகளுள் ஒன்று என அறிஞர் ஜார்ஜ் ஹார்ட் (George Hart) என்பார் குறிப்பிடுவார்.