தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

முன்-5.1.1 புகழ்

  • 5.1 பண்பாட்டு அடிப்படைகள் - I

    Audio

    திரைப்படம் பார்க்கும் நாம், சில காட்சிகள் நம் பண்பாட்டுக்கு ஒவ்வாதன என்று கருதுகிறோம். ஆங்கிலப் படத்தில் காதலன் காதலியை முத்தமிடுவது காட்டப்பெறுகிறது. தமிழ்ப்படத்தில் அத்தகைய காட்சியைக் காட்ட அனுமதி இல்லை. ஏன்? அதுதான் பண்பாடு. இத்தகைய காட்சியைத் தமிழர் பண்பாடு ஒத்துக் கொள்ளவில்லை. முத்தம் என்பது வாழ்க்கையில் இல்லையா? இருக்கிறது. ஆனால் இது பிறர்முன் நிகழ்வதில்லை. தாய் குழந்தையை முத்தமிடும் காட்சி அனுமதிக்கப்படுகிறது. ஆனால் காதலர் முத்தம் காட்சிப் பொருளாக அனுமதிக்கப்படுவதில்லை. வயது வந்த பெண்ணைத் தந்தை அன்புடன் தழுவிக்கொள்ளும் நிகழ்ச்சியைத் தமிழர் இல்லங்களில் காணமுடியாது. இவையெல்லாம் பண்பாட்டின் தனித்தன்மைகள். இவற்றுக்கு ஓர் அடிப்படை இருக்கிறது. அந்த அடிப்படை பாலுணர்வில் சில நாகரிக வரம்புகளைப் பேணுதலாகும். இத்தகைய அடிப்படைகள் சிலவற்றை இங்கே காணலாம்.

    5.1.1 புகழ்

    புகழ்பெற வேண்டும் என்ற விருப்பம் உலகத்தில் எல்லார்க்கும் உரியதுதான். செய்தித்தாளில் பெயர் வருவது, புகைப்படம் வெளியிடப்படுவது, பலர்முன் மாலை சூட்டப்பெறுவது, பலர் கையொலி எழுப்பிப் பாராட்டுவது, மேடையில் புகழ்ந்து உரைக்கப் பெறுவது, தெருக்களில் வளைவுகள் வைத்து வரவேற்பது, ஊர்வலமாக அழைத்து வருவது ஆகியவற்றில் பலரின் கவனத்தைக் கவர்தற்கு வாய்ப்புகள் உள்ளன. மற்றவர்களைவிட நாம் சிறந்தவர் என்ற பெருமித உணர்வில் பலர்க்கும் நாட்டம் இருக்கவே செய்யும். இந்தப் புகழ் விருப்பமே சமூகத்தில் பல அறச்செயல்கள் நடக்க அடிப்படையாகும். தமிழரின் புகழ்விருப்பம் சில தனித்தன்மைகளைக் கொண்டது.

    பெரிய கோபுரத்தைக் கட்டிவனின் பெயரை எங்கும் காணவில்லை.

    கல்லணையைக் கட்டியவன் பெயர் எங்கும் பொறிக்கப் பெறவில்லை.

    திருப்பரங்குன்றச் சிற்பங்களைச் செய்தவன் பெயர் தெரியவில்லை.

    தமிழ்விடுதூது என்னும் சிறந்த நூலை எழுதிய ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.

    இன்னும் எத்தனையோ? தங்கள் பெயரை வெளியிட்டுப் புகழ்தேடிக் கொள்ளாத நல்ல உள்ளங்கள் இருக்கின்றன. இவர்கள் நல்ல செயல்கள் நடந்தால் போதும் நம் பெயர் தெரிய வேண்டியது இல்லை என்ற உணர்வுடையவர்களாக இருந்தனர்.

    புகழ்எனின் உயிரும் கொடுக்குவர் பழியெனின்
    உலகுடன் பெறினும் கொள்ளலர்

    (புற: 185-5)

    c03110ad.gif (1294 bytes)

    என்று சங்ககாலப் புலவர் கூறுகின்றார். புகழுக்காக உயிரையும் கொடுப்பார்கள். பழியை உலகத்தோடு சேர்த்துத் தந்தாலும் பெறமாட்டார்கள். இத்தகைய தன்னலமற்ற பெரியோர்களால்தான் உலகமே நிலைபெற்றிருக்கிறது என்று அப்புலவர் பாடுகின்றார்.

    ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
    பொன்றாது நிற்பதுஒன்று இல்

    (குறள் :233)

    c03110ad.gif (1294 bytes)

    என்பர் திருவள்ளுவர். இதன் பொருள் என்ன தெரியுமா? புகழுக்கு நிகராக இந்த உலகத்தில் இறவாது நிற்பது வேறொன்றில்லை என்பது இதன் பொருள்.

    5.1.2 வீரம்

    வீரப்பண்பு பெருமை தரத்தக்க பண்புகளில் ஒன்று. ஆண்மக்களுக்கு வீரம் திருமணத்திற்குரிய ஒரு தகுதியாகவும் கருதப்பட்டது. வில்லை முறிப்பவர்கள், குறிபார்த்து ஒன்றை வீழ்த்துபவர்கள், காளையை அடக்குபவர்கள், பகைவர் கொண்டு சென்ற பசுமாடுகளை மீட்டு வருபவர்கள் ஆகியோரை மணந்து கொள்ளப் பெண்கள் முன்வந்த நிகழ்ச்சிகள் பல உள்ளன. வீரம் இரண்டு வகைப்படும்.

    • புறத்தே வரும் பகையைத் தன் போர்த்திறனால் வெல்லுதல்.

    • அகத்தே தோன்றும் மன அசைவுகளை, ஆசைகளை, புலன் விருப்பங்களை அடக்கி ஆளுதல்.

    முதலாவது வீரத்தைவிட இரண்டாவது வீரம் பெருமைக்குரியதாக இருந்தது. புலன்களை வென்ற சமய முனிவர் மகாவீரர் என்று அழைக்கப்பட்டார். பழந்தமிழர் வீரப்பண்பாட்டில் குறிப்பிடத்தக்க கூறுகள் உண்டு. அவையாவன :

    • தனக்குச் சமமானவனோடு மட்டும் போரிடுதல்.

    • முதுகு காட்டுபவனைத் தாக்காமை.

    • மார்பில் வந்து தைத்த வேல் முதுகை ஊடுருவிப் போதல் மானக்கேடு என்று கருதுதல்.

    • போரில் மார்பில் புண்பட்டு இறப்பவரே வானஉலகம் செல்ல முடியும் என்ற நம்பிக்கை.

    யானையை அடக்கி வெல்லும் வீரம் ஆண்மகனுக்கு வேண்டுமெனக் கருதினர் பழந்தமிழர். மார்பில் தொண்ணூற்றாறு புண்களை ஒரு சோழ அரசன் பெற்றிருந்ததாக வரலாறு கூறுகின்றது. போர்க்களத்தில் வீரன் ஒருவன் கையிலே இருந்த வேலை ஓர் ஆண்யானையின்மீது செலுத்தினான். அடுத்தபடி வந்த யானையைத் தாக்க என் செய்வது என்று கருதியபோது அவன் உடலில் தைத்திருந்த வேல் நினைவுக்கு வரவே அதனைப் பறித்து மகிழ்ச்சியடைந்தான் என்று திருவள்ளுவர் கூறுகின்றார்.

    5.1.3 மானம்


    சேரன் வடக்கிருத்தல்

    தனது நிலையிலிருந்து ஒருவன் தாழ்வு அடையக்கூடாது. அப்படித் தாழ்வு அடைய வேண்டிய நிலை வருமானால் அவன் உயிர் வாழக்கூடாது. இதைத்தான் மானம் என்பர். காட்டிலே திரியும் கவரிமானைப் பாருங்கள். மயிரை இழந்தால் கவரிமான் இறந்துவிடும். மனிதனும் மானத்தை இழக்க வேண்டிய சூழலில் உயிரை விட்டுவிட வேண்டும் என்று கருதினர் தமிழர்.

    கரிகாலன் என்ற சோழ அரசனும், பெருஞ்சேரலாதன் என்ற சேர அரசனும் போரிட்டனர். கரிகாலனின் வேல் சேரனின் மார்பில் தைத்து ஊடுருவி முதுகுவழியே போயிற்று. மானம் போய்விட்டதாகக் கருதிய சேரன் வடக்கு நோக்கி உட்கார்ந்து உண்ணாநோன்பிருந்து உயிர் விட்டான். மானம் மிக்க அரசன் ஒருவன் வரலாறு இது. மானத்தைப் பிற்காலத்தில் தன்மானம், சுயமரியாதை என்றும் கூறினர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 21-07-2017 15:52:21(இந்திய நேரம்)