தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

5.0 பாட முன்னுரை

  • 5.0 பாட முன்னுரை

    இந்தியாவின் வடபகுதியில் வழங்கிய வேதங்களின் அடிப்படையான வாழ்க்கை நெறியைத் தழுவிய சமயம் வைதிக சமயம் எனப்பட்டது. இந்த வைதிக சமயத்திற்கு மறுப்பாக எழுந்தவை சமணம், பௌத்தம் எனும் இருபெரும் சமயங்களாகும். சமண சமயக் கொள்கைகளை உலகத்தில் பரப்பியவர் தீர்த்தங்கரர்கள் எனப்பட்டனர். இதுவரையில் தோன்றிய தீர்த்தங்கரர்கள் இருபத்து நால்வராவர். முதல் தீர்த்தங்கரர் விருஷபதேவர் என்றும் ஆதிநாதர் என்றும் வழங்கப்படுகிறார். இந்த விருஷபதேவரே ஆதிபகவன் என்றும் சிலர் கூறுவர். இருபத்து நான்காவது தீர்த்தங்கரர் மகாவீரர் ஆவார். தென்னாட்டில் சமண சமயம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் புகுந்ததாக அறிஞர்கள் கூறுகின்றனர். தமிழ்நாட்டில் சமண சமயத்தை விசாக முனிவர் என்பவரே பரப்பியதாகக் கூறுகின்றனர்.

    பௌத்த சமயம் கௌதம புத்தரால் உருவாக்கப் பெற்றது. அரச குலத்தில் பிறந்த சித்தார்த்தர் உலகத் துன்பங்களைக் கண்டு அவற்றிலிருந்து மனித குலம் விடுதலை பெறவேண்டுமென்று கருதினார். அதன்பொருட்டுத் தோற்றுவிக்கப் பெற்றதே பௌத்த சமயமாகும். தமிழகத்தில் பௌத்த சமயம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே புகுந்து விட்டதாக அறிஞர்கள் கூறுகின்றனர். இவ்விரண்டு சமயங்களைக் குறித்தும் அவை தமிழர்கள் பண்பாட்டில் விளைவித்த மாற்றங்கள் குறித்தும் இங்குக் காணலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:54:14(இந்திய நேரம்)