தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Diplamo Course - D03112

2.6 அடிகளில் அமையும் தொடை விளக்கம்

    செய்யுள் உறுப்புகளில் ஆறாவதாகக் கூறப்பெற்றுள்ள உறுப்பு தொடை. தொடுத்தல் என்னும் வினை அடியாகத் தொடை என்னும் செய்யுள் உறுப்புக் கூறப்பெறுகிறது. இனிய ஓசை நலம் ஒரு பாட்டுக்குச் சிறப்புச் செய்கிறது. எனவே, தொடையும் செய்யுள் உறுப்புகளில் ஒன்றாகப் பேசப்படுகிறது.

2.6.1 முதற்றொடைகள்

    ஒரு செய்யுளின் அடிகள் தோறும் காணப்படும் வெவ்வேறு ஓசை நயங்களை மோனை, எதுகை, இயைபு, முரண், அளபெடை என்பனவாகவும், இரட்டைத்தொடை, அந்தாதித்தொடை, செந்தொடை என்பனவாகவும் கூறுவர். இந்த எட்டும் முதல் தொடைகள் என்று சுட்டப்பெறும். இவை பற்றிய விளக்கங்கள் கீழே தரப்பெறுகின்றன.

  • மோனை

        ஒரு பாடலின் அடிகள் தோறும் முதல் எழுத்து ஒன்றி வருமாறு (ஒரே எழுத்தாக வரும் வகையில்) எழுதப்படுவதற்கு மோனை என்று பெயர். அடிமோனை என்பதும் உண்டு.

    சான்று :

        மாவும் புள்ளும் வதிவயிற் படர     மாநீர் விரிந்த பூவும் கூம்ப     மாலை தொடுத்த கோதை கமழ

    அடிகள் தோறும் மா முதல் எழுத்தாக வந்துள்ளது.

  • எதுகை

  •     ஒரு பாடலின் அடிகள்தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருமானால் அதற்கு எதுகை என்று பெயர். முதல் எழுத்து முதலடியில் எவ்வாறுள்ளதோ அதற்கேற்ப இரண்டாம் அடியிலும் குறிலாகவோ நெடிலாகவோ அமைய வேண்டும். இதற்கு அடி எதுகை எனப் பெயர்.

    சான்று :

    வேரல் வேலி வேர்க்கோட் பலவின் சாரல் நாட செவ்வியை ஆகுமதி யாரஃ தறிந்திசி னோரே.

    அடிதோறும் ர இரண்டாம் எழுத்தாக வந்துள்ளது.

  • இயைபு

  •     அடிதோறும் இறுதியில் ஒரே எழுத்தோ அசையோ, சீரோ ஒத்து வருமாயின் அதனை இயைபுத்தொடை என்பர்.

    சான்று :

    சூரல் பம்பிய சிறுகான் யாறே சூரர மகளிர் ஆரணங் கினரே வாரல் எனினே யானஞ் சுவலே சாரல் நாட நீவர லாறே

    எல்லா அடியும் ஏகாரத்தில் முடிந்துள்ளன.

  • முரண்

  •     ஒவ்வொரு அடியும் முரண்பட்ட சொல்லாலோ பொருளாலோ அமைந்திருப்பின் அடிமுரண் எனப் பெயர்.

    சான்று :

    இருளபரந் தன்ன மாநீர் மருங்கில் நிலவுகுவித் தன்ன வெண்மணல் ஒருசிறை இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை பொன்னின் அன்ன நுண்தாது உறைக்கும்

        இவ்வடிகளில் இருள், நிலவு ; இரும்பு, பொன் என முரண்பட்ட சொற்கள் அமைந்துள்ளமை நோக்குக.

  • அளபெடை

  •     அளபெடைத்தொடை என்பது பாடலின் எல்லா அடிகளிலும் முதற்கண் வரும் எழுத்துகள் அளபெழுந்து வருவதாகும்.

    சான்று :

    ஆஅ அளிய அலவன்தன் பார்ப்பி னோடு ஈஇ இரையும் கொண்டு ஈரளைப் பள்ளியுள் தூஉந் திரையலைப்பத் துஞ்சாது இறைவன் தோள்

  • அந்தாதித்தொடை

  •     பாடலின் ஓர் அடியின் இறுதியில் நிற்கும் எழுத்தோ சீரோ அசையோ அடுத்த அடியின் முதலாக வரின் (அந்தம் ஆதியாக வரின்) அந்தாதித் தொடையாகும் (அந்தம் = முடிபு ; ஆதி = தொடக்கம்).

    சான்று :

        உலகுடன் விளக்கும் ஒளிதிகழ் அவிர்மதி     மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை     முக்குடை நீழல் பொற்புடை ஆசனம்     ஆசனத்து இருந்த திருந்தொளி அறிவன்.

  • இரட்டைத்தொடை

  •     அடி முழுதும் வந்த சொல்லே வரின் இரட்டைத்தொடை எனப்படும். கடைசி எழுத்து மட்டும் குறைந்து வரலாம் என்பர்.

    சான்று :

        ஒக்குமே ஒக்குமே ஒக்குமே ஒக்கும்     விளக்கினிற் சீறெரி ஒக்குமே ஒக்கும்     குளக்கொட்டிப் பூவின் நிறம்.

  • செந்தொடை

  •     மோனை முதலாகிய தொடைகளோ, தொடை விகற்பங்களோ அமையாமல் வேறுபடத் தொடுப்பது செந்தொடை ஆகும்.

    சான்று :

        பூத்த வேங்கை வியன்சினை ஏறி     மயிலினம் அகவும் நாடன்     நன்னுதல் கொடிச்சி மனத்தகத் தோனே.

    மேற்கண்ட எட்டுத் தொடைகளும் முதற்றொடைகள் எனும் பெயரால் வழங்கப் பெறும். இவை தவிர, தொடை விகற்பங்கள் எனப்படும் சிலவும் உள்ளன.

    2.6.2 தொடை (விகற்பங்கள்) வேறுபாடுகள்

        முன்கண்ட முதல் தொடைகள் எட்டனுள் முதலில் இடம்பெற்ற மோனை, இயைபு, எதுகை, முரண், அளபெடை ஆகிய ஐந்தும் விகற்பங்கள் பெறக்கூடிய தொடைகளாகும். தொடை விகற்பங்கள் நான்கு சீர்கள் பெற்ற அளவடிகளில் மட்டும் இடம்பெறுவனவாகும். எனவே, இவற்றை முதற்றொடைகள் போலப் பாடலில் உள்ள அடிகள்தோறும் காண்பதற்குப் பதிலாக அடியில் உள்ள சீர்கள்தோறும் காணவேண்டும் என்பது நினைவிற் கொள்ளத் தக்கதாகும்.

    தொடை விகற்பங்களாவன :

    1. இணை     - அடியின் முதல் இரு சீர்களில் இடம்பெறும். 2. பொழிப்பு - முதற்சீரிலும் 3ஆம் சீரிலும் இடம்பெறும். 3. ஒரூஉ     - முதற்சீரிலும் 4ஆம் சீரிலும் இடம்பெறும். 4. கூழை     - முதல் மூன்று சீர்களிலும் இடம்பெறும். 5. மேற்கதுவாய் - 2ஆம் சீர் தவிரப் பிறவற்றில் இடம்பெறும். 6. கீழ்க்கதுவாய் - 3ஆம் சீர் தவிரப் பிறவற்றில் இடம்பெறும் 7. முற்று     - அடியின் நான்கு சீர்களிலும் இடம்பெறும்.

        ஐந்து முதற்றொடைகளும், இவ்வாறு ஏழு விகற்பங்கள் பெறும். ஆதலால் மொத்தத் தொடை விகற்பங்கள் (5x7=35) முப்பத்து ஐந்தாகும். முதற்றொடைகள் எட்டு என்பது முன்னரே கூறப்பட்டது. எனவே, தொடையும் தொடைவிகற்பங்களும் சேர்ந்து (8+35) = (43) நாற்பத்து மூன்றாகும்.

        கீழ்வரும் முறையில்தான் மோனை, எதுகை, முரண், அளபெடை ஆகிய நான்கு முதற்றொடைகளின் விகற்பங்களும் அமையும்.

    முதற்சீர்

    2ஆம் சீர்

    3ஆம் சீர்
    4ஆம் சீர்
    இணை
    பொழிப்பு
    ஒரூஉ
    கூழை
    மேற்கதுவாய்
    கீழ்க்கதுவாய்
    முற்று

    தொடை விகற்பத்தில் ... இயைபுத்தொடை மட்டும் சீர்களைக் கடைசியிலிருந்து எண்ணும் போக்கில் கீழ்க்காணுமாறு அமையும்.

    முதற்சீர்

    2ஆம் சீர்

    3ஆம் சீர்
    4ஆம் சீர்
    இணை
    பொழிப்பு
    ஒரூஉ
    கூழை
    மேற்கதுவாய்
    கீழ்க்கதுவாய்
    முற்று

    தொடை விகற்பத்தில் மோனை முதலாகிய முதற்றொடைகள் கீழ்வருமாறு பெயர் பெறும்:

        இணை மோனை, பொழிப்புமோனை, ஒரூஉமோனை, கூழை மோனை, மேற்கதுவாய் மோனை, கீழ்க்கதுவாய் மோனை, முற்றுமோனை என்பன போன்று பிற தொடைகளும் பெயர்பெறும்.

    எடுத்துக்காட்டாகத் தொடைவிகற்பங்களில் எதுகைக்கு உரிய விகற்பங்கள் எவ்வாறுவரும் என்பதைக் கீழ்க்காண்க.

    இணை எதுகை     - பொன்னின் அன்ன பொறிசுணங்கு ஏந்திப் பொழிப்பு எதுகை - பன்னரும் கோங்கின் நன்னலம் கவற்றி ஒரூஉ எதுகை     - மின்னவிர் ஒளிவடம் தாங்கி மன்னிய கூழை எதுகை     - நன்னிற மென்முலை மின்னிடை வருந்தி மேற்கதுவாய் எதுகை - என்னையும் இடுக்கண் துன்னுவித்து                  இன்னடை கீழ்க்கதுவாய் எதுகை - அன்ன மென்பெடை போலப் பன்மலர்க் முற்று எதுகை     - கன்னியம் புன்னை இன்னிழல் துன்னிய          மயிலேய்     சாயல்     அவ்வாணுதல்          அயில்வேல் உண்கண்     எம்மறிவு          தொலைத்தனவே

    ஏனைய தொடைவிகற்பங்களுக்கும்     இவை     போன்றுள்ள சான்றுகளை யாப்பருங்கலக்காரிகையின் எடுத்துக்காட்டுப் பாடல்கள் வழி அறியலாம்.

        தொடையும், தொடை விகற்பங்களும் (8 + 35 = 43) நாற்பத்து மூன்றாகும். இவை செய்யுளுக்கு ஒரு வகை இன்னோசை தந்து சுவை கூட்டுகின்றன.

    Tags   :

    புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 05:23:27(இந்திய நேரம்)