தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பாட முன்னுரை

  • 4.0 பாட முன்னுரை

    மனித நாகரிகத்தைப் பற்றியும், மனித இனத்தின் முற்கால வரலாற்றைப் பற்றியும் அறிய உதவும் சான்றாதாரங்கள் பல. வரலாற்றுக் காலத்தைப் பற்றி அறியக் கல்வெட்டுகள், இலக்கியங்கள், தொல்பொருள், சிற்பம், ஓவியம், கட்டடம், வெளி நாட்டவரது குறிப்புகள் எனப் பல்வேறு சான்றாதாரங்கள் கிடைக்கின்றன. ஆனால் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் பற்றி அறிய அகழ்வாய்வின் வாயிலாகவே சான்றாதாரங்கள் கிடைக்கின்றன. அக்கால மக்கள் விட்டுச் சென்ற பொருள்கள் மற்றும் அவர்கள், தாங்கள் வாழ்ந்த இடங்களில் உள்ள பாறைகளிலும், குகைகளிலும் வரைந்து வைத்துள்ள ஓவியங்கள் ஆகியவற்றின் வாயிலாகத்தான் அறிய இயலுகிறது.

    உலகின் பல நாடுகளில் இத்தகைய பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளன. உதாரணமாகப் பிரான்சு, ஸ்பெயின், இத்தாலி, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைக் கூறலாம். இந்நாடுகளில் கிடைத்துள்ள வரலாற்றுக்கு முற்பட்ட பாறை ஓவியங்களைப் போலவே இந்தியாவிலும் பல இடங்களில் இப்பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளன. முதல் முதலாக உலகில் பாறை ஓவியமானது ஸ்பெயின் நாட்டில் அல்டமிரா என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் இந்தியாவில் பிம்பெட்கா என்னுமிடத்திலும், தமிழகத்தில் முதன் முதலாக மல்லபாடி என்னும் இடத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை ஐம்பது இடங்களுக்கு மேல் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை அறிவதற்கு இத்தகு பாறை ஓவியங்கள் பெரிதும் பயன்படுகின்றன என்பதை அறிஞர்கள் இந்த ஓவியங்களை வைத்து நிறுவியுள்ளனர்.

    வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்பதற்கு எழுத்துகளைப் பயன்படுத்துவதற்கு முந்தைய காலம் என விளக்கம் தருவார் வரலாற்று அறிஞர் எச்.டி.சங்கலியா (H.D.Sankalia). மனித இனத்தின் தோற்றம், வளர்ச்சி முதலியவற்றைக் குறித்து அறிய வரலாற்று அறிஞர்கள் அம்மக்களின் படைப்புகளைக் கொண்டும், தொழில் நுட்ப அடிப்படையிலும் பல்வேறு கால வரைமுறைகளையும் வகுத்துள்ளனர். சுருக்கமாக மனித இன வரலாற்றை.

    (1). வரலாற்றுக்கு முற்பட்ட காலம்
    (2). வரலாற்றுக் காலம்

    எனப் பகுப்பர்.

    அக்காலக் கட்டங்களில் தமிழகத்தில் வாழ்ந்த மனித இனம், விட்டுச் சென்ற பாறை ஓவியங்களைப் பற்றியே இப்பகுதியில் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:52:55(இந்திய நேரம்)