Primary tabs
-
6.4 தொகுப்புரை
திறனாய்வு அணுகுமுறைகள், இலக்கியத்தைக் குறிப்பிட்ட முறையியல்கள் கொண்டு விளக்குவதற்கு உரியவை. இவற்றுள் ஒப்பியல் அணுகுமுறை, மொழியியல் அணுகுமுறை, சமுதாயவியல் அணுகுமுறை ஆகிய மூன்று அணுகுமுறைகளை இப்பாடத்தில் கண்டோம். ஒத்த தன்மைகளும் அதே நேரத்தில் வேறுபட்ட தன்மைகளும் கொண்ட ஒன்றற்கு மேற்பட்ட இலக்கியங்களை ஒப்பிடுகின்ற ஒப்பியல் திறனாய்வு, நாம் எடுத்துக் கொண்ட இலக்கியத்தின் தனிச்சிறப்புக்களையும் பண்புகளையும் தருகின்றது. இலக்கியங்களை இலக்கியங்களோடு மட்டுமன்றிப் பிற கலைகளோடும் இலக்கியத்தை ஒப்பிடலாம். முக்கியமாக கருத்தமைவுகள் கொண்டும் ஒப்பிடலாம். குறிப்பிட்ட ஒரு மொழியில் தோன்றிய இலக்கியத்தைப் பிறமொழி இலக்கியத்தோடு ஒப்பிடுதல் சிறப்பானது. ஒப்பிலக்கியம் என்பது இதனடிப்படையில் தனியொரு துறையாக வளர்ச்சி பெற்றுள்ளது. மொழியியல் திறனாய்வு என்பது, இலக்கியத்தில் அமைந்திருக்கிற மொழி அதன் பல்வேறு கூறுகளுடனும் பண்புகள் அல்லது செயல்பாடுகளுடனும் இலக்கியத்திற்கு எவ்வாறு அழகும் திறனும் சிறப்பும் தருகின்றது என்பதனை விளக்குகின்றது. ஒலிப்பின்னல், சொல் தேர்வு, சொல் வளம், வாக்கிய அமைப்பு முதலியவற்றில் நடையியல் கூறுகள் வெளிப்படுகின்றன. இவை பெரும்பாலும் உரைநடை இலக்கியத்தில் சிறப்புப் பெறுவதைவிடக் கவிதையிலேயே அதிகம் சிறப்புப் பெறுகின்றன. சமுதாயவியல் அணுகுமுறை, மிகவும் பழைமையானதும், விசாலமான தளம் கொண்டதும், பரந்துபடப் பலராலும் பயன்படுத்தப்பட்டு வருவதும் ஆகும். இலக்கியத்திற்கும் சமுதாயத்திற்கும் இடையேயுள்ள நெருக்கத்தை, அதன் இயங்கு திறனாய்க் கொண்டு, இந்த அணுகுமுறை அமைகிறது. சமூகச் சித்திரிப்புகள், சமூகப் பின்புலங்கள், தளங்கள், சமூக நிறுவனங்கள், சமூக மதிப்புக்கள், மாற்றங்கள் முதலியவற்றின் கோணங்களில் அல்லது பரிமாணங்களில் இவ் அணுகுமுறை வெளிப்படுகின்றது.
3)இன்றையத் தமிழ் இலக்கியத்தில், பெண்கள் எழுச்சி சித்திரிக்கப்படுகின்றன என்றால், தொடக்ககாலப் புனைகதைகளில் பெண்கள் பற்றிய எந்தப் பாடுபொருள் அதிகம் சித்திரிக்கப்பட்டது?
-