Primary tabs
-
1.2 புதினமும் சிறுகதையும்
இன்று மக்களால் அதிகம் விரும்பிப் படிக்கப்படும் இலக்கிய வகைகள் புதினமும் சிறுகதையும்தாம். இதழ்கள், இவ்விரண்டு வகைகளை மட்டும் நம்பி வெளிவந்த காலக் கட்டமும் உண்டு. இவ்விரண்டு வகைகளும் சில கருத்தோட்டங்களில் ஒத்தும், பல இடங்களில் வேறுபட்டும் காணப்படுகின்றன. எனவே இரண்டும் வேறு வேறு கலை வடிவங்கள் என்பது தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
நாவல் சிறுகதை என்ற இரண்டு வடிவங்களுமே மேலை நாட்டிலிருந்து தமிழுக்குக் கிடைத்த இலக்கியக் கொடைகளாகும்.
நாவல் சிறுகதை இரண்டுமே உரைநடை வடிவத்தைக் கொண்டவை.
இரண்டு வகைகளும் கதையை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றுள்ளன. அதனால் இரண்டையும் ஒன்றாக இணைத்துப் புனைகதை இலக்கியங்கள் என்று திறனாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
நாவல், சிறுகதை என்ற இரண்டும் ஏறத்தாழ ஒரே காலக் கட்டத்தில் தோன்றி ஒரு சேர வளர்ந்தவையாகும். தமிழ் மொழியைப் பொறுத்தவரை நாவல் 19ஆம் நூற்றாண்டு இறுதியிலும் சிறுகதை 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பிறந்தவைகளாகும்.
சிறுகதைக்கும் நாவலுக்கும் உள்ள வேறுபாட்டைச் சில உவமைகளாலும் சில விளக்கங்களாலும் திறனாய்வாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.
தனிமரம் போன்றது சிறுகதை. பலவகை மரங்களும் செழித்தோங்கிய ஒரு தோப்புப் போன்றது நாவல். ஒன்றிரண்டு வண்ணங்களால் வரைந்த ஓவியம் போன்றது சிறுகதை. பல வகை வண்ணங்களைக் கொண்டு வரைந்த மாபெரும் ஓவியம் போன்றது நாவல். ஒரு பறவை மட்டும் தனித்துப் பறப்பது போன்றது சிறுகதை. பல பறவைகள் கூட்டமாகச் சேர்ந்து பறப்பது போன்றது நாவல். சிறுகதையை அழகிய நறுமணம் மிக்க ஒற்றைப் பூவாகக் கொள்ளலாம். நாவலை நாரால் கோக்கப்பட்ட பூமாலைக்கு ஒப்பிடலாம்.
சிறுகதை ஒரு பண்பையோ, ஒரு செயலையோ, வாழ்க்கையின் ஒரு நிகழ்ச்சியையோ மையமாகக் கொண்டு அமையும். நாவல் பல பண்புகளையும், நிகழ்ச்சிகளையும் உள்ளடக்கியது.
வாழ்க்கையின் பல்வேறு வளர்ச்சி நிலைகளைக் காட்டுவது புதினம்; சிறுகதை வாழ்க்கையின் ஒரே ஒரு பரிமாணத்தை மட்டுமே காட்டி நிற்கும்.
நாவலில் கதை மாந்தர்களின் பண்புகள் படிப்படியாக வளர்ந்து செல்வதாகக் காட்டமுடியும். சிறுகதையில் அப்படிக் கூற இயலாது.
மொத்தத்தில் சிறுகதையின் அமைப்பும் போக்கும், நாவலின் அமைப்பும் போக்கும் வேறானவை ஆகும்.