தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Pudhinum I-5.3-புதினம் காட்டும் சமுதாயம்

  • 5.3 புதினம் காட்டும் சமுதாயம்

    படைப்பாளி தான் வாழும் சமூகத்தில் பெறும் அனுபவங்களைத் தன் படைப்புகளில் பிரதிபலிக்கின்றான். இதன் மூலம் அவன் காலச் சமூகப் பொருளாதாரச் சூழ்நிலை, வாழ்க்கைப் போக்கு இவற்றினை அறிந்து கொள்ள முடிகிறது. பொன்மலர் நாவலில் காணப்படும் சமுதாயத்தை இருவகைப் படுத்தலாம். அவை பின்வருமாறு:

    (1) பெண்மை நோக்கிய சமுதாயம்
    (2) பொருளாதாரம் நோக்கிய சமுதாயம்

    5.3.1 பெண்மை நோக்கிய சமுதாயம்

    இந்நாவலில் மானுடத்தின் ஒரு பிரிவான பெண் இனம் குறித்த பல செய்திகள் இடம் பெற்றுள்ளன. சமுதாயம் பெண்களைக் காணும் முறையையும், பெண்கள் சமுதாயத்தைக் காணும் முறையையும் அகிலன் தெளிவாக இந்நாவலில் உணர்த்தியுள்ளார்.

    மானுடத்தின் சக்தி எனப் போற்றப்படும் பெண்மை, இந்நாவலில் காணப்படும் சமுதாயத்தில் எங்ஙனம் சித்திரிக்கப்படுகிறது என்பதை இங்குக் காண்போம்.

    (1) பெண்மையின் மகத்துவம்
    (2) பெண்மையின் சீரழிவு
    (3) பெண்மை பற்றிய தவறான கண்ணோட்டம்

    என்ற மூன்று தலைப்புகள் வழியாக மானுடம் நோக்கிய சமுதாயம் இங்கு விளக்கப்படுகின்றது.

    பெண்மையின் மகத்துவம்

    இந்நாவலில் பல பெண் கதைமாந்தர்கள் இருப்பினும் உன்னதக் கதைமாந்தரான டாக்டர் சங்கரியின் வாயிலாக நாவலாசிரியர் பெண்மையின் மகத்துவத்தை உணர்த்துகிறார்.

    அவளை அன்பு, தயை, கடமை, மனவுறுதி, சுறுசுறுப்பு, பொறுப்புணர்ச்சி மிக்கவளாய்க் காட்டுகின்றார்.

    “அவளது ஆற்றலும் பொறுப்புணர்ச்சியும் சுறுசுறுப்பும் ஆஸ்பத்திரியின் தலைவிக்குத் தனியான பரிவைத் தேடிக் கொடுத்தன.”

    “அவசரமென்றால் டாக்டர் சங்கரிக்கு ஆஸ்பத்திரியிலிருந்து ஆள்தேடிவரும். முகம் சுளிக்காமல் போய்க் கவனித்து வருவாள்” என்ற வரிகள் தன்னலம் கருதாது பிறர் நலம் கருதும் அவளின் பண்பையும், பிற உயிர்கள் மீது அவளுக்கு உள்ள அக்கறையையும், அன்பையும் புலப்படுத்தும். சங்கரிக்கு அன்பு, தயை, கருணை போன்ற பண்புகள் காணப்பட்டாலும் நல்லவர்களுக்கு நல்லவளாயும், பொல்லாதவர்களுக்குப் பொல்லாதவளாயும் அவள் காணப்படுகிறாள்.

    தமக்கு எதிரான இழிவை ஏற்றுக் கொண்டு கசங்கி உதிரும் மென்மலராக இல்லாமல், எதையும் எதிர்த்துப் போராடும் வலிமை கொண்ட பொன்மலராகத் திகழும் பெண்மையை டாக்டர் சங்கரி உருவில் காண்கிறோம்.

    “காரியம் முடிந்தவுடன் கசக்கி எறிந்துவிடக் கூடிய கறிவேப்பிலைக் கொழுந்தாகத் தான் இதுவரையில் அவன் எந்த மனிதரையும் பயன்படுத்தியிருக்கிறான்; சங்கரியோ எடுத்த எடுப்பிலேயே அவனுக்குத் தாராளமாகக் கசப்பு மாத்திரைகளைக் கொடுத்து விட்டாள்” என்பதன் மூலம் இது தெளிவுறும்.

    பெண்மையின் சீரழிவு

    பெண்களைப் போகப் பொருளாகப் பயன்படுத்தும் சமுதாயத்தினையும் இந்நாவலில் காணமுடிகிறது.

    பெண்ணின் பெருமையை உணராது அவர்தம் வாழ்வைச் சீரழித்து இன்பம் காணுபவன் திருமூர்த்தி. இவனால் சீரழிக்கப்பட்டவள் குமுதா என்னும் அன்பும், ஆதரவும் அற்ற பெண்.

    வாழ்க்கையில் நம்பி ஏமாற்றப்பட்டுப் பின் நம்பி வந்தவனே தனக்கு எமனாக மாறும் நிலை கண்டு அஞ்சும் குமுதாவின் மனக்குமுறலை,

    “எனக்குச் சோறு வேண்டாம்; துணி வேண்டாம்; மாடி வீடு வேண்டாம் என் வயிற்றில் ஏதோ ஒன்று பிறந்தால் அதனிடமாவது நான் அன்பு செலுத்தி வளர்க்கலாம்” என்ற வரிகள் விளக்குகின்றன.

    குமுதாவின் உயிருக்கே உலை வைக்கக் கூடிய மருந்துகளைத் தன் கையாலேயே வாங்கிக் கொடுத்து அவள் வயிற்றுக்கருவை அழிக்க முயன்றான் திருமூர்த்தி. சங்கரியையும் இதில் பங்காளியாய் ஆக்கிக் கொள்ள எண்ணிப் பணத்தால் விலை பேசினான்.

    பெண்ணைக் கொண்டே, பெண்ணைக் கொலை செய்ய விலை பேசிப் பெண்மையை இழிவுபடுத்துகிறான் திருமூர்த்தி. மேற்கண்ட செய்திகள் சமூகத்தில் பெண்களுக்கு நேரும் பெரும் சீரழிவை உணர்த்துகின்றன.

    பெண்மை பற்றிய தவறான கண்ணோட்டம்

    திருமூர்த்தி பணத்தால் எதையும் சாதித்துவிடலாம் என்ற எண்ணம் கொண்டவன். குமுதா விஷயத்தில் அவள் வாழ்க்கையைச் சீரழித்ததோடு அல்லாமல், சங்கரியையும் பணத்தால் கவர எண்ணினான்.

    பெங்களூரில் நடக்கும் மாநாட்டிற்குச் சங்கரி செல்லப் போவதாகக் கூறியவுடன், திருமூர்த்தி தனது பங்களாவில் தங்க ஏற்பாடு செய்தான். அத்தோடு நில்லாமல் மறுநாள் தானும் அங்குச் சென்று தங்கினான்.

    மாநாடு முடிந்து ஊருக்குப் புறப்பட வேண்டிய நாள் அன்று கடைவீதிக்கு அவளை அழைத்துச் சென்றான். தான் வாங்கிய வைர வளையல்களை வலியச் சென்று தானே அவள் கையில் அணிவித்தான். அப்போது சங்கரி அவனைப் புரிந்து கொள்ள வேண்டி, “என்னையும் குமுதா போன்றவள் என நினைக்கக் கூடாது” என்றவுடன்,

    “இல்லை நான், நான், குமுதாவைப் போல் நடத்த மாட்டேன்... நீங்கள் விரும்பினால் உங்களை...”

    என்று கூறுவதில் இருந்து, ‘எந்தப் பெண்ணாய் இருந்தாலும் அவள் பணத்துக்கு மயங்கி விடுவாள்' என்ற அவனது தவறான நம்பிக்கை தெரிகிறது.

    இவ்வாறாக, பெண்களைச் சிக்கலுக்கு உள்ளாக்கி அவர்களை ஏமாற்ற முயலும் ஆண்களையும், அதற்குப் பலியாகாத பெண்களையும் பெண்மை நோக்கிய சமுதாயத்தில் காணமுடிகின்றது.

    5.3.2 பொருளாதாரம் நோக்கிய சமுதாயம்

    சமுதாயத்தில் கருப்புப் பணம், பதுக்கல், லஞ்சம், கலப்படம், கள்ளக் கடத்தல் என்னும் தீயவைகள் ஒழிந்தால்தான் நல்ல பொருளாதாரத்தை ஏற்படுத்த முடியும். நாவலில் சித்திரிக்கப்படும் சமுதாயம் தீயவை நிறைந்த பொருளாதார நிலை கொண்டது.

    கருப்புப்பணம், லஞ்சம், பதுக்கல்

    நாவலின் தொடக்கப் பகுதியிலேயே திருமூர்த்தி சங்கரியிடம் கொடுக்கும் ஆயிரம் ரூபாய் அவளைப் பொறுத்தவரையில் அது கள்ளப் பணம்தான். அதனைச் சங்கரியிடம் லஞ்சமாகக் கொடுக்கின்றான். அதனை சங்கரி, “லஞ்சம் வாங்கிய கள்ளப்பணம் ஆயிரம் ரூபாய்” என்றுதான் குறிப்பிடுகிறாள்.

    கணக்கில்லாமல் பணம் சேர்ப்பவர்கள் திருமூர்த்தியிடம் கொடுத்து வைக்கிறார்கள். “இவனிடம் கணக்கில்லாப் பணம் ஒரு கோடிக்கு மேல்” என்று கூறுவதிலிருந்து இவனின் கருப்புப் பணம், பதுக்கல் இவற்றினை அறியமுடிகிறது. மேலும் திருமூர்த்தியின் தங்கை ராஜேசுவரி தன் அண்ணனைப் பற்றிக் கூறும் போது,

    “அண்ணாவோடு பழகுகிறவர்களில் பதுக்கல்காரர்கள், கள்ளக்கடத்தல் பேர்வழிகள், திருட்டு வியாபாரம் செய்கிறவர்கள் எல்லாரும் உண்டு. அவர்களுக்கு இவர்தான் பாதுகாப்பாக இருக்கிறார், உதவி செய்கிறார்” என்று கூறுகிறாள்.

    இந்நாவலில் திருமூர்த்தி தன் கள்ளப் பணத்தைச் சங்கரிக்கு லஞ்சமாகக் கொடுக்கின்றான். வைர வளையல், மகிழ்வுந்து (கார்) என்று அவன் தன் பணத்தை விரயம் செய்கின்றான். மேலும் பணத்தினைப் பதுக்குகின்றவர்கள் திருமூர்த்தியிடம் கொடுத்து வைக்கின்றனர். அவன் அவற்றை மும்பையில் இருந்து கடத்தி வரப்படும் தங்கக் கட்டிகளாக மாற்றி அடுக்கி வைத்திருந்தான்.

    இவை பொருளாதாரத்தில் அடித்தள மக்கள் சீரழிவு அடையவும், வறுமைக்குத் தள்ளப்படவும் காரணமாய் அமையும்.

    கலப்படம், கள்ளக் கடத்தல்

    திருமூர்த்தியும், அவனது கூட்டாளிகளும் வாங்கியிருக்கும் சொத்துக்களில் பெரும்பான்மை கள்ளப்பணத்தால் வாங்கப்பட்டிருந்தன. தரக்குறைவான போலிப் பொருட்களின் உற்பத்தி சமுதாயத்தில் கலப்படப் பொருளின் ஆதிக்கத்தை ஏற்படுத்தும். இதைத் தான் திருமூர்த்தியும், அவனது கூட்டாளிகளும் செய்தனர்.

    “சமுதாயத்தில் வலுவிழந்து பாதுகாப்பு இல்லாமல் தவிக்கும் பெருங்கூட்டத்தினரான குடிமக்களை இவன் ஈவிரக்கம் இல்லாமல் உறிஞ்சி வளர்ந்திருக்கிறான். அவர்களைக் காப்பதற்காக உள்ள சட்டங்களை முறியடிப்பதற்கு இவன் எல்லா விதமான தந்திரங்களையும் கையாளத் தவறுவதில்லை. இவன் செலவு செய்து தேடும் செல்வாக்கு வளர்ந்து கொண்டு போவதே இவனுக்குப் பாதுகாப்பாக இருக்கிறது” என்று உளவுத்துறை அதிகாரியான திருஞானம் கூறுவதிலிருந்து இவனின் நிலையை அறியலாம். இதன்மூலம் சமுதாயத்தில் மேல்வர்க்கத்தினர் செய்யும் பதுக்கல் செயலால் பாதிக்கப்படப் போவது அடித்தட்டு மக்களே என்பதையும் பணக்காரர்கள் சட்டத்தை விலை பேசிவிடுகின்றனர் என்பதையும் அகிலன் உணர்த்துகிறார்.

    விளம்பரவாதிகள்

    மனிதன் புகழுக்கு மயங்குபவன். திருமூர்த்தியும் பணத்தைக் கொடுத்துப் புகழைத் தேடிக் கொண்டான்.

    இவன் விழாக்களும், விருந்துகளும் நடத்தி மிகப்பெரிய பதவிகளில் இருந்தவரோடு எல்லாம் படம் பிடித்துக் கொண்டு, அதைப் பத்திரிக்கையில் வெளியிட்டு மற்றவரைப் பயமுறுத்தியவன்; ஐயாயிரம் கொடுத்துவிட்டு ஐம்பதாயிரம் செலவு செய்து விளம்பரம் செய்பவன். அவன் தன்னைப் பெரிய மனிதன் என்று மக்களிடம் காட்டத் தானே செலவு செய்து விளம்பரத்தைத் தேடிக் கொண்டான்.

    சமுதாயச் சீரழிவு

    லஞ்சம், ஆடம்பரப் பொருள்களின் சேர்க்கை, பஞ்சமாபாதகம் என்று சொல்லப்படுகிற குடி, சூது, விபசாரம், திருட்டு, கொலை முதலியவை, ரகசிய விருந்துகள், ஆடம்பர விருந்துகள், செல்வாக்குத் தேட மறைமுக லஞ்சங்கள் இவையே திருமூர்த்தியின் செலவுகள். சமுதாயத்தில் எங்ஙனம் தீமைகள் ஆட்சி செய்கின்றன என்பதை இவனின் பாத்திரப்படைப்பு எடுத்துக் காட்டுகிறது.

    மேற்கண்ட இருநிலைகளில் அகிலன் தனது சமகாலச் சமுதாயத்தை படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:21:00(இந்திய நேரம்)