Primary tabs
4.1 சங்க காலத்தில் சமய மொழிபெயர்ப்புகள்
சங்க காலத்தில் தெய்வம் பற்றிய வடமொழிக் கதைகள், புராணச் செய்திகள் பழமரபுக் கதைகளாகவும் (legends), தொன்மங்களாகவும் (Myths) இடம் பெற்றுள்ளன.
சிவன் திரிபுரம் எரித்த தொன்மம் புறநானூறு, கலித்தொகை, பரிபாடல் ஆகியவற்றில் காணப்படுகின்றது.
சிவன் முப்புரம் எரித்த தொன்மமானது, வடமொழியில் வியாசர் எழுதிய மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள கர்ண பருவத்திலிருந்து புறநானூற்றில் தமிழ் வடிவம் பெற்றுள்ளது.
இராவணன்இராவணன் தன்னுடைய கைகளால் கைலாய மலையைப் பெயர்த்த தொன்மம் கலித்தொகையில் இடம்பெற்றுள்ளது. இது வான்மீகி வடமொழியில் எழுதிய இராமாயணத்தில் உத்தரகாண்டத்தில் காணப்படுகிறது.
நரசிம்ம அவதாரம்பரிபாடலில் நரசிம்ம அவதாரம் ‘நரமடங்கல்’ எனவும் பிரகலாதன் என்ற பெயர் ‘பிருங்கலாதன்’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை போன்று பல சான்றுகளைக் கூறலாம்.
பாலி, பிராகிருத மொழியில் இடம்பெற்றிருந்த பௌத்த, சமண சமயக் கருத்துகள், சங்க காலப் புலவர்களால், பெயர் சூட்டப்படாமல் தமிழாக்கப்பட்டுள்ளன. சங்க கால ஒளவையாரின் ‘நாடா கொன்றோ காடா கொன்றோ’ என்ற புறநானூற்றுப் பாடல், புத்தரின் தம்ம பதம் எனும் நூலிலுள்ள அருகதர் சருக்கத்தின் 98-ஆவது பாடலினை அடிப்படையாகக் கொண்டது.
சங்க காலத்தில் பிற மொழிகளில் காணப்பட்ட சமயக் கருத்துகள், தொன்மமாகவும், கருத்து நிலையிலும் தழுவி எழுதப்பட்டுள்ளன. எனினும் பிற மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட முழுமையான நூலினைக் கண்டறிய இயலவில்லை.
· சங்கம் மருவிய காலம்
சங்கம் மருவிய காலத்தில் எழுதப்பட்ட பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் சமணம், பௌத்தம், வைதிக சமயக் கருத்துகள் இடம் பெற்றமையினால் பிறமொழிச் சொற்களும் தமிழில் இடம்பெறலாயின. மேலும் மொழிபெயர்ப்பு நூல் என்று தனியாகக் கருதாமல், தமிழ்ப் படைப்புப் போலக் கருதுமளவு ஆசாரக் கோவை போன்ற நூல்கள் தழுவியெழுதப்பட்டன. சமயம் சார்ந்த அறநெறிக் கருத்துகளை வலியுறுத்தி எழுதப்பட்ட நூல்களால் பிறமொழித் தாக்கம் மிகுதியாக இருப்பதைக் காணலாம்.