தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Lesson 1 Main-சங்க இலக்கியம்-சங்கம் மருவிய கால நூல்கள்



  • பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களைச் சங்க இலக்கியம் என வழங்குவது மரபு.

    1.3.1 பத்துப்பாட்டு

    கி.மு. சில நூற்றாண்டுகள் தொடங்கி கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரையுள்ள காலம் சங்ககாலம் எனலாம். அக்காலத்தை அறிய நமக்குப் பெரிதும் துணையாய் இருப்பன அக்கால இலக்கியங்களாகக் கூறப்படுகின்ற பத்துப்பாட்டும் எட்டுத் தொகையுமாகும். இந்நூல்களைப் பாட்டும் தொகையும் என்று வழங்குவர். இப்பதினெட்டு நூல்களை மேல்கணக்கு நூல்கள் என்று வழங்கும் பழக்கமும் உண்டு. மேற்கூறிய சங்க இலக்கியங்களில் கிடைக்கப் பெறும் குறிப்புகளிலிருந்து தமிழ்நாட்டில் சமண சமயம் இருந்தது என்பதற்கான சுவடுகளை அறியமுடிகிறது.

    மதுரைக்காஞ்சி

    பத்துப்பாட்டில் மதுரைக்காஞ்சியும் ஒன்றாகும். மதுரை சமணர்களின் இருப்பிடமாக இருந்துள்ளது. மதுரையிலும் மதுரையைச் சூழ்ந்துள்ள   இடங்களிலும் கிடைத்துள்ள கல்வெட்டுகளும் சாசனங்களும் சிலைகளும் அவர்களின் இருப்பை உறுதி செய்கின்றன. மதுரைக் காஞ்சி என்ற சங்க இலக்கியமும் இவ்வுண்மையை அரண் செய்வது போல் சில குறிப்புகளைத் தருகின்றது.

    மதுரைமாநகரில் அந்தணர் பள்ளி, பௌத்தப் பள்ளிகளுடன் சமணப் பள்ளியும் இருந்தது என மதுரைக்காஞ்சி கூறுகிறது. அங்கிருந்த சமணர் கோயிலை அது அழகுற வருணிக்கிறது. அருகதேவன் கோயில் குளிர்ந்த தண்ணிழல் உடையது. அச்சுவர்களில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. அவை கண்பார்வைக்கும் எட்டாது மேலே உயர்ந்திருந்தன. அச்சுவர்கள் குன்று பல திரண்டுள்ளதைப் போலத் தோன்றுகின்றன. அக்கோயிலுள் பூவும் புகையும் ஏந்தி, சமணரில் விரதம் காக்கும்  இல்லறத்தாராகிய சாவகர் வணங்குகின்றனர்.  முக்காலங்களையும் உணர்ந்து உலகத்தார்க்குச் சொல்லுகின்ற ஆற்றலைப் பெற, சமண முனிவர் நோற்கின்றனர். என்னும் இக்குறிப்பைக் காட்டும் மதுரைக்காஞ்சியின் பாடல அடிகள் இதோ:

     

    வண்டுபடப் பழகிய தேனார் தோற்றத்துப்
    பூவும் புகையும் சாவகர் பழிச்சச்
    சென்ற காலமும் வரூஉம் அமயமும்
    இன்றிவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்குணர்ந்து
    வானமும் நிலனுள் தாமுழுதுணரும்
    சான்ற கொள்கைச் சாயா வாழ்க்கை
    ஆன்றடங் கறிஞர் செறிந்தனர் நோன்மார்     
    (அடிகள் : 475-482)
    ........................... .................
    .................... வயங்குடை நகரத்துச்
    செம்பியன் றன்ன செஞ்சுவர் புனைந்து
    நோக்குவிசை தவிர்ப்ப மேக்குயர்ந்தோங்கி
    இறும்பூது சான்ற நறும்பூஞ் சேக்கையும்
    குன்றுபல குழீஇப் பொலிவன தோன்ற
    (அடிகள் : 484-488)

    (பழிச்ச = வாழ்த்த, வரூஉம் = எதிர்காலம், அமயம் = சமயம்; காலம்; செம்பியன்றன்ன = செம்பால் செய்ததுபோல, புனைந்து = ஓவியம் தீட்டப்பெற்று, நோக்குவிசை = கண்பார்வை, இறும்பூது = வியப்பு)

    இவ்வடிகளின் பொருள் பின்வருமாறு:

    தேன் இருந்த அழகிய பூக்களோடே புகையினையும் பலியாக ஏந்திச் சாவக நோன்பிகள் அருகனை வாழ்த்தி நிற்கின்றனர். சென்ற காலத்தையும் எதிர்காலத்தையும் நிகழ்கால நிகழ்ச்சியோடு உணர்ந்தவர்கள்; வானகம் முதலிய உலகங்களின் இயல்பினையும் உணர்ந்து கொண்டவர்கள். தமக்கு அமைந்த விரதங்களையும் அவ்விரதங்களைத் தாங்கக் கூடிய உடலினையும் உடையவர்கள்; கல்வியெலாம் நிறைந்த அறிவினையும் உடையவர்களாகிய சான்றோர் நோன்பினை நோற்கின்றனர். குளிர்ச்சி உடைய அருகக் கடவுளின் திருக்கோயிலிடத்தே அமைந்த சுவர்கள் செம்பால் செய்ததைப்போல் இருந்தன. சுவர்களில் ஓவியம் தீட்டப்பட்டிருந்தன. அவை கண்பார்வைக்கு எட்டாத உயரத்தில் மேலே வியப்பூட்டும் வகையில் இருந்தன. அங்கு வாசனை பொருந்திய பூஞ்சோலைகளை உடைய அமணர்பள்ளியும் மலைகள் பலசேர நின்றது போன்று விளங்கின.’

    பட்டினப்பாலை

    பத்துப்பாட்டில் மற்றொரு நூல் பட்டினப்பாலை. உருத்திரங்கண்ணனார்  இயற்றிய பட்டினப்பாலையில் காவிரிப்பூம்பட்டினத்தின் அமைப்பும் அதன் சிறப்புகளும் விளக்கப்படுகின்றன. அங்குத் தவப்பள்ளி ஒன்று இருந்ததாக அதில் குறிப்பிடப்படுகிறது (53). அதுவும் நகர அமைப்பின் சிறப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தவப்பள்ளி என்பதற்கு அமண்பள்ளி, பௌத்தப்பள்ளி என்றே நச்சினார்க்கினியர் உரை எழுதுவார். பள்ளி என்பது சமணர்க்கு உரியது. பள்ளிச்சந்தம் என்று கல்வெட்டில் வரும் குறிப்பும் இதனை உறுதிப்படுத்தும். மணிமேகலையிலும் காவிரிப்பூம்பட்டினத்தில் கண் இத்தகு அமண்பள்ளிகள் இருந்தன என்று கூறப்படுகிறது. ஆதலால் இங்குக் குறிக்கப்படும் தவப்பள்ளி சமண முனிவர் தவமியற்றும் அமண்பள்ளியே என்பது பொருந்தும் எனலாம். சமணத்துறவிகளும் சமண இல்லறத்தாரும் (சாவகர்) சங்ககாலச் சமூகத்தில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருந்தனர் என்பதை அவை அழுத்தமாகக் கூறுகின்றன.

    1.3.2 எட்டுத்தொகை

    சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகை நூல்களில் இடம் பெறும் சில புலவர் பெருமக்களின் பெயர்களும், பாடல்களில் காணும் அகச்சான்றுகளும் அக்கால நிலையில் தமிழகத்தில் சமணம் வேரூன்றி இருந்த நிலையைக் காட்டுகின்றன.

    புலவர் பெயர்களில் சமணம்

    நிக்கண்டன் கலைக்கோட்டுத் தண்டனார், உலோச்சனார் போன்ற புலவர் பெருமக்கள் சமணர்கள் என்பதை அவர்களின் பெயர்களே எடுத்துக் காட்டுகின்றன. பற்றற்றவர் என்ற பொருள் தரும் நிக்கந்தர் என்ற சொல் சமணக் கடவுளைக் குறிக்கும் என்பதை முன்னரே பார்த்தோம். நிக்கந்தர் என்பதன் திரிபே நிக்கண்டன் கலைக்கோட்டுத் தண்டனார் என்ற பெயரின் முதல் சொல்லாகும். இப்புலவர் பாடிய பாடல் நற்றிணையில் காணப்படுகிறது. உலோச்சனார் என்பதும் சமணப் பெயரே ஆகும்.

    உலோச்சனார்

    சமண முனிவர்க்குரிய ஒழுக்கங்கள் ஏழில் ஒன்றான லோசம் என்பது மயிர்களைதல் என்பதாகும். சமணர் துறவு மேற்கொள்வதற்கு முன் தீட்சை பெறுவர். அப்போது தலைமுடியைக் கையினால் களைவது அவர்தம் நெறிமுறை. அதனைச் செய்யும்போது உண்ணாநோன்பிருந்து செய்வது அவர்தம் வழக்கம். இச்செயல் உடல்துன்பத்தைத் தாங்கும் ஆற்றலையும் மனத்திட்பத்தையும் காட்டுகிறது. அத்துடன் ஒருவர்க்கு உடல்மீதான பற்றின்மையைக் காட்டவும் மேற்கொள்ளப்படுகிறது.

    லோச்சு என்ற இச்சடங்கின் பெயர் உலோச்சு எனவாகி உலோச்சனார் என்று வழங்கப்பட்டிருக்கலாம். ஆதலின் இவர் சமணத் துறவி என்பது புலனாகிறது. இவர் பாடிய பாடல்கள் நற்றிணை, அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை ஆகிய எட்டுத்தொகை நூல்களில் இடம்பெற்றுள்ளன. உலோச்சனார் பாடிய பாடல்களில் பல நெய்தல் திணையைப் பற்றியதாக உள்ளன. பரதவர்களைப் பற்றிய செய்திகள் கூறப்படுவதால் இவர் பரதவராக இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.

    பாடல்களில் சமணம் குறித்த அகச்சான்றுகள்

    எட்டுத்தொகை நூல்களுள் காணும் சில சொல்லாட்சியும், சிந்தனைகளும் சமண சமயக் கொள்கைகளின் தாக்கம் தமிழர் வாழ்க்கையிலும் எண்ணத்திலும் பெரிதும் இருந்தது என்பதைக் காட்டுகின்றன.

     

    இந்திரர் என்னும் சொல்

    இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் இனிதெனத் தமியர் உண்டலும் இலர் என்பது புறநானூற்று வரி (182). இப்பாடலில் இந்திரர் என்று குறிக்கப் பட்டுள்ளது வைதிக சமயத்தில் குறிப்பிடும் இந்திரனாக இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் இந்திரன் அல்லது தேவேந்திரன் என்று ஒருமையில் குறிப்பிடும் வழக்கம்தான் வைதிக சமயத்தில் உண்டு. ஆனால் சமண சமயத்தில் இந்திரர் என்று பன்மையில் குறிப்பது வழக்கம். இந்திரர் எனப்படுவார் பலர் இருந்தனர் என்பது சமணர் நூல்களிலிருந்து புலனாகிறது. எனவே இந்திரர் என்று பன்மையில் கூறப்பட்டிருப்பதால் அக்காலநிலையில் சமண சமயமும் சமண சமயக் கருத்துகளும் பரவியிருந்தன எனக் கொள்ளலாம்.

     

    வினைக்கோட்பாடு

    இந்தியச் சமயங்களில் ஊழ்வினைக் கோட்பாடு சிறப்பான இடம் பெற்றுள்ளது. வினை விதைத்தவன் வினையை அனுபவித்தே ஆகவேண்டும்;  வினையானது அவ்வினை செய்தவனை அடைந்தே தீரும் என்பதில் சமண சமயத்திற்கு அழுத்தமான நம்பிக்கை ண்டு. பிற சமயச் சான்றோர் இறைவன் அருளால் வினையைப் போக்கிக் கொள்ளலாம் என்பர்; பிராயச்சித்தம், கழுவாய் ஆகியவற்றைச் செய்வதின் மூலமாகவும் வினைப் பயனில் இருந்து தப்பிக்க முடியும் என்பர். ஆனால் சமணமோ வினையின் பயனை ஒரு பிறவியில் மட்டுமன்றி வரும் பிறவிகள் தோறும் அனுபவித்தேயாக வேண்டும் என்று கூறுகிறது. இக்கொள்கை அகநானூற்றிலும் (369) கலித்தொகையிலும் (130) புறநானூற்றிலும் (192) இடம் பெற்றுள்ளது. புறநானூற்றுப் பாடலைச் சான்றாகக் காணலாம்.

     

    யாதும் ஊரே யாவரும்கேளிர்
    தீதும் நன்றும் பிறர்தர வாரா
    நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன
    சாதலும் புதுவதன்றே வாழ்தல்
    இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின்
    இன்னா தென்றலு மிலமே மின்னொடு
    வானம் தண்டுளி தலைஇ ஆனாது
    கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று
    நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
    முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
    காட்சியில் தெளிந்தனம் ........
    (புறநா:192)

    (முனிவின் = வெறுப்புற்றபோது, மின்னொடு = மின்னலொடு, தண்டுளி = மழை, கல்பொருது = கல்லைமோதி, மல்லல் = வளம், புணை = தெப்பம்)

    நமக்கு ஏற்படும் தீமையும் நன்மையும் நம்மால் உண்டாகுமே யல்லாமல் பிறரால் உண்டாகாது. துன்பம் உண்டாவதும், அது தீர்வதும் அதேபோல உண்டாவதாம். உலகில் பிறந்தவர் இறத்தல் என்பது புதியதன்று. வாழ்வதை இனிமையானது என்று எண்ணி மகிழ்ச்சியடைதலும் வெறுப்புற்றபோது உயிர் வாழ்தலைத் துன்பமுடையது என்று எண்ணி வருந்துதலும் இல்லை. இவ்வுலகில் பிறக்கின்ற உயிர், நீர் செல்கின்ற வழியாகவே செல்கின்ற தெப்பம் போல, ஊழ்வினை வழியாகவே செல்லும் என்பதைப் பெரியோரின் நூலறிவால் அறிந்தோம். ஆகவே எமக்கு எல்லா ஊர்களும் சொந்த ஊர்களே ஆகும். எல்லா மக்களும் எம் சுற்றத்தாரே ஆவர்.

     

    நிலையாமைக் கோட்பாடு

    சங்ககால மக்களின் வாழ்வியலில் நிலையாமைக் கருத்தும் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளது. ஆயினும் பிற்கால அறநூல்களில் இடம் பெற்றுள்ளதைப் போல அவை அழுத்தம் பெறவில்லை.

    மன்னன் வரையாது வழங்க வேண்டும் என்று கொடையை வற்புறுத்த நிலையாமைக் கருத்தைக் கைக்கொண்டனர். (புறநா 27, 189, 360 .....) வளர்பிறையும் தேய்பிறையும் மாறிமாறி வருவது நிலையாமையைக் காட்டுவதால் துன்பமுற்று வருவோர்க்குப் பொருளை வழங்க வேண்டும். உலக வாழ்க்கை நிலையற்றது; செல்வமும் நிலையாதது. பொருளைத் துய்க்க வேண்டுமென்று நினைத்துச் சேர்த்து வைத்தால், அதனை அனுபவிக்க முடியாமலும் போகலாம். ஆதலால் செல்வத்தின் பயன் கொடையே என்றனர்.

     

    வடக்கிருத்தல்

    வடக்கிருத்தல் என்பது தானாக விரும்பி உயிர்விடும் பழக்கமாகும். உண்ணா நோன்பிருந்து உயிர் விடுதலாகும். இதனைச் சமணர் சல்லேகனை என்பர். இது சமணர்க்கு உரிய கோட்பாடாகும். அவர்களுக்கே உரிய தனிக்கொள்கை. பேரிடையூறு, நீங்காநோய், மிகுந்த முதுமை போன்றவை வந்தபோது வடக்கிருந்து உயிர்விடலாம் என்பது வழிவழியாக வருகின்ற கோட்பாடு. இதைத் தற்கொலை என்று ஒருசாரார் கூறுவர். ஆனால் இது தற்கொலையன்று. பகைமை மறந்து, பற்றினை நீக்கி, மன ஒருமைப்பாட்டோடு தியானத்தில் ஆழ்ந்து உயிர்விடுதல் சல்லேகனை எனலாம். சங்க இலக்கியத்தில் வடக்கிருத்தல் பற்றிய குறிப்புகள் இடம்பெறுகின்றன.

    சேரமான் பெருஞ்சேரலாதனுக்கும், சோழன் கரிகால் வளவனுக்கும் போர் மூண்டது. போரில் தோற்ற சேரமான், மானம் பொறாது வடக்கிருந்து உயிர் நீத்தான். இச்செயலைக் கழாத்தலையார்,

     

    புறப்புண் நாணி மறத்தகை மன்னன்
    வாள் வடக் கிருந்தனன்
    (புறநா:65)

    என்று பாடுகின்றார். முதுகிலே புண் பெற்றதற்கு நாணமடைந்து வீரமிக்க வேந்தன் வடக்கிருந்து உயிர் விட்டான் என்பது இதன் பொருளாகும்.

    பாரி மன்னன் இறந்ததும் அவன் பிரிவைத் தாளாது செந்நாப்புலவனாகிய கபிலர் வடக்கிருந்த செய்தியும் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது.

    சங்கப் பாடல்கள் காட்டும் மேற்குறிப்புகளெல்லாம் சமணம் சங்க காலத்தில் இருந்தது என்பதையும் சமணக்கோட்பாடுகள் மக்களிடையே பரவியிருந்ததையும் சமண அறிஞர்கள் வாழ்ந்ததையும் எடுத்துக் காட்டுகின்றன.


     

    தன்மதிப்பீடு : வினாக்கள் - I

    1.
    உலகத் தோற்றம் பற்றித் தொல்காப்பியர் கருதுவது யாது?

    2.
    மதுரையில் சமணப்பள்ளி இருந்தது என்பதை எப்படி அறிய முடிகிறது?

    3.
    இந்திரர் என்னும் சொல் உணர்த்தும் செய்திகள் யாவை?

    4.

    நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம் - இவ்வடிகள் எதை உணர்த்துகின்றன?


    5.
    வடக்கிருத்தல் என்றால் என்ன?
புதுப்பிக்கபட்ட நாள் : 15-06-2018 16:13:25(இந்திய நேரம்)