தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

இலக்கிய வருணனைகள்

  • 4.5 இலக்கிய வருணனைகள்

    காப்பியங்களில் இடம் பெற வேண்டிய உத்தி வகைகளில் ஒன்று வருணனை என்று தண்டியலங்கார ஆசிரியர் தண்டியார் குறிப்பிடுகின்றார். மிகுராசு மாலைச் சிற்றிலக்கியத்தில் இத்தகைய வருணனைகள் இடம் பெற்றுள்ளன. இவற்றை நோக்கிய இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆய்வாளர்கள் மிகுராசு மாலையைக் குறுங்காப்பியம் எனக் கொள்கின்றனர். ஆதலால், மிகுராசு மாலையில் அமைந்துள்ள வருணனைகளில் இன்றியமையாத சிலவற்றைக் காண்போம்.

    4.5.1 நாடும் நகரமும்

    மிகுராசு மாலையின் நிகழிடம் அறபு நாடாகும். இந்நாடு பெருமணல் செறிந்த பாலை வன நாடாகும். இந்நாட்டை ஆலிப்புலவர் நீர்வளம், நிலவளம் மிக்க தமிழ் நாட்டைப் போல் நோக்குகின்றனர்.

    அறபு நாட்டில் எங்கு நோக்கினும் செந்நெல் விளையும் நிலம் நிறைந்துள்ளது. மாவும், கரும்பும், வாழையும் அடுத்தடுத்து விளைந்து கொழிக்கின்றன. மாங்கனி பழுத்துச்சிந்தும் சுவைமிக்க தேன், நீருடன் கலந்து கரும்பு விளையும் நிலத்தை அடைகிறது. கரும்பு, சுவைமிக்க அந்தத் தேனை உறிஞ்சிக் கணுக்கள் தோறும் முத்துகளைத் தேக்குகின்றது. கணுக்கள் தோறும் முத்து விளைந்து சிந்துகின்றன. இரு வரப்புகளுக்கு இடையிலுள்ள நீரோடையில் சிதறிய முத்துகள் தேன் போன்று சுவைமிகுந்த வாழை மரத்துடன் முகம் புதைத்துத் தலைசாய்த்து நிற்கும் செந்நெற் பயிரின் பாதங்களில் சேரும். இவ்வகையில் நாட்டுச் சிறப்பு வருணிக்கப் படுகின்றது.

    இவ்வகையில் நாட்டை வருணித்த புலவர், வாழையுடன் செந்நெல் முகம் புதைத்துத் தலைசாய்த்து நிற்கும் பாங்கை, குருவினிடம் பணிந்து நிற்கும் சீடனுக்கு ஒப்பாகவும் வருணிக்கின்றார். இத்தகைய மனம் கவரும் அழகிய வருணனையை,

    மாங்கனியின் செழுந்தேறன் மடைச்சாடி
         வயற்கரும்பின் வந்து பாய
    பூங்கரும்பின் கணுக்கள்தொறும் புதுத்தரளம்
         தனையீன்றுப் புளகித் தேகித்
    தேங்கதலி யுடனிகலிற் செவ்விமுகம்
         புதைத்து நிற்குஞ் செந்நெற் சீடர்
    பாங்கருடன் குருபாதம் பணிவதுபோல்
         தலைசாய்த்துப் பணியுந் தானே

    (செய். 42)

    (தேறல் = தேன்; தரளம் = முத்து; புளகித்து = இன்புற்று; ஏகி = சென்று; கதலி = வாழை; இகலில் = ஊடலில்; செவ்வி = அழகிய)

    எனவரும் செய்யுளில் காணலாம்.

    வளங்கொழிக்கும் நாடாக விளங்கிய அறபு நாட்டில் நடுநாயகமாக விளங்கும் நகரம் மக்கமா நகரம் ஆகும். இந்நகரத்தின் தெருக்களில் எல்லாம் ஊசலோசையும் குரவை ஓசையும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. ஒருசிறிது குங்குமம் கலந்த சந்தனத்தில் கடைந்த வடிவுடைய அரிவையர், அம்மானை ஆடும் ஓசை தெருவெங்கும் கடல் அலையின் ஓசையைப் போல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. (செய். - 32) இவ்வகையில் மிகுராசு மாலையில் நகர வருணனை காணக்கிடக்கிறது.

    4.5.2 புறாக் என்னும் மின்பரி

    நபிகள் நாயகம் விண்ணேற்றம் பெறுவதற்குப் பயன்பட்ட வாகனம் புறாக் என்னும் மின்பரியாகும். புறாக் என்பது அறபுமொழிச் சொல். அதன் நேரடிப் பொருள் மின் என்பதாகும். ஆதலால் இதனை மின்பரி என்றும் பொருள் கொள்ளலாம். மிகுராசு மாலையார் இதனை விண்பரி என்றும் வியன்பரி என்றும் குறிப்பிடுகின்றார்.

    புறாக், கோவேறு கழுதையைக் காட்டிலும் சற்றுக் குட்டையான வடிவம்; ஆனால் சாதாரணக் கழுதையைக் காட்டிலும் உயர்ந்த தோற்றம். எழில் மிக்க மனித முகம்; குறைபாடில்லாத வெண்மை நிறத்தில் அகன்ற நெற்றியும் பரந்த மார்பும் கொண்டது. இதனை,

    கழுதையின் உயர்கோவேறு கழுதையின் பணிந்த தோற்றம்
    வழுவகல் வெள்ளை வடிவது மனுவைப் போல
    பழுதகல் சென்னி உன்னிப் பைத்தலைப் போல நெஞ்சு
    (செய். - 58)

    எனக் குறிப்பிடுகின்றார்.

    புறாக்கிற்கு வால் இருந்தது; அது மாட்டின் வால் போல் நீண்ட வாலாகும். யானையின் கால்களைப்போல உறுதியான கனத்த கால்களும் கொண்டது. இதனுடைய செவிகள் மரகதத்தால் அமைந்தவை. ஜொலிக்கும் தாரகை போல் சுடர்விட்டுப் பிரகாசிக்கும் நீண்ட விழிகளும் கொண்டது. நவமணிகளால் அமைந்த நல்ல நெஞ்சும் கழுத்தும் கொண்டுள்ளது. மனிதர்கள் விடும் மூச்சினைப் போல அது மூச்சினை விட்டது.

    மேலும்,

    கருடனின் சிறகுகளைப் போல விரிந்து பரந்த இரு
    வெண்மையான
    சிறகுகளும் அதனில் முழுவதும் நவமணிப்பதிப்பும்

    (செய். - 68)

    கொண்டுள்ளது. இத்தகைய உன்னத எழில் மிக்க புறாக் வாகனத்திலேறி நபிகள் நாயகம் விண்ணுலகப் பயணத்தை மேற்கொண்டார். இவ்வகையில் மிகுராசு மாலையில் வருணனைகள் அமைந்துள்ளன.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-10-2017 13:28:28(இந்திய நேரம்)