தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

புனைகதை (fiction) இலக்கியங்கள்

  • 6.4 புனைகதை (Fiction) இலக்கியங்கள்

    மேற்கண்ட வெள்ளாட்டி மசலா, அப்பாஸ் கதை போன்றவை அறபு, பாரசீக மொழிகளிலிருந்து வந்தவை. தமிழில் புனைகதை இலக்கியம் தோன்றி வளர்ந்த வளர்ச்சியில் இஸ்லாமிய எழுத்தாளர் பலரும் பங்கு செலுத்தி வருகின்றனர்.

    6.4.1 சிறுகதை

    தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் வளர்ச்சிக்கு இசுலாமியச் சிறுகதை எழுத்தாளர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.

    மஹதி, ஜேஎம், ஜே.எம். சாலி, கருணாமணாளன், ஜியாவுடீன் ஆகியோர் மிகச் சிறந்த சிறுகதைகளை எழுதியுள்ளனர்.

    • மஹதி

    எழுத்துப் பணியை 1930ஆம் ஆண்டு தொடங்கியவர் மஹதி ஆவார். இவர் மதுரையைச் சேர்ந்தவர். இயற்பெயர் எஸ். சையத் அஹமத் என்பதாகும். புதுக்கவிதை உலகில் கவிக்கோவாகத் திகழும் முனைவர் அப்துல் ரகுமானின் தந்தை ஆவார்.

    1957ஆம் ஆண்டு இவருடைய இமயத்தின் சிரிப்பு என்னும் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது. இத்தொகுப்பில் பதினைந்து சிறுகதைகள் அடங்கியுள்ளன. இவற்றில் ஐந்து சிறுகதைகள் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டவை. ஏழு சிறுகதைகள் முஸ்லிம்களின் வாழ்வியலைச் சுட்டுவதாகவும், மூன்று சிறுகதைகள் பொதுநிலையிலும் அமைந்துள்ளன. மேலும் மாவீரர் கான்சாகிப், முதல் சுதந்திர வீரன் குஞ்சாலி மரக்காயர் ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.

    • ஜேஎம்

    திருவாரூர் மாவட்டம் இரவாஞ்சேரி என்னும் சிற்றூரில் பிறந்தவர் ஜேஎம் ஆவார். இயற்பெயர் ஜே.எம். ஹுசைன். பொதுவாக, இஸ்லாமியச் சமுதாயச் சீர்கேட்டைப் பற்றி எழுதியுள்ளார். இவருடைய பத்துச் சிறுகதைகளைக் கொண்ட இஸ்லாமியச் சிறுகதைகள் என்னும் நூல் 1960இல் வெளிவந்தது. இவருடைய தம்பி இன்னொரு சிறந்த சிறுகதை எழுத்தாளராகிய ஜே. எம். சாலி ஆவார்.

    • ஜே.எம். சாலி

    ஜே.எம். சாலி ஆனந்த விகடன் இதழில் நீண்ட காலம் துணையாசிரியராகப் பணியாற்றினார். சிங்கப்பூர் தமிழ்முரசு இதழில் உதவி ஆசிரியராகவும், தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியராகவும் இருந்து வருகிறார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். இவருடைய கதைகளில் குர்ஆன், ஹதீஸ் நுட்பங்களைக் காண முடிகிறது. ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களை அளித்துள்ளார். இவருடைய கனாக்கண்டேன் தோழி என்னும் நூல் தமிழக அரசின் பரிசும், நோன்பு என்னும் சிறுகதை சிங்கப்பூர் அரசின் சிறப்பு விருதும் பெற்றுள்ளன.

    • கருணாமணாளன்

    இஸ்லாமியத் தமிழ் இதழ்களிலும், தினமணி கதிர், குமுதம் போன்ற இதழ்களிலும் ஐந்நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை வழங்கி இருப்பவர் கருணாமணாளன் ஆவார். இயற்பெயர் அப்துல் ரவூப். 1934இல் ஆழ்வார் திருநகரியில் பிறந்தவர். நாவுகள் முதலிய சிறுகதைத் தொகுப்புகள் பல வெளிவந்துள்ளன.

    • ஜியாவுடீன்

    மதுரையில் 1937இல் பிறந்தவர் ஆவார். வனத்துறை சரக அலுவலராகப் பணியாற்றினார். இவருடைய முதற்சிறுகதை ஆட்டம் ஓய்ந்தது. இது 1957இல் வெளிவந்தது. இருநூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். வனவாழ்வை மிகுதியாகச் சித்திரித்துள்ளார். மனச்சுளுக்கு, மனிதாபிமானி, பெருநாள் பிறை ஆகிய மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.

    6.4.2 புதினம்

    தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தை வளப்படுத்தியது போல, தமிழ்ப் புதின இலக்கியத்தையும் வளப்படுத்திய பெருமை இசுலாமியப் புதின எழுத்தாளர்களுக்கு உண்டு. அவர்களுள், ஹசன் என்னும் செய்யது முஹம்மது, தோப்பில் முகமது மீரான் போன்றோர் குறிப்பிடத்தக்க சிறந்த புதினப் படைப்பாளர்கள்.

    • மு. செய்யது முஹம்மது (ஹசன்)

    செய்யது முஹம்மது ஹசன் 1918ஆம் ஆண்டு நாகப்பட்டினத்தில் பிறந்தார். ஹசன் என்ற பெயரில் வரலாற்று நாவல்களை எழுதியுள்ளார். சிந்து நதிக்கரையினிலே, மேற்கு வானம், மஹ்ஜபீன், புனித பூமியிலே ஆகிய நான்கு வரலாற்று நாவல்களைப் படைத்துள்ளார். மில்லத் பப்ளிகேஷன்ஸ் என்னும் நிறுவனத்தை நிறுவி இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்து வெளியிடும் பணியும் ஆற்றி வருகிறார். சீறாப்புராணம், சின்ன சீறா, ஆயிர மசலா, திருமணி மாலை, கனகாபிசேக மாலை முதலான இலக்கியங்களைப் பதிப்பித்துள்ளார்

    • தோப்பில் முகம்மது மீரான்

    குமரி மாவட்டத்திலுள்ள தேங்காய்ப் பட்டினத்தில் 1950இல் பிறந்தவர். இளங்கலைப் பட்டதாரி. ஒரு கடலோரக் கிராமத்தின் கதை, துறைமுகம், கூனன் தோப்பு, நாற்காலி முதலான புதினங்களும் அன்புக்கு முதுமை இல்லை என்ற சிறுகதைத் தொகுப்பும் வெளி வந்துள்ளன. இவருடைய நாற்காலி என்னும் நவீனம் சாகித்ய அகாதமி பரிசு பெற்றது. குமரி மாவட்டத்து நடையில், கீழ்நிலை மக்களின் வாழ்க்கைச் சிக்கல்களைக் கலை நேர்த்தியுடன் தீட்டுவதில் இவர் சிறந்தவர்

    தமிழிலுள்ள சமூக அங்கத எழுத்தாளர்களுள் இவரும் ஒருவர். சமூகச் சீர்திருத்தக் கருத்துகளைத் தம் புதினங்களில் மையக் கருத்துகளாகக் கொண்டு எழுதியுள்ளார்.

    • பிற புதின ஆசிரியர்கள்

    சிறுகதைகள் பலவற்றைப் படைத்த ஜே.எம். சாலி, முள்ளும் மலரும், வெள்ளைக் கோடுகள், பணவிலங்கு, ஆயுள் தண்டனை ஆகிய புதினங்களையும் எழுதியுள்ளார். அதைப்போல சிறுகதை எழுத்தாளரான கருணாமணாளன், மும்தாஜ், அகத்தினா, மாமியார் ஆகிய புதினங்களையும் படைத்துள்ளார்

புதுப்பிக்கபட்ட நாள் : 06-10-2017 11:03:29(இந்திய நேரம்)