தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05113l2-3.2 கல்வெட்டுச் சான்றுகள்

3.2 கல்வெட்டுச் சான்றுகள்

    பழங்காலத்தில் அரசரின் ஆணைகளை அனைவரும் தெரிந்து
கொள்ளும் வண்ணம் பாறைகளில் செதுக்கிப் பதிவு செய்யும்
வழக்கம் இருந்தது. கற்களில் உளி கொண்டு வெட்டிப் பதிதல்,
‘கல்வெட்டு’ என்றானது. தமிழ்மொழி வரலாறு அறிய
இன்றியமையாதவை கல்வெட்டுகள். கல்லில் செதுக்கப்பட்டதால்
அடித்தல், திருத்தல், மாற்றி எழுதுதல், அழித்தல், புதிதாக
ஒன்றைச் சேர்த்து எழுதுதல் என்பவற்றுக்கு எல்லாம் இங்கு
இடமே இல்லை. என்று எப்படி எழுதப்பட்டதோ, அதே
நிலையில், சிறிதும் மாற்றமின்றி     இன்றும் கிடைப்பது
கல்வெட்டுகளின் தனிச்சிறப்பு ஆகும்.


    தமிழ்க் கல்வெட்டுகளில் கி.பி. மூன்றாம் நூற்றாண்டைச்
சார்ந்த பிராமி கல்வெட்டுகள் மிகப் பழமையானவை. இவை
குகைகளில் கண்டெடுக்கப்பட்டு்ள்ளன. பஞ்சபாண்டவர் மலை,
மறுகால்தலை,     திருப்பரங்குன்றம்,     கழுகுமலை,
சித்தன்னவாசல்
ஆகிய இடங்களில் இக் கல்வெட்டுகளைக்
காணலாம். பிராமி எழுத்துகளில் எழுதப்பட்டுள்ளதால் இவை
‘பிராமி கல்வெட்டுகள்’ என்று வழங்கப்படுகின்றன. ‘குகைக்
கல்வெட்டுகள்’ என்றும் அழைப்பர்.

    கீழவளவு, ஆனைமலை, அழகர் மலை, மேட்டுப்பட்டி,
முத்துப்பட்டி, திருவாதவூர், விக்கிரமங்கலம், மாங்குளம்,
கருங்காலக்குடி, புகழூர், அரசலூர், மாமண்டூர்
என்று பல
இடங்களில் பிராமி கல்வெட்டுகள் உள்ளன.

    கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் அசோகர். அவர்
காலத்துச் சமண, பௌத்த சமயங்கள் தென்னிந்தியாவில் பரவின.
சமண, பௌத்த சமய நூல்கள் பிராகிருதம், பாலி மொழிகளில்
இருந்தன. அவற்றின் எழுத்துகள் பிராமி வடிவில் இருந்தன.
தமிழகத்தில் சமண, பௌத்தத் துறவிகள் குகைகளில் வாழ்ந்தனர்.
குகைகளில் உள்ள கல்வெட்டுகள் அத்துறவிகள் பொறித்தவை.
எழுத்து பிராமி; மொழி தமிழ் என்பர். ஐராவதம் மகாதேவன்,
கே.வி. சுப்பிரமணியம், நாகசாமி போன்றோர், இவை ‘தமிழ்
எழுத்துகள்’ என்கின்றனர். பொருள் கொள்வதிலும் பல
விளக்கங்கள் உள்ளன. சான்றுக்கு ஒரே ஒரு குகைக் கல்வெட்டு
வருமாறு:

அரிட்டாபட்டிக் கல்வெட்டு,

கணி இ ந தா ஸீரியகுல
வெள் அறைய் நிகமது
காவி தி இய் காழி திக அந்தைஅ
ஸதன் பிணாஊ கொடுபி தோன்

இதை மயிலை. சீனி. வேங்கடசாமி,

கணி நந்தாஸிரியற்கு
வெள்ளறை நிகமத்து
காவிதி காழிதி ஆந்தைய
ஸீதன் பிணாவு கொடுபித்தான்

என்று பிரித்து, ‘வெள்ளறை அங்காடித் தெருவில் வசிக்கிற
காழிதி ஆத்தனுடைய மகன் கணி நந்தாசிரியற்கு ‘பிணாவு’
கொடுப்பித்தான்’ என்று பொருள் கூறுகிறார். ‘பிணா அல்லது
பிணவு’ என்பதற்கு, பின்னப்பட்டது, முடையப்பட்டது, சாமரை,
கற்படுகை’ என்று விளக்கம் தருகின்றனர். இருபத்தொரு
இடங்களில்     எழுபத்தொரு     கல்வெட்டுகள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பொருள் கொள்வதில் வேறுபாடு
இருந்தாலும், இவை பழந்தமிழுக்குச் சான்றாகத் திகழ்கின்றன.


    சோழர் காலத் தமிழை அறியக் கல்வெட்டுகள் பேருதவி
செய்கின்றன. முதலாம்     இராசேந்திரனின் மால்பாடிக்
கல்வெட்டுகள்
, தஞ்சைப் பெரிய கோயில் மதிற்சுவர்களில்
பொறிக்கப்பட்ட     கல்வெட்டுகள்,     வீரராசேந்திரனின்
திருமுக்கூடல் கல்வெட்டுகள்
. மூன்றாம் இராசேந்திரனின்
திருவேதிபுரம் கல்வெட்டுகள்
என்று ஆயிரக்கணக்கில்
கல்வெட்டுகள் கிடைக்கின்றன. ‘வடசொற்களை எழுதினால்,
வடமொழி எழுத்துகளை அகற்றிவிட்டு, தமிழ் எழுத்துகளால்
தமிழ் மொழி மரபுப்படி எழுத வேண்டும்’ என்ற இலக்கண
வரையறையை நன்னூலில் காணலாம். ‘பதவியல்’ என்று ஓர்
இயலே அந்நூலில் உள்ளது. சோழர் காலக் கல்வெட்டுகளில்
வடமொழிச் சொற்கள் தமிழாக்கம் செய்யப் பட்டிருத்தலைக்
காணலாம்.

வடசொற்கள்
- கல்வெட்டுச் சொற்கள்
ஏகபோகம்
- ஒரு பூ
தாம்பூலம்
- சுருளமுது
கர்ப்பக்கிரகம்
- உட்கோயில், அகநாழிகை
பரிவர்த்தனை
- தலைமாறு
பரிவட்டம்
- சாத்துக்கூறை
நைவேத்யம்
- அமுதுபடி
அவிர்பலி
- தீயெறிசோறு
கும்பாபிஷேகம்
- கலசமாட்டுதல்

  • மெய்க்கீர்த்திகள்

  •     மன்னன் இராஜராஜன் வெற்றிகளை எல்லாம் கல்வெட்டுகளில்
    குறிப்பிட்டு, ‘மெய்க்கீர்த்தி’ என்று வெற்றிச் சிறப்பைப் பதியும்
    முறைக்கு வித்திட்டான். இம் மெய்க்கீர்த்திகளின் தொடக்கத்தை
    வைத்தே யார் காலத்தவை என்று கூறுமளவிற்கு மொழி
    அமைப்புக் காணப்படுகிறது.

    அரசன் பெயர்
    மெய்க்கீர்த்தி -
    தொடக்கம்
    1)
    முதலாம் இராஜராஜன்
    காந்தளூர்ச்சாலை
    கலமறுத்தருளி
    2)
    முதலாம் இராஜேந்திரன்
    திருமன்னி வளர
    இருநிலமடந்தையும்
    3)
    இராஜாதிராஜன்
    திங்களேர் தருதன்
    தொங்கல்
    4)
    இரண்டாம் இராஜேந்திரன்
    திருமாது புவியெனும்
    5)
    வீரராசேந்திரன்
    வீரமே துணையா
    6)
    அதிராசேந்திரன்
    திங்களேர் மலர்ந்தது
    வெண்குடை
    7)
    முதலாம் குலோத்துங்கன்
    திருமன்னி விளங்கு
    8)
    விக்கிரம சோழன்
    பூமாது புணர
    9)
    இரண்டாம் குலோத்துங்கன்
    பூமன்னு பதுமம்

    இவ்வாறு தெளிவான மொழி அமைப்பைக் காணலாம்.
    உறுதி மிக்க சான்றாகக் கல்வெட்டுகள் விளங்குகின்றன.


        பிறமொழியில் உள்ள கல்வெட்டுகள் கூடத் தமிழ்மொழி
    வரலாறு அறியத் துணை புரிகின்றன என்றால் வியப்பாக
    இருக்கிறது அல்லவா? உண்மைதான். சிங்கள மொழியில் உள்ள
    கல்வெட்டில் தமிழ்ச் சொற்கள் உள்ளன. தமிழக இடப்பெயர்கள்
    இடம் பெற்றுள்ளன. அதுபோலவே அசோக மன்னன் வெட்டிய
    கல்வெட்டுகளில், சோழர், பாண்டியர் தொடர்பான தமிழ்ச்
    சொற்கள் இடம் பெற்றுள்ளன. அவ் வகையில் தமிழக மன்னர்கள்
    குறித்து வடநாட்டு மன்னர்கள் அறிந்திருந்தனர். தமிழகத்தில்
    மட்டுமன்றித் தமிழ் பேசுவோர் பிற பகுதிகளிலும் சென்று பழகும்
    இயல்பினராக இருந்தனர் என்பதை இதிலிருந்து அறியலாம்.


        தமிழ்மொழி வரலாறு அறியச் செப்பேடுகளும் துணை
    புரிகின்றன. செம்பினால் ஆன தகட்டில் பொறிக்கப்படும்
    எழுத்துகள் செப்பேடுகள் ஆகும். இவை, சாசனங்கள் என்றும்
    சொல்லப் பெறும். சின்னமனூர், கூரம், பாகூர் ஆகிய
    இடங்களில் செப்பேடுகள் கிடைத்துள்ளன. எழுத்துகளின்
    வரிவடிவம், எழுதப்படும் முறை பற்றி அறிந்து கொள்ளலாம்
    அல்லவா? சான்றாக,

    செப்பேடுகள்
  • கல்வெட்டுகளில் நீண்ட கோடு நெட்டுயிரையும் குறுகிய
    கோடு குற்றுயிரையும் குறிக்கின்றன. நெடில், குறில்
    வேறுபாடு இல்லை
  • மெய்யைக் குறிக்கப் புள்ளி பயன்படுத்தப் படவில்லை.

    என்று குகைக் கல்வெட்டுகள் பற்றிக் கூறலாம். உடம்படுமெய்
    இல்லாமல் உயிரெழுத்துகள் தொடர்ந்து எழுதப்படும் முறை
    பின்பற்றப்பட்டுள்ளது.

    சான்று :

    கோ இலுக்கு
    - (கோயிலுக்கு)
    ஆஇரம்
    - (ஆயிரம்)
    கைஇல்
    - (கையில்)

    என்றே அமைந்துள்ளது என்றும் அறிய முடிகிறது. அல்லவா?

        (‘ய்’ என்பது உடம்படுமெய். இது இல்லாமல்
    எழுதப்பட்டுள்ளது)

  • அகழ்வாய்வுச் சான்று

  •     அகழ்வாய்வில் கிடைக்கும் சான்றுகள் கூடத் தமிழ் மொழி
    வரலாற்றை அறியப் பயன்படுகின்றன. அரிக்கமேடு என்னும்
    இடத்தில் செய்யப்பட்ட அகழ்வாய்வில் அகல் விளக்கு ஒன்று
    கிடைத்தது. அதில் பொறிக்கப்பட்ட எழுத்துகள் வருமாறு:

    அகல் விளக்கு

    முதிகு ழுர அன் அகல்

    இதில் முதுகுழுரன் என்பது ஒருவரது பெயர். அகல் என்பது
    அகல் விளக்கு. முதுகுழூரன் என்பவருடைய அகல் என்று
    பொருள் கூறுகின்றனர்.

    முதிகுழூரன் என்பது முதிகுழுர அன்

    என்று எழுதப்பட்டுள்ளது என்பர். கல்வெட்டுகளில் அதை
    எழுதியவரது நடை இருக்கலாம். சாசனங்களில் செல்வாக்குடன்
    விளங்கிய மொழிநடை இருக்கலாம். மேலும் அக்காலத்திய பேச்சு
    நடையில் பயின்று வந்த பிறமொழிச் சொற்கள் கல்வெட்டுகளிலும்

    காணப்படுகின்றன. அச்சொற்கள் கல்வெட்டுகள்
    பொறிக்கப்பட்ட காலத்தில் வழங்கப்பட்டவை
    என்று மதிப்பிடுவது கடினம் என்பார்
    தெ. பொ. மீனாட்சி சுந்தரனார்.


    1.
    மொழி வரலாறு என்றால் என்ன?
    2.
    தமிழ்மொழி வரலாற்றை அறியத் துணை புரியும்
    சான்றுகள் யாவை?
    3.
    குகைக் கல்வெட்டுகள் காணப்படும் இடங்களில்
    இரண்டனை எழுதுக.
    4.
    சோழர் கல்வெட்டுகளில் வடசொற்கள் எங்ஙனம்
    எழுதப்பட்டுள்ளன?
    5.
    மெய்க்கீர்த்தி என்றால் என்ன? முதலில் இதனைத்
    தொடங்கி வைத்தவர் யார்?

    Tags   :

    புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 04:46:57(இந்திய நேரம்)