தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

2-மெய்ப்பொருள் நாயனார் புராணம்

2.5. மெய்ப்பொருள் நாயனார் புராணம்

நண்பர்களே! இதுவரையும் இரண்டு பாடங்களில் பெரியபுராணம் பற்றிய பொதுவான செய்திகளை அறிந்து கொண்டோம். காப்பியத்தைப் பற்றிய அறிமுகச் செய்திகளையும் கவிதை நயம் பற்றிய செய்திகளையும் அறிந்தோம். இனிப் பெரியபுராணத்தில் உள்ள அறுபத்து மூன்று அடியார்களில் ஒருவர் பற்றிய புராண வரலாற்றை அறிய இருக்கிறோம்.

மெய்ப்பொருள் நாயனார் திருக்கோவலூரில் வாழ்ந்த மன்னர் ஆவார். அடியார்கள் திருநீறு பூசி, உருத்திராட்ச மாலை அணிந்து காட்சி தரும் திருவேடத்தையே மெய்ப்பொருள் (உண்மைக் காட்சி / உண்மைப் பொருள்) எனக் கொண்டவர். இதனால் மெய்ப்பொருள் நாயனார் என்று அழைக்கப்பட்டார். இவர் மலையமான் குலத்தில் தோன்றியவர். பகைவர்களை வென்று நாட்டுக்கு நன்மை செய்பவர். சிவன் அடியார்களின் கருத்து அறிந்து பணி செய்பவர். தமது செல்வம் எல்லாம் சிவனடியார் செல்வமே என்று கருதுபவர்.சிவன் கோயில்களில் பூசை, விழா முதலியவற்றை இடைவிடாமல் செய்து இறைவழிபாட்டில் ஈடுபட்டவர்.

மங்கையைப் பாகம் ஆக
     உடையவர் மன்னும் கோயில்
எங்கணும் பூசை நீடி
     ஏழ்இசைப் பாடல் ஆடல்
பொங்கிய சிறப்பின் மல்கப்
     போற்றுதல் புரிந்து வாழ்வார்
தங்கள்நா யகர்க்கு அன்பர்
     தாள்அலால் சார்புஒன்று இல்லார்.

(பெரிய. மெய்ப்பொருள் நாயனார் புராணம். 3)

(மங்கை= பெண்; பாகம் = பகுதி; உடையவர் = சிவன்; மன்னும் = நிலைபெற்ற; மல்க = பெருக; நாயகர் = தலைவர்; அலால்= அல்லாது; சார்பு = பற்றுக்கோடு)

சக்தியை இடப்பாகத்தில் உடைய சிவன் கோயில்களில் ஏழிசைப் பாடல் ஆடல் நிகழச் செய்தார்; பூசைகள் செய்ய ஆணையிட்டார்; சிவனைப் போற்றி வாழ்ந்தார். சிவனடியார்களின் திருவடிகளையே துணையாகக் கொண்டிருந்தார்.

மெய்ப்பொருள் நாயனாரிடம் முத்தநாதன் என்பவன் பகை கொண்டு இருந்தான். அவனுக்கும் நாயனார்க்கும் பலமுறை போர்கள் நிகழ்ந்தன. ஒரு முறை கூட முத்தநாதன் வெற்றி பெற முடியவில்லை. 'நேர் நின்று போர் புரிந்தால் இந்த நாயனாரை வெல்ல முடியாது' என்று அவன் எண்ணினான். நாயனார் சிவன் மீது கொண்ட பக்தியையும் திருநீற்றின் மேல் கொண்ட பற்றையும் அறிந்தான். அடியார் போல் வேடம் பூண்டு நாயனாரைக் கொல்வதற்காகச் சூழ்ச்சி செய்தான்.

வஞ்சனை வேடம்

முத்தநாதன் கொண்ட வஞ்சனை வேடத்தைச் சேக்கிழார் வருணித்துள்ளார்.

இதோ அக்காட்சி:

மெய்எலாம் நீறு பூசி
     வேணிகள் முடித்துக் கட்டிக்
கையினில் படைக ரந்த
     புத்தகக் கவளி ஏந்தி
மைபொதி விளக்கே என்ன
     மனத்தின்உள் கறுப்பு வைத்துப்
பொய்த்தவ வேடம் கொண்டு
     புகுந்தனன் முத்த நாதன்

(பெரிய. மெய்ப்பொருள் நாயனார் புராணம், 7)

(மெய் = உடல்; நீறு = திருநீறு / விபூதி; வேணி = சடை / முடி;
படை =ஆயுதம் / கருவி; புத்தகக் கவளி
= புத்தகப்பை / சுவடிகள்
அடுக்கிக் கட்டப்பட்டு இருக்கும் சுவடிக்கட்டு; மை = குற்றம் / இருட்டு
/ புகை; கறுப்பு = வஞ்சனை).

முத்தநாதன் உடல் முழுவதும் திருநீறு பூசி இருந்தான்; சடைமுடியை
முடித்துக் கட்டி இருந்தான்; தன் கையில் ஆயுதம் மறைத்து வைத்த
சுவடியை வைத்திருந்தான்; மையை / இருளை மறைத்து வைத்திருக்கும்
விளக்கின் ஒளியைப் போல மனத்தில் வஞ்சனையை மறைத்து
வைத்திருந்தான்; இவ்வாறு பொய்யான தவக் கோலம் பூண்டு
திருக்கோவலூருக்குள் நுழைந்தான்.

தொழுது வென்றார்

பொய் வேடம் புனைந்த முத்தநாதன் அடியாரின் அரண்மனையை
அடைந்தான். வாயில் காப்போர் சிவனடியார் என்று எண்ணி அவனைப்
போக விட்டனர். பல வாயில்களையும் கடந்து மன்னரின் பள்ளியறை
வாயிலை அடைந்தான். அங்கிருந்த தத்தன் என்னும் வாயில்
காப்போன் “மன்னர் உறங்கும் நேரம் ” என்று முத்தநாதனைத்
தடுத்தான். அதனையும் மீறி “ மன்னனுக்கு உறுதிப் பொருளைக்
(வீடுபேறு தருவதற்குரிய வழி முறை ) கூறப் போகிறேன் என்னைத்
தடுக்காதே” என்று, தத்தனை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தான்.
கண் விழித்த நாயனார், முத்தநாதனைச் சிவன் அடியார் என்று எண்ணி
வணங்கினார், “அடியவரே இங்கு வந்ததன் நோக்கம் என்ன” என்று
பணிந்து கேட்டார். முத்தநாதன்,“ இறைவன் அருளிச் செய்த
ஆகமங்களுள் ஒன்று என்னிடம் இருக்கின்றது. அது வேறு எங்கும்
இல்லாதது. அதனை உமக்குக் கூறவே வந்தேன்” என்று பொய்
கூறினான். இதனைக் கேட்ட நாயனார் அகம் மகிழ்ந்தார். அந்த
ஆகமத்தைக் கூற வேண்டினார். முத்தநாதன் “ உன் மனைவி இங்கே
இருத்தல் கூடாது. நீயும் நானும் தனித்து இருந்து அந்த ஆகமத்தை
அறிய வேண்டும்” என்றான். உடனே மன்னன் அரசியாரை அனுப்பி
விட்டுப் பொய் வேட அடியாரைப் பீடத்தில் அமர்த்தித் தான் கீழே
அமர்ந்து, “அன்பரே அருள் செய்க” என்றார்.

வஞ்சகனின் செயல்

முத்தநாதன் தன்னுடைய கைகளில் வைத்திருந்த வஞ்சகமாகிய சுவடிப் பையை மடிமேல் வைத்து ஏட்டுச் சுவடியைப் பிரிப்பவன் போல் பாவனை செய்தான். மெய்ப்பொருள் நாயனார், தன்னைப் பணிந்து வணங்கும் சமயத்தில் உடைவாளை உருவி அவரை வெட்டினான்.

வஞ்சக வேடம்

தான் செய்ய நினைத்ததைச் செய்து முடித்தான். அப்போதும் நாயனார், அவனது உடம்பில் உள்ள தவவேடமே உண்மையான
உறுதிப் பொருள் என்று எண்ணி அவனை வணங்கினார். தாம் கொண்ட கொள்கையில் இருந்து மாறாது வெற்றி பெற்றார். நாயனாரை முத்தநாதன் கொலை செய்த நிகழ்ச்சியைக் கூற வரும் இடத்தில்,
"வாளால் வெட்டிக் கொலை செய்தான் " என்று கூறுவதற்குச் சேக்கிழாரின் மனம் ஒப்பவில்லை. எனவே "அவன் எண்ணியதைச் செய்து முடித்தான்” என்று கூறினார். முத்தநாதன் கொலை செய்யினும் அவன் வெற்றி பெறவில்லை. கொலையே செய்தாலும் அவன் சிவனடியார் உருவத்தில் இருப்பவன்; எனவே நாயனார் அவனை வணங்கினார். அதாவது தான் கொண்ட கொள்கையில் அவர் கடைசி வரை உறுதியாக இருந்தார். எனவே, வென்றவர் நாயனாரே என்கிறார் சேக்கிழார்,

கைத்தலத்து இருந்த வஞ்சக்
     கவளிகை மடிமேல் வைத்துப்
புத்தகம் அவிழ்ப்பான் போன்று     
     புரிந்துஅவர் வணங்கும் போதில்
பத்திரம் வாங்கித் தான்முன்
     நினைந்தஅப் பரிசே செய்ய
மெய்த்தவ வேட மேமெய்ப்
     பொருள்எனத் தொழுது வென்றார்

(பெரிய. மெய்ப்பொருள் நாயனார் புராணம். 15)

(தலம் = இடம்; கவளிகை =சுவடிக்கட்டு; புரிந்து = விரும்பி;
பத்திரம்
= உடைவாள்; பரிசே = அவ்வாறே / தான் நினைத்த வாறே; மெய்த்தவ வேடம் = உடம்பில் பூண்டிருந்த வேடம்;
மெய்ப்பொருள் = உண்மையான பொருள்; தொழுது = வணங்கி)

நாயனாரின் செயல்

முத்தநாதன் உள்ளே நுழைந்த போதே அவனைத் தத்தன் கவனித்து வந்தான். முத்தநாதன் செய்த செயலைக் கண்டு நொடிப் பொழுதில் அரசனை அணுகினான்; அங்கிருந்த முத்தநாதனை வாளினால் கொல்லப் போனான். அப்பொழுது குருதி கொப்புளிக்க வீழ்ந்து கொண்டிருந்த நாயனார் “ தத்தனே இவர் நம்மவர்; சிவனடியார் ” என்று தடுத்துச் சாய்ந்தார்.








    "தத்தா நமர்"

இதனைச் சேக்கிழார்,

நிறைத்தசெங் குருதி சோர
     வீழ்கின்றார் நீண்ட கையால்
தறைப்படும் அளவில் தத்தா
     நமர்எனத் தடுத்து வீழ்ந்தார்

(பெரிய. மெய்ப்பொருள் நாயனார் புராணம். 16)

(நிறைத்த = நிறைந்த / மிகுந்த; செங்குருதி = இரத்தம்;
சோர = வழிய; தறை = மண்; நமர் = நம்மவர்)

என்று விவரித்துள்ளார். சாய்ந்த நாயனாரைத் தாங்கிய தத்தன் “எனக்கு
உள்ள பணி யாது” என்று வினவினான். நாயனாரும் "இந்த அடியார்க்கு
வழியில் எவராலும் தீங்கு நேராதவாறு காத்து, இவரைக் கொண்டு
போய் விட்டு விடு" என்று ஆணை இட்டார். ஆணைப்படியே தத்தன்
அந்த வஞ்சகனை அழைத்துச் சென்றான். அரண்மனையில்
நிகழ்ந்ததை அறிந்தவர்கள் எல்லாரும் ஆங்காங்கே முத்தநாதனை
வளைத்துக் கொண்டனர். அவர்களுக்கு எல்லாம் அரசர்
சொன்னதைத் தத்தன் எடுத்துக் கூறி விலக்கினான். ஒருவாறு
மக்களிடம் இருந்து முத்தநாதனைக் காப்பாற்றி, வாள் ஏந்தி
மக்கள் வாராத இடத்தில் அவனை விட்டான்.

இறையடி சேர்ந்தமை

அரண்மனைக்குத் திரும்பிய தத்தன், நாயனாரிடம் செய்தியைத்
தெரிவித்தான். இதனைக் கேட்ட நாயனார் கூறுவதாகச் சேக்கிழார்
பாடுவதைப் படியுங்கள்:

சென்றுஅடி வணங்கி நின்று
     செய்தவ வேடம் கொண்டு
வென்றவர்க்கு இடையூறு இன்றி
     விட்டனன் என்று கூற
இன்றுஎனக்கு ஐயன் செய்தது
     யார்செய்ய வல்லார் என்று
நின்றவன் தன்னை நோக்கி     
     நிறைபெரும் கருணை கூர்ந்தார்

(பெரிய. மெய்ப்பொருள் நாயனார் புராணம். 21)

(ஐயன் = தத்தன் / மதிப்பிற்கு உரியவன்; நிறை = நிறைந்த; கருணை = அருள்)

முத்தநாதனை விடுத்து வந்த தத்தன் அரசனை வணங்கி, " தவ வேடத்தால் வெற்றி அடைந்தவர்க்கு எந்த இடையூறும் இல்லாமல் விட்டு வந்தேன்" என்று கூறினான். அதனைக் கேட்ட நாயனார் "இன்று எனக்கு இந்த உதவியைச் செய்தவர் மதிப்பிற்குரியவரே; வேறு யார் இந்த உதவியைச் செய்ய வல்லவர்" என்று,தத்தனை அருளோடு நோக்கிக் கூறினார். பின்பு எல்லாரிடமும் திருநீற்று நெறியை (சிவவழிபாட்டை) அன்புடன் பாதுகாக்குமாறு வேண்டினார். தில்லை இறைவனை நினைத்து வேண்டிடச் சிவபெருமான் மெய்ப்பொருள் நாயனார்க்குக் காட்சி கொடுத்து, அவரைத் தமது திருவடி நிழலில் சேர்த்து அருளினார்.

இவ்வாறாக மெய்ப்பொருள் நாயனார் வரலாற்றைச் சேக்கிழார் விவரித்துச் செல்கி்றார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 02:01:50(இந்திய நேரம்)