தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

D0412442-4.2

4.2 அறிஞர்களும் காப்பிய வகைமையும்

    பேராசிரியர் மு.வ.,வரதராசனார்,பேராசிரியர் தமிழண்ணல் பேராசிரியர்    வ.சுப.மாணிக்கனார்,    ஆகியோர்களும் காப்பியங்களை வகைப்படுத்தியுள்ளனர்.

4.2.1 மு.வரதராசனாரின் வகைமை

     மு.வ. காப்பியங்கள என்ற தலைப்பில் முதலில் பாரத நூல்களையும், அடுத்து     இராமாயண      நூல்களையும் வகைமைப்படுத்துகிறார்.

     பிற நூல்கள் என்ற தலைப்பில் வடமொழி நூல்களைத் தழுவித்     தமிழில் எழுதப்பட்ட     இலக்கியங்களை வகைமைப்படுத்துகிறார்.

     அடுத்துப் பெருங்கதை, சீவகசிந்தாமணி, சூளாமணி, வளையாபதி, குண்டலகேசி போன்ற இலக்கியங்களை, சமண பௌத்தக் காப்பிய வகைமையின் அடிப்படையில் தருகிறார்.

     சைவ, வைணவ நூல்களுக்குப் போட்டியாகவே சமண, பௌத்த சமய நூல்களை ஒரு பாகுபாட்டுக்குள் கொண்டுவரப் பிற்கால அறிஞர்கள் விரும்பி, ஐம்பெரும் காப்பியம், ஐஞ்சிறு காப்பியம் என்ற இரண்டு பாகுபாட்டுக்குள் கொண்டு வந்தனர் எனக்     குறிப்பிடும்     டாக்டர். மு.வரதராசனார் இவ்வகைமையாக்கத்தை மறுக்கிறார்.

     “பெருங்காப்பியம், சிறுகாப்பியம் என்று பெருமை சிறுமைகளைக் கற்பனை செய்ததற்குத் தக்க காரணங்கள் இல்லை. சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி,       குண்டலகேசி ஆகிய ஐந்தையும் ஐம்பெரும் காப்பியம் என்றனர். உதயணகுமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், நீலகேசி, சூளாமணி ஆகிய ஐந்தனையும் ஐஞ்சிறு காப்பியம் என்றனர். சிந்தாமணியோடு ஒத்த இடம்பெறத் தகுதியான சூளாமணியைச் சிறுகாப்பியம் என்று அமைத்தது பொருந்தவில்லை. சமயவாதம் மிகுந்த குண்டலகேசியைப் பெருங்காப்பியத்துள் சேர்த்ததும் பொருத்தமாகத் தோன்றவில்லை.  பிற்காலத்து அறிஞர் எவரோ செய்த இந்தப் பாகுபாடு புறக்கணிக்கத்தக்கதே எனலாம்”(மு.வ. தமிழ் இலக்கிய வரலாறு, சாகித்ய அக்காதெமி ப-159).

     மு.வரதராசனார் ஐம்பெரும்காப்பியம், ஐஞ்சிறு காப்பிய வகைமையை ஏற்றுக் கொள்ளாமல்     மறுக்கிறார் என்பது  தெளிவாகிறது. சைவ இலக்கியமாக மு.வ. பெரியபுராணத்தைக் காட்டுகிறார். வைணவ இலக்கியமாகக் கம்பராமாயணத்தை அறிமுகப்படுத்துகிறார்.

     கருத்து நிலையின் அடிப்படையில் இதுவரையில் வகைமைப்படுத்திய தமிழண்ணல், அடுத்த வரையறையை யாப்பு அடிப்படையில் தருகிறார். சிலம்பு, மணிமேகலையோடு,கொங்கு வேளிர் பெருங்கதையைஅகவல் யாப்புடையதென்று 'அகவற் காப்பியம்' என வகைப்படுத்துகிறார். சீவக சிந்தாமணிக்கு இணையான இலக்கியச் செழுமையுடைய சூளாமணியைச் சிறுகாப்பியம் என்று புறந்தள்ள, பல தமிழர்களைப் போலத் தமிழண்ணலுக்கும் மனம் ஒப்பவில்லை. எனவே முதல் ஐந்து காப்பியங்கள எனும் வகைமையைத் தமிழண்ணல் புதிதாக வடிவமைத்துள்ளார். அவ்வகைமைக்குள்

    (1) சிலப்பதிகாரம்
     (2) மணிமேகலை
     (3) சீவகசிந்தாமணி
     (4) பெருங்கதை
     (5) சூளாமணி

எனும் ஐந்து காப்பியங்களை அடக்குகிறார்.

     மரபினை முற்றிலும் தமிழண்ணல் மாற்றவில்லை. ஐம்பெரும் காப்பிய, ஐஞ்சிறுகாப்பிய எண் வகைமையை அப்படியே தருகிறார்.

4.2.2 வ.சுப.மாணிக்கனாரின் வகைமை

     வ.சுப. மாணிக்கனார் தமிழ்க் காப்பியங்களை இரு வகைகளாக வகைமைப்படுத்துகிறார்.

நிலக் காப்பியம்

    (1) சிலப்பதிகாரம்
     (2) மணிமேகலை
     (3) பெரிய புராணம்

தழுவு காப்பியம்

     (1) இராமாயணம்
     (2) இராவண காவியம்

     இதில் நிலக்காப்பியம்     என்பது வடமொழியிலிருந்து பெறாமல்,இந்த நிலத்திலேயே கருக்கொண்டு உருக்கொண்டதாகும்.

     தழுவு காப்பியம் என்பது வான்மீகியைத் தழுவி, கம்பரும், புலவர் குழந்தையும் படைத்தது என விளக்குகிறார்.

4.2.3 டாக்டர் தமிழண்ணலின் வகைமை

     தமிழில் இதுவரை வந்துள்ள காப்பிய வகைமைகளில் எளிமையானதாக அமைவது டாக்டர் தமிழண்ணலின் காப்பிய வகைமைப் பட்டியல் ஆகும். புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு எனும் நூலில் அவர் முன்வைக்கும் காப்பிய வகைமைப் பட்டியல்;

1.
முதற் காப்பியம்
-
சிலப்பதிகாரம்
2.
இரட்டைக் காப்பியம்
-
சிலப்பதிகாரம், மணிமேகலை
3.
அகவற்காப்பியம்
-
சிலப்பதிகாரம், மணிமேகலை,
பெருங்கதை

4.
முதல் ஐந்து காப்பியங்கள்
-
சிலப்பதிகாரம், மணிமேகலை,
சீவகசிந்தாமணி, பெருங்கதை,
சூளாமணி
5.
ஐம்பெரும் காப்பியங்கள்
-
சிந்தாமணி, சிலப்பதிகாரம்,
மணிமேகலை, வளையாபதி,
குண்டலகேசி
6.
ஐஞ்சிறு காப்பியங்கள்
-
யசோதர காவியம்,
உதயணகுமார காவியம், நீலகேசி, நாககுமார காவியம், சூளாமணி
7.
இராமாயணங்கள்
-
இராமகாதை; கம்ப ராமாயணம்
8.
புராணக் காப்பியங்கள்
-
பெரிய புராணம்; கந்த புராணம்
9.
பாரத நூல்கள்
-
பெருந்தேவனார் பாரதம்;
வில்லிபாரதம்;
நல்லாப்பிள்ளை பாரதம்;
நளவெண்பா ; நைடதம்
10.
புராணங்கள்
-
திருவிளையாடற் புராணம்; தலபுராணங்கள்
11.
சமயக் காப்பியங்கள்

    இஸ்லாம்
    கிறித்தவம்


-
-

சீறாப்புராணம்
தேம்பாவணி; இரட்சணிய
யாத்திரிகம்

12.
இக்காலக் காப்பியங்கள்
-
பாஞ்சாலி சபதம்;
பாண்டியன் பரிசு;
இராவண காவியம்;
பூங்கொடி.


     தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1.
கவியால்    எழுதப்படும் இலக்கியத்தை
வடமொழியில் எவ்வாறு அழைக்கின்றனர்?
2.
வடமொழியில் பெருங்காப்பியங்களை எவ்வாறு
அழைக்கின்றனர்?
3.
விருத்தப்பாவில் அமைந்த முதல் தமிழ்க்
காப்பியம் எது?
4.
சூளாமணியின் ஆசிரியர் யார்?
5.
ஆசிரியப்பாவில் அமைந்த முதல் மூன்று
காப்பியங்கள் எவை?
6.
ஐம்பெரும் காப்பியம் எனும் சொல்லை
முதலில் பயன்படுத்தியவர் யார்?

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 13:16:02(இந்திய நேரம்)