Primary tabs
கவிதை, கல்வெட்டு, இசை, மொழிபெயர்ப்பு எனப் பல்வேறு
துறைகளிலும் தம் முத்திரையைப் பதித்தவர் கவிமணி
தேசிகவிநாயகம் அவர்கள். அவர் கவிதையை உயிராக
நேசித்தவர். கவிமணியின் கவிதைகள் உணர்ச்சி நிறைந்தவை.
‘என் எழுத்தும் தெய்வம்; என் எழுதுகோலும் தெய்வம்’ என்று
கூறிய பாரதியின் கவிதைகளில் தம் உள்ளத்தைப்
பறிகொடுத்தவர் கவிமணி.
“பாட்டுக்கொரு புலவன் பாரதியடா - அவன்
பாட்டைப் பண்ணோடு ஒருவன் பாடினானடா
கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனடா ! - அந்தக்
கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாயடா.”
என்ற பாடலைக் கவிமணி பாடியதன் மூலம் அவருக்குப் பாரதி
மீதிருந்த மதிப்பை உணர்ந்துகொள்ளலாம். எளிமையாகப்
பாடுபவர்; இனிமையாகப் பாடுபவர். குழந்தைகளுடன் குழந்தையாக
வாழ்ந்தவர். பழமையின் பாதுகாப்பில் புதுமைக்குப் பாலம்
அமைத்தவர். இத்தகைய சிறப்புடைய கவிமணியின் உள்ளத்தை
இனிக் காணலாமா?