Primary tabs
நமக்குக் கிடைத்துள்ள நூல்களுள் மிகவும் தொன்மையானதாக
விளங்குவது தொல்காப்பியம்
என்னும் இலக்கண நூலாகும்.
இந்நூல் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்
பெறுகின்றது. இதற்கும் முந்தையனவாக இலக்கண நூல்கள்
இருந்திருக்கின்றன. அவ்விலக்கண நூல்கள் ‘எள்ளிலிருந்து
எண்ணெய் எடுக்கப்படுவது போல’ இலக்கியத்திலிருந்து இலக்கண
நூல்கள் ஏற்படுகின்றன
என்னும் விதிக்கு இணங்க, தமக்கு முற்பட்ட
இலக்கியங்களைக் கொண்டு இலக்கணம் வகுத்தனவாகும்.
இலக்கண
நூல்களில் செய்யுள் தொடர்பான எழுத்து, சொல், அகம்-புறம்
என்னும் பாடுபொருள் குறித்த செய்திகள், யாப்பு, அணி ஆகியன
பற்றிய வரையறைகள் இடம் பெற்றிருக்கும். எனவே
இவற்றைக்
கருதிப் பார்க்கும்போது, செய்யுள் என்னும் கவிதை வடிவம்
ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுக்காலத் தொன்மையுடையது என
உறுதிபடக் கூறலாம்.
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, பரிபாடல் ஆகியன குறித்த
இலக்கணங்களைத் தொல்காப்பியம்
எடுத்துரைக்கின்றது.
இறையனார் களவியல் உரையில் மறைந்து போன சங்க நூல்களின்
குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
முதுகுருகு, முதுநாரை,
களரியாவிரை ஆகிய தலைச் சங்க
நூல்களும், கலி, குருகு,
வியாழமாலையகவல், வெண்டாளி ஆகிய இடைச் சங்க நூல்களும்
அவ்வகை நூல்களுள் அடங்கும். சிற்றிசை, பேரிசை
என்பன
கடைச்சங்கத்தில் இருந்து மறைந்தவற்றுள் அடங்கும்.
‘மறைந்துபோன தமிழ்நூல்கள்’ என மயிலை சீனிவேங்கடசாமி,
இவ்வகை நூல்கள் குறித்துத் தனியொரு நூலே எழுதியுள்ளார்.
அவற்றின்வழி மரபுக்கவிதையின் தொன்மையை
நன்கு அறியலாம்.
தொன்று நிகழ்ந்தது
அனைத்தும் உணர்ந்திடும்
சூழ்கலை வாணர்களும் - இவள்
என்று பிறந்தவள் என்றுண ராத
இயல்பின ளாம்எங்கள் தாய்
எனப் பாரதியார் பாடும் பாடல், மரபுக்கவிதையின் காலத்
தொன்மைக்கும் பொருந்தக்
கூடியதாகும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை தமிழ் இலக்கிய
வடிவம் என்பது செய்யுள் வடிவமாகவே இருந்தது. இந்நூற்றாண்டில் மேலைநாட்டில்
பழைய யாப்பு உருவத்திலிருந்து விலகி, இயைபுத் தொடை (Rhyme) முதலியன இன்றி
உரைநடைச் சாயலில் புதிய கவிஞர்கள் கவிதை படைக்கத் தொடங்கினர். 1892இல் அமெரிக்கக்
கவிஞர் வால்ட் விட்மன் புல்லின் இலைகள்
என்ற தலைப்பில் வெளியிட்ட பன்னிரண்டு கவிதைகளைக்
கொண்ட தொகுப்பு, யாப்பு மரபைப் புறக்கணித்து ஃப்ரீவெர்ஸ்
(Free verse)
என்னும் வசன கவிதையாக அமைந்தது. அவர்தம் பாடுபொருளும் பிறர்
இதுவரையில் பேசாப் பொருளாக அமைந்தது. இவரை அடியொற்றி
எமர்சன், கார்ல் சான்ட்பெர்க், லின்ட்ஸே, வாலெஸ் ஸ்டீவன்ஸன்,
ஸ்டீவன் கிரேன், அமி லோவல் போன்ற எண்ணற்ற கவிஞர்கள்
வசன கவிதை படைக்கலாயினர்.
பிரெஞ்சு நாட்டிலும், ரிம்பாடு என்னும் இளங்கவிஞர், 1886ஆம்
ஆண்டு ஒளி வெள்ளம்
என்னும் தலைப்பில் வெர்ஸ் லிப்ரே
என்ற கட்டற்ற கவிதைகளைப் படைத்தார்.
இவரையடுத்து 1889-இல்
வியல் கிரிப்பின் என்பவர் கட்டற்ற கவிதை என்ற அறிவிப்புடன்
தம்
கவிதைகளை வெளியிட்டார்.
இத்தாலி, ஸ்பானிஷ், செர்மன், ருஷ்ய மொழிகளின் இலக்கண
மரபுகளிலும் நெகிழ்ச்சியும்
மாற்றமும் ஏற்படத் தொடங்கின.
பிரெஞ்சு நாட்டினரின் சர்ரியலிசம், இத்தாலியக் கவிஞர்களின்
ப்யுச்சரிசம்,
ஜெர்மானியரின் எக்ஸ்பிரஷனிசம்
என்பன
அவ்வந்நாடுகளின் மரபுக்கவிதை நிலை கடந்து
வசன கவிதைகளைத்
தோற்றுவிக்கலாயின.
‘விட்மனின் பாடலில் எதுகை, மோனை, தளை எதுவுமே இருக்காது; வசன நடை போலவே இருக்கும்; கவிதையைப் பொருளில் காட்ட வேண்டுமே யொழியச் சொல்லடுக்கில் காட்டுவது பயனில்லை எனக்கருதி வசன நடையிலேயே அவர் எழுதிவிட்டார்’ என்பார் மகாகவி பாரதியார். மரபுக் கவிதையில் வல்லவரும் தம் பல்வேறு பாடல்களை அதிலேயே படைத்தவருமாகிய பாரதியார் வசன கவிதையில் விருப்புற்றவராகத் தாமும் காட்சிகள் என்னும் தலைப்பில் பல வசன கவிதைகளைப் படைத்துள்ளார்.
பாரதியைத் தொடர்ந்து ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன்
போன்றோர் புதுக்கவிதை
படைக்கலாயினர்.
புதுக்கவிதைகள், பத்திரிகைகளில் வெளியிடப் பெற்றுப் படிப்படியாகச் செல்வாக்குப் பெற்றன
என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
தொன்று தொட்டு வரும் தன்மையுடையது என்பதை
மரபு என்னும்
சொல் உணர்த்தி நிற்கின்றது. இனிய ஓசை நயம் அமைந்த
பாடல்களைக் கேட்டுப் பழகியவர், அதே ஓசையில் பாடல் புனைய
முயன்று, பிறர் படிக்கவும், இவ்வாறே புதியன படைக்கவும் ‘பாடல்
அமைப்பை’ எழுத்து, அசை, சீர் என அமைத்து
ஒழுங்குபடுத்தியிருத்தல் வேண்டும். இவ்வாறு யாப்பிலக்கணம்
தோன்ற, அடுத்தடுத்து வந்தவர் அம்மரபு மாறாமல் கவி படைக்கத்
தொடங்கினர்.
பாக்களை யடுத்துப் பாவினங்களும், அவற்றையடுத்துக் கும்மி, சிந்து போன்றனவும் தோன்றின. இவ்வாறுதான் பாடப்படவேண்டும் என்னும் வரையறை இருப்பதால் சிதறாத வடிவமாகப் பாதுகாக்கப் பெற்றுக் காலந்தோறும் இம்முறை பின்பற்றப்பட்டு வருகின்றது.
பாடுபொருளும் உத்திகளும் புதியனவாயினும் மரபு இலக்கணத்தின்படி படைக்கப்படுதலின் இவை மரபுக்கவிதை எனப்படுகின்றன.
ஆசிரியப்பா, வெண்பா, விருத்தம், சிந்து எனக் காலந்தோறும் யாப்பு வடிவங்கள் செல்வாக்குப் பெற்றுவந்தன. மேனாட்டுத் தாக்கத்தால் உரைநடை செல்வாக்குப் பெற்ற நிலையில், யாப்பிலக்கணத்திற்குக் கட்டுப்படாமல் கவிதை உணர்வுகளுக்குச் சுதந்திரமான எழுத்துருவம் கொடுக்கும் இப்படைப்பு முயற்சி, வசன கவிதை என்றே அழைக்கப்பட்டது. பின்னர், யாப்பில்லாக் கவிதை, இலகு கவிதை, கட்டிலடங்காக் கவிதை போன்ற பெயர்களை அவ்வப்போது பெற்று வரலாயிற்று.
பழக்கத்தில் உள்ள நிலையிலிருந்து சிறிதளவோ முற்றிலுமோ
மாறுபட்டுத் தோன்றுவது புதுமை எனப்படும். வழிவழியாக மரபு
கெடாது யாப்பிலக்கணத்தோடு பொருந்தி வரும் கவிதைகளிலிருந்து
மாறுபடும் கவிதைப் படைப்புதான் புதுக்கவிதை ஆகும்.
புதுக்கவிதைகள் உருவத்தால் மட்டுமன்றி, உள்ளடக்கம்,
உத்திமுறைகள் ஆகியவற்றாலும் புதுமையுடையனவாகும்.
இலக்கணச் செங்கோல்
யாப்புச் சிம்மாசனம்
எதுகைப் பல்லக்கு
மோனைத் தேர்கள்
தனிமொழிச் சேனை
பண்டித பவனி
இவையெதுவும் இல்லாத
கருத்துக்கள் தம்மைத்தாமே
ஆளக் கற்றுக்கொண்ட
புதிய மக்களாட்சி முறையே
புதுக்கவிதை (ஊர்வலம்)
என மேத்தா கூறும் புதுக்கவிதை, புதுக்கவிதையின் இலக்கணத்தையும்
இயல்பையும் புலப்படுத்தும். இதனை, சாலை இளந்திரையன்
உரை
வீச்சு எனக் கூறுவார்.
எதற்காகச் சொல்லப்படுகிறது? அதையே நோக்கம் என்கிறோம்.
மரபுக்கவிதை, சங்க காலத்தில் மன்னர்களோடு தொடர்புடையதாக இருந்தது. மன்னர்களின் வீரம், வெற்றி, கொடை, ஆட்சிச் சிறப்பு ஆகியவற்றைப் புகழ்வதாகவும், துணிச்சலுடன் புலவர்கள் அறிவுறுத்துவதாகவும் அமைந்தன. அரசவையிலோ, சங்கம் போன்ற தமிழ் அவைகளிலோ ஒன்று குழுமிய புலவர்கள் அகப்பொருள் பாடி இன்புறுத்துவதாகவும் அறிவுறுத்துவதாகவும் அமைந்தன.
இடைக்காலத்தில் பக்தி இலக்கிய மறுமலர்ச்சியின் காரணமாகப்
பாடுபொருள் இறைவனைப்
பற்றியதாகவும், திருத்தலங்களின் (கோயில்
உள்ள ஊர்) சிறப்பை உணர்த்துவதாகவும் அமைந்தது.
சித்தரிலக்கியம், தத்துவம், மருத்துவம், அரசர்களையும் குறுநில
மன்னர்களையும் மகிழ்வுறுத்தும்
சிற்றிலக்கியங்கள் என அடுத்தடுத்த
காலங்களில் பாடுபொருள்கள் அமைந்தன.
கவியரங்கம், வரையறுக்கப்பட்ட தலைப்பு, இயற்கை, சமூக அவலம் என இன்றைய நிலையில் மரபுக்கவிதையின் பயன்பாடு அமைகின்றது.
எனவே, மரபுக்கவிதை தொழிலுக்கு உரியதாகவும்,
அறிவுறுத்துவதாகவும், இன்புறுத்துவதாகவும் அமைந்து வரும்
நிலையை அறிகின்றோம்.
புதுக்கவிதையைத் தொழிலாகக் கொண்டு வாழ்பவர்கள்
மிகச் சிலரே.
பலர் சமுதாய அவலம் கண்டு அவ்வப்போது கவிதைகள்
புனைபவராக உள்ளனர். தனிமனித உணர்வுகளைப் பாடுவதும்,
நாட்டுப்பற்று, மொழியுணர்வு, பொதுவுடைமை, அநீதியை எதிர்த்தல்,
பெண்ணுரிமை, தலித்தியம், பகுத்தறிவு என்பனவற்றைப் பாடுதலும்
இன்றைய புதுக்கவிதைகளின் நோக்கங்களாக உள்ளன.
மரபுக்கவிதை இயற்றுவது என்பது, பெரும்பாலும் அடித்தட்டு
மக்களிடத்தில் இடம் பெறாததாகவே
இருந்து வந்துள்ளது.
புதுக்கவிதையைப் பொறுத்தவரை பெண்கள், அடித்தட்டு மக்கள்,
தொழிலாளிகள் எனப் பலரும் படைப்பாளராகி விடுவதனால்,
தங்களின் உண்மை நிலையையும், வாழ்வியல் சிக்கல்களையும்,
தாங்கள் எதிர்நோக்கும் தீர்வுகளையும் தெளிவாக எடுத்துக் கூற
வல்லவர்களாய் அமைகின்றனர். அவர்தம் புதுக்கவிதைப்
படைப்புகளும் அவர்களின் மனநிலையையும் வாழ்வியலையும்
படிப்பவருக்கு
நன்கு உணர்த்துவனவாகின்றன.
இவ்வாறு இரு வகையாகப் பிரிக்கப்பட்ட கவிதைகளைப் படைத்தவர்கள் பற்றியும், அவர்களது நூல்களைப் பற்றியும் இனிக் காணலாம்.
சங்க இலக்கியம், காப்பியங்கள், நீதி நூல்கள், பக்தி இலக்கியம்,
சிற்றிலக்கியம், தனிப்பாடல்கள் என்னும் யாவும் மரபுக் கவிதைகளால்
ஆனவையே ஆகும்.
பாரதியார் காலந்தொட்டு வரும் மரபுக்கவிதை படைப்பாளர்களும் அவர்தம் படைப்புகளும் குறிப்பிடத்தக்க சிறப்புடையனவேயாகும்.
(1) பாரதியார் - பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில்பாட்டு
(2) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை - ஆசியசோதி,
மருமக்கள்வழி மான்மியம்
(3) நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை - தமிழன் இதயம்,
கவிதாஞ்சலி
(4) பாரதிதாசன் - பாண்டியன் பரிசு, இருண்ட வீடு
குடும்பவிளக்கு, அழகின் சிரிப்பு
(5) கண்ணதாசன் - இயேசு காவியம், மாங்கனி, ஆட்டனத்தி
ஆதிமந்தி
(6) சுத்தானந்த பாரதியார் - பாரதசக்தி மகாகாவியம், தமிழ்த்
திருப்பாவை
(7) சுரதா - சிரிப்பின் நிழல், தேன்மழை, துறைமுகம்
(8) அழ.வள்ளியப்பா - மலரும் உள்ளம், பாட்டிலே காந்தி
(9) வாணிதாசன் - கொடி முல்லை
(10) வைரமுத்து - வைகறை மேகங்கள்
புதுக்கவிதை
பாரதியார் தொடங்கிப் புதுக்கவிதைக்
கவிஞர் பலர் நல்ல பல
படைப்புகளை நல்கியுள்ளனர்.
(1) பாரதியார் - வசன கவிதை
(2) ந.பிச்சமூர்த்தி - காட்டு வாத்து, வழித்துணை
(3) அப்துல் ரகுமான் - பால்வீதி, சுட்டுவிரல்
(4) வாலி - அவதார புருஷன், பாண்டவர் பூமி
(5) மீரா - கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்
(6) நா.காமராசன் - கறுப்பு மலர்கள், நாவல்பழம்
(7) மேத்தா - கண்ணீர்ப் பூக்கள், ஊர்வலம்
(8) வைரமுத்து - இன்னொரு தேசிய கீதம், திருத்தி எழுதிய
தீர்ப்புகள், கொடிமரத்தின்வேர்கள்
(9) சிற்பி - சர்ப்ப யாகம்
(10) அறிவுமதி - நட்புக்காலம்
ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மரபுக்கவிதை வடிவம் இன்றும் நிலைபெற்று வருகின்றது. இலக்கியம் என்றாலே அது மரபுக்கவிதைதான் என்று விளங்கிய கால கட்டங்களைப் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் காண முடிகின்றது.
‘முதலில் தோன்றியது, மிகுந்த கட்டுப்பாடு இல்லாததாகிய
ஆசிரியப்பாவாகும்; வரவர
ஓசை நலம் கருதியும் செப்பமான
நிலையை எண்ணியும் சிற்சில கட்டுப்பாடுகள் தோன்றியிருக்கும்.
ஆசிரியப்பாவை அடுத்து அதனோடொத்த இயல்புடைய வஞ்சிப்பா
தோன்றியதெனலாம். அடுத்துக்
குறள் வெண்பா உள்ளிட்ட பலவகை
வெண்பாக்களும், பிறகு மருட்பாவும், அதன் பிறகு கலிப்பாவும்,
பரிபாடலும் தோன்றியிருத்தல் வேண்டும். அடுத்து வந்த காலத்தில்
விருத்தப்பா, தாழிசை,
துறை என்பன பயன்பாட்டிலமைந்தன’ என்பார்
அ.கி.பரந்தாமனார்.
யாப்பிலக்கணம் குறித்து
அகத்தியம், அவிநயம்,
காக்கைபாடினியம், கையனார் யாப்பியல், சங்க யாப்பு,
பல்காயம், பனம்பாரம், பெரிய பம்மம், மயேச்சுரர் யாப்பு,
மாபுராணம், வாய்ப்பியம், யாப்பருங்கலம்
எனப் பல்வேறு
இலக்கண நூல்கள் காலந்தோறும்
தோன்றி வந்துள்ளன. இந்நூல்கள்
தொல்காப்பியக் காலம் சார்ந்தும்,
காரிைகக்கு முன்னரும்
தோன்றியனவாகும்.
காரிகைக்குப்
பின், வீரசோழியம், இலக்கண விளக்கம்,
தொன்னூல் விளக்கம்,
சுவாமிநாதம், முத்துவீரியம், அறுவகை
இலக்கணம் என்னும் நூல்களும் யாப்பிலக்கணம்
உரைப்பனவாய்
அமைந்துள்ளன.
இருபதாம் நூற்றாண்டிலும் யாப்பிலக்கண வழிகாட்டி நூல்கள் பல தோன்றியுள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கன:
(1) புலவர் குழந்தை - யாப்பதிகாரம், தொடையதிகாரம் (உரை)
(2) அ.கி.பரந்தாமனார் - கவிஞராக (உரைநடை)
(3) கி.வா.ஜகந்நாதன் - கவி பாடலாம் (உரைநடை)
(4) த.சரவணத் தமிழன் - யாப்பு நூல் (நூற்பா)
(5) ச.பாலசுந்தரம் - தென்னூல் (நூற்பா)
(6) இரா.திருமுருகன் - சிந்துப் பாவியல் (நூற்பா)
சங்க இலக்கியத்தில் அகவலும், நீதி இலக்கியத்தில் வெண்பாவும், பிற்காலக் காப்பியங்களில் விருத்தமும், குறவஞ்சி, பள்ளு முதலியவற்றில் சிந்துப் பாடலுமாக மரபுக்கவிதை வடிவம் சிறந்து வந்துள்ளது.
கி.பி.1930-1945 காலகட்டத்தில் மணிக்கொடிக் குழுவினர், பாரதியாரை அடுத்துப்
புதுக்கவிதை இயற்றியவர்களாவர். அவர்களுள்
கு.ப.இராசகோபாலன், ந.பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன்,
வல்லிக்கண்ணன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
மணிக்கொடி
இதழின் காலகட்டத்திலேயே
ஜெயபாரதி, சூறாவளி, கிராம
ஊழியன், கலாமோகினி போன்ற இதழ்களிலும் புதுக்கவிதைகள்
பல
இடம் பெற்றன.
கி.பி.1950-1970 ஆண்டுகளில் இரண்டாம் நிலை வளர்ச்சி அமைந்தது என்பார்
ந.சுப்புரெட்டியார். எழுத்து, இலக்கிய வட்டம், நடை
போன்ற இதழ்களில் புதுக்கவிதைகள்
வெளிவந்தன. 1962-ஆம்
ஆண்டு புதுக்கவிதை வரலாற்றில் சிறப்புடையதாகும்.
எழுபதுகளில் தாமரை, கசடதபற, வானம்பாடி போன்ற இதழ்களில் புதுக்கவிதைகள் வெளியிடப் பெற்றுச் சிறப்புற்றன.
புள்ளி, வெள்ளம், உதயம், கதம்பம், ரசிகன், நீ, அலைகள், ஐ என்னும் புதுக்கவிதைச் சிறு தொகுப்புகளும் வெளிவந்துள்ளன.
புதுக்கவிதை நூல்கள் பலவும் எழுபதுகள் தொடங்கி வெளிவரலாயின. அவற்றுள் சில:
(1) ந.பிச்சமூர்த்தி - காட்டுவாத்து
(2) வேணுகோபாலன் - கோடை வயல்
(3) வைத்தீஸ்வரன் - உதய நிழல்
(4) நா.காமராசன் - கறுப்பு மலர்கள்
(5) இன்குலாப் - இன்குலாப் கவிதைகள்
(6) ஞானக்கூத்தன் - அன்று வேறு கிழமை
(7) கலாப்ரியா - தீர்த்த யாத்திரை
(8) சி.சு.செல்லப்பா - புதுக்குரல்கள்
(9) தமிழன்பன் - தோணி வருகிறது
(10) வல்லிக்கண்ணன் - அமர வேதனை
(11) ப.கங்கை கொண்டான் - கூட்டுப் புழுக்கள்
(12) சி.மணி - வரும் போகும்
புதுக்கவிதை ஈழத்திலும் மறுமலர்ச்சி, பாரதி, ஈழகேசரி, மல்லிகை, க-வி-தை போன்ற இதழ்களில் சிறப்புற வளர்ந்து வந்துள்ளமையும் இங்குக் குறிப்பிடத்தக்கது.
புதுக்கவிதை குறித்த செய்திகளையும் தெளிவினையும் புலப்படுத்தி வரன்முறைப் படுத்திய பெருமை திறனாய்வு நூல்களுக்கு உண்டு. இவை ஒரு வகையில் மரபுவழி யாப்பிலக்கண நூல்களை ஒத்தன எனலாம். ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்பது வல்லிக்கண்ணன் எழுதியது. புதுக்கவிதை போக்கும் நோக்கும் என்னும் நூல் ந.சுப்புரெட்டியாரால் எழுதப்பட்டது. புதுக்கவிதை - ஒரு புதுப்பார்வை என்பது கவிஞர் பாலாவின் படைப்பு. புதுக்கவிதை வளர்ச்சிக்கு இத்தகு நூல்களும் பெரும்பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.
பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குப் பின் மொழியமைப்பிலும்,
வெளியிடும் பாங்கிலும் மாறுதல்கள் ஏற்பட்டன. அவற்றை விரிவாகக்
காணலாம்.
மரபுக்கவிதை
நற்றமிழ், தெளிதமிழ், வெல்லும் தூயதமிழ் போன்ற இலக்கிய இதழ்களில் வல்லமை படைத்த மரபுக் கவிஞர்களின் படைப்புகளும், போட்டிக் கவிதைகள் பலவும் இன்றும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
கவியரங்குகளில் மரபுக் கவிதைகள் சிறப்பிடம் பெறுகின்றன.
பாரதியார் பிள்ளைத் தமிழ், காமராசர் பிள்ளைத் தமிழ்,
சிவாஜிகணேசன் பிள்ளைத் தமிழ் என்பன போன்ற மரபுவழி
இலக்கியங்கள் இன்றும் படைக்கப்
பெற்று வருகின்றன.
மருதூர் அரங்கராசனின் யாப்பறிந்து பாப்புனைய என்னும் நூல் இன்றைய நிலையில் மரபுக்கவிதை படைப்பவர்க்கு ஏற்ற வகையில் இயற்றப் பெற்றுள்ளது.
உயர்நிலைக் கல்வி பயிலும் மாணவர்கள் உட்படப் பலரும் எளிதில் எழுதுவதாகப் புதுக்கவிதை விளங்குகின்றது. பெண்ணியம், தலித்தியம் என்பன போன்ற கொள்கைவாதிகளும், கவியரங்கம் நிகழ்த்துவோரும், சமுதாயத்தின் பல்வேறு தரப்பினரும் புதுக்கவிதை நூல்களை வெளியீடு செய்யும் வழக்கத்தைத் தொடர்ந்து காணமுடிகின்றது.
நாளிதழ்கள், வார இதழ்கள், பல்வேறு மாத இதழ்கள், தை, நறுமுகை
போன்ற காலாண்டிதழ்கள் எனப் பல வகை இதழ்களிலும்
புதுக்கவிதைகள் சிறப்பிடம் பெறக் காண்கிறோம்.
ஹைக்கூ (துளிப்பா), சென்ரியு (நகைத் துளிப்பா), லிமரைக்கூ
(இயைபுத் துளிப்பா) என்னும் வகைகளும் புதுக்கவிதையின்
சாராம்சமாய் நாளும் தழைத்து
வருகின்றன.