Primary tabs
2.5 தொகுப்புரை
நாடகக் கலையின்
தொன்மைப் போக்குகளைப் பற்றிக்
காணும் போது, கி.பி.10 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.19 ஆம்
நூற்றாண்டு வரை நாம் தமிழ் நாடகத்தின் நிலையைக்
கண்டோம்.
தொன்மை நாடகத்தைப்
பற்றி அறிய “எழுதப்பட்ட
நாடகங்கள்” மிகக் குறைவு என்பதால், ஆதாரபூர்வமாக நாம் பல
செய்திகளை அறிய முடியவில்லை. கல்வெட்டுக் குறிப்புகள்
நாடகங்களைப் பற்றிச் சொன்னாலும், அவை எவ்வாறு
நடிக்கப்பட்டன என்பதை அறிய முடியவில்லை.
இலக்கிய வடிவ
நாடகங்களான பள்ளு, குறவஞ்சி, நொண்டி
விலாசம் போன்றனவே கி.பி.16 ஆம் நூற்றாண்டுக்குப்பின்
கிடைக்கும் எழுதப்பட்ட நாடகங்களாகும். இவ்வகையில்
பாடல்களில் ஆரம்பித்து, மெல்ல பேச்சு வடிவத்தை நோக்கி
வளர்ச்சியடையும் போக்கினைக் காணமுடிகின்றனது. ஆரம்ப
காலத்தில் மன்னர்களைப் பற்றிய நாடகங்கள் என்ற நிலை
இருந்தது. ஆனால் அந்நிலை மெல்ல மாறி மக்களைப் பற்றிய
கதைகள் நாடகங்களாக நடிக்கப் பெற்றன.
நாட்டுப்புறக்
கலைகளை நேரடி நாடகங்களாகக் கூறமுடியாவிட்டாலும்,
அவையும் நாடகம் சிறப்பாக வளரக் காரணங்களாக அமைந்தன.
தொன்மை நாடகத்தின் போக்கு, நாடகம் உச்சம் பெற்ற 20 ஆம்
நூற்றாண்டிற்கு முன்பு வரை இவ்வாறு அமைந்திருந்ததைக் காணலாம்.