தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

6.3 பண்பு நிலை வகை

  • 6.3 பண்பு நிலை நாடக வகை

    பண்புநிலை என்பது ஒரு நாடகம் கொண்டு விளங்கும்
    முழுமையான வடிவத்தைக்     குறிக்கிறது.     இவ்வடிவம்,
    அந்நாடகத்தின் இலக்கியத்தன்மை, மற்றும் வெளியீட்டு ஊடகம்
    (media) ஆகியவற்றின்     தன்மையால் மாறுபடும். இம்
    மாறுபாட்டுக்கேற்ப, பண்பு நிலை நாடக வகையை அடையாளம்
    காண முற்படலாம்.

    6.3.1 கவிதை நாடகம்

    நாடகத்தின் நடையைக் கொண்டு இவ்வகையிலான பாகுபாடு
    செய்யப்படுகிறது. இவ்வகை நாடகங்களின் உரையாடல்கள்
    பெரும்பாலும் கவிதை     வரிகளால் ஆக்கப்பட்டிருக்கும்.
    கதைமாந்தர் தங்களுக்கிடையேயான கருத்துப் பரிமாற்றங்களைக்
    கவிதை வடிவிலேயே பெரும்பாலும் நிகழ்த்துவதாகக் காட்சிகள்
    அமைக்கப்பட்டிருக்கும். அங்கம், களம், காட்சி போன்ற
    பிரிவுகளில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

    கவிதை வரிகளால் ஆக்கப்படுவதால் இவ்வகை நாடகங்களில்
    இலக்கியத்தன்மை மிகுந்து வரும். பொதுவாக ஆசிரியப்பா,
    வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா, விருத்தம் போன்ற ‘பா‘
    அமைப்புக்களால் உரையாடல் அமைந்து வரும். படிப்பதற்குச்
    சுவையாக இவை வடிவமைக்கப்படுவதுண்டு.

    இத்தகு தன்மைகளைக் கொண்ட கவிதை நாடகமானது
    தமிழில் இன்று பெருமளவில் வளர்ச்சி பெற்றுள்ளது. பேராசிரியர்
    சுந்தரம் பிள்ளை எழுதிய ‘மனோன்மணீயம்' என்னும் நாடகம்,
    தமிழின் முன்னோடிக் கவிதை நாடகம் என்பதை நாம் மனத்தில்
    கொள்ள வேண்டும்.

    கவிதை நாடகங்களை     எளிய     வடிவில் தரும்
    முயற்சிகளும்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காட்சியமைப்புகள்
    அளவான கதை மாந்தரைக் கொண்டு ஆக்கப்பட்டிருக்கும். எளிய
    கவிதை வரிகளின் மூலம் உரையாடல் அமைக்கப்படும். இத்தகு
    பண்புகளைப் பின்வரும் எடுத்துக்காட்டால் அறிந்து கொள்ளலாம்.

    பூங்கொடி -
    நாடகம்
    (ஆசிரியர் :
    திருச்சி பாரதன்)
    பாத்திரங்கள் :
    பூங்கொடி, மலர்விழி, தமிழண்ணல்,
    கண்ணன்.

    தமிழண்ணல் :
    எதுகை மோனை கீர்த்தனை எல்லாம்
    இதமாய் உனக்கு எழுதிட வருமா?
    பூங்கொடி :
    மரபுக்கவிதை மகிழ்வுடன் நெய்வேன்
    குருவே ஆசி வழங்கிட வேண்டும்.
    தமிழண்ணல் :
    என் தமிழுக்கு நானே தலைவன்
    என்றும் நானே தனிமைக் குணத்தினன்
    என்வழி யாரும் பற்றிடச் சகியோன்
    என்முன் நிற்பதும் இனிநான் விரும்பேன்.
    பூங்கொடி :
    ஆசி நன்றாவது அருளிட வேண்டும்.
    தமிழண்ணல் :
    போலி ஆசி புகன்றிட மாட்டேன்.
    பூங்கொடி :
    பாதம் பற்றிப் பணிந்திட மட்டும்
    வேதமே அனுமதி வழங்கிட வேண்டும்.
    தமிழண்ணல் :
    இக்கணம் அப்பால் ஏகிடு நீயே!
    அக்கினி யாகிட வழி வகுக்காதே!
    பூங்கொடி :
    நன்றி ஐயா!
    தமிழண்ணல் :
    சென்றிடு உடனே!

    (பூங்கொடி : காட்சி:1)

    மேற்குறிப்பிடப் பெற்றுள்ள கவிதை நாடகக் காட்சியில்
    இலக்கியத் தன்மை மிளிரக் காண்கிறோமல்லவா! ஆம்.. கவிதை
    நாடகத்திற்கான அடிப்படைப் பண்புகளில் இது மிகவும்
    குறிப்பிடத்தக்கதாகும்.

    கயற்கண்ணி     (கு.வெ.பாலசுப்பிரமணியன்),     பால்மதி,
    (ஏ.என்.பெருமாள்), முல்லைமாடம்     (ஐசக் அருமைராசன்)
    போன்றன குறிப்பிடத்தக்க கவிதை நாடகங்களாகும்.

    6.3.2 உரைநடை நாடகம்

    இதுவும் நாடகத்தின் நடையைக் கொண்டு அறியப்படும்
    வகையாகும். இவ்வகை     நாடகங்களின் உரையாடல்கள்
    பெரும்பாலும் உரைநடை (prose) வடிவில் ஆக்கப்பட்டிருக்கும்.
    சுருங்கக் கூறின் கவிதை நாடகத்தினின்று இது முற்றிலும்
    மாறுபட்டு விளங்கும்.

    தமிழின் பெரும்பாலான     நாடகங்கள் உரைநடை
    நாடகங்களாகவே விளங்குவதைக் காணலாம். குறிப்பாக,
    மேடையேறுதற்கான நாடகங்களாக உரைநடை நாடகங்களே
    ஏற்றுக்கொள்ளப் படுகின்றன. நம் அன்றாட வாழ்வின்
    வெளிப்பாடு ஆகவும் நாடகம் விளங்குவதால், இயல்பான
    உரைநடை வழக்கே அதிகம் பயின்று வருகிறது. இவ்வகை
    நாடகங்கள் நடப்பியல் கூறுகளைப் படம்பிடிப்பதோடு உணர்வு
    வெளிப்பாட்டிற்கும் உதவுகின்றன.

    உரைநடை நாடகங்களுக்கு     எடுத்துக்காட்டாக இரு
    நாடகங்களின் பெயர்கள் இங்கே தரப்படுகின்றன.

    (எடு) :
    வேலைக்காரி (ஆசிரியர் : சி.என்.அண்ணாதுரை)
    முள்ளில்ரோஜா (ஆசிரியர் : ப.நீலகண்டன்)

    ‘வேலைக்காரி‘ நாடகத்தில் உரையாடல் இடம்பெற்று நிற்கும்
    பாங்கினைக் காண்போம்!

    இடம் :
    வேதாசலம் வீடு
    பாத்திரங்கள் :
    அமிர்தம், சரசா

    அமிர்தம் :
    இந்தாங்க அம்மா, பூ கேட்டீங்களே,கொண்டு
    வந்திருக்கிறேன்.
    சரசா :
    ஏண்டி! இதற்குத்தான் இவ்வளவு நேரமா?
    யாரோட வாயாடிக்கிட்டு இருந்தே? பெரிய
    இடத்துப்பிள்ளை, பாரீஸ், லண்டன் போனவரு.
    . . அவருக்கு இதுதான் பூவோ?
    அமிர்தம் :
    இதுதாம்மா. . . நம்ம தோட்டத்திலே . . . இது
    தானுங்களே இருக்குது?
    சரசா :
    சீ. கழுதை! வாயை மூடு! வர வர பேச்சு
    அதிகமாயில்லை வருது. . இந்தா..
    இதைச்சாப்பிடு (தின்று மிச்ச ஆப்பிள் பழத்தை
    எறிகிறாள். அமிர்தம் விழிக்கிறாள்) ஏண்டி
    விழிக்கிறே! எச்சிலா இருக்கிறது என்று
    பார்க்கிறாயா? ஒன்றுமில்லேடி நான் சாப்பிட்ட
    மிச்சம் அது. இந்தச் சமயத்திலே இதாவது
    கிடைத்தது என்று சந்தோஷப்படாமே. .

    (வேலைக்காரி : காட்சி :28)

    உரையாடல் நாடகங்களில் ஆங்கில மொழிக் கலப்புடன்
    கருத்துப்பரிமாற்றம் நிகழ்த்தப்படுவதைப் பல நாடகங்களில்
    காணலாம். குறிப்பாக, பம்மல் சம்பந்த முதலியாரின் நாடகங்கள்,
    ‘சோ' வின் நாடகங்கள் போன்றவற்றில் இவை மிகுதியாகக்
    காணப்படுகின்றன.

    எடுத்துக்காட்டாக, பம்மல் சம்பந்த முதலியாரின் ‘சபாபதி‘
    நாடகக்காட்சியைக் காண்போம்.

    முருகேசம் : குட் ஈவ்னிங் பிரதர் (good evening Brother)

    சபாபதி முதலியார் :
    குட் ஈவ்னிங் வாங்க வாங்க! - என்னா
    பிரதர், இவ்வளவு லேட்டா (late)
    வந்தைங்களே?     நான்     நாலு
    மணிக்கெல்லாம் வரச் சொன்னேன்!

    (சபாபதி: முதல்காட்சி)

    எனினும், தற்பொழுது பிறமொழிக் கலப்பில்லாமல் நல்ல
    தமிழிலேயே நாடகமாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

    6.3.3 நாட்டிய நாடகம்

    இசை, நடனம் ஆகிய கூறுகள் மிகுதியாக இடம்பெற்று, நடன
    அசைவுகளுக்குச் சிறப்பிடம் தரும் நாடகம் இது. குறிப்பாக நடன
    அசைவுகளைக் கொண்டமைவதால் இது நாட்டிய நாடகம்
    எனப்படுகிறது. பெரும்பாலும் கவிதை நாடக வடிவங்களே
    நாட்டிய நாடகங்களாக உருப் பெறுகின்றன.

    தமிழில் நாட்டிய நாடகங்களின் செயல்பாடு அதிகமாக
    அமையவில்லை. சில திறம்பட்ட நடனக்குழுக்கள் மட்டுமே
    இவ்வகை முயற்சியில் ஆர்வம் காட்டுகின்றன.

    சிவகாமியின் சபதம்,     காவிரி தந்த கலைச்செல்வி,
    கந்தன்காவியம், ஒரு காற்சிலம்பு நியாயம் கேட்கிறது,
    மணிமேகலை, சிலப்பதிகாரம் போன்றன குறிப்பிடத்தக்க நாட்டிய
    நாடகங்களாகும்.

    நாட்டிய நாடகமானது பாடல் வடிவில் கதை கூறிச்செல்லும்
    வகையில் அமைக்கப்பட்டிருக்கும். ஒரு நீளமான இலக்கிய
    வடிவத்தை மிக எளிதாக, சிறிய வடிவில் நாட்டிய நாடகமாக்கிப்
    படைத்தளிக்க இயலும். இது நாட்டிய நாடகத்தின் தனிச்சிறப்பு
    எனவும் கூறலாம்.

    எடுத்துக்காட்டாக ‘ஒரு காற்சிலம்பு நியாயம் கேட்கிறது'
    (திருச்சி பாரதன்) என்னும் நாட்டிய நாடகம் சிலப்பதிகாரத்தை
    அடியொற்றிப் படைக்கப்பட்ட நாடகமாகும். சிலப்பதிகாரத்தின்
    அடிப்படைக் கதையமைப்புச் சிதையாமல் இது சிறப்பாக
    ஆக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்குள் முழுக்கதையையும்
    நாடகமாக்கிட ஏதுவாக இது எழுதப்பட்டுள்ளது. அந்நாடகத்தின்
    ஒரு பகுதியை இங்கு நோக்குவோம்.

    விருத்தம் : கொற்றவை போலே கண்ணகி வந்தாள்

    ஒற்றைச் சிலம்புடனே!
    கொற்றவன் பாண்டியன் முன்னே நின்றாள்
    குமுறும் எரிமலையாய்
    குமுறும் எரிமலையாய்

    நெடுஞ்செழியன் (அமைதியாக).

    கண்களில் பூம்புனல் கொழுந்துவிட்டெரியும் பெண்ணே யார் நீ?

    கண்ணகி :
    யார் நான்? யார் நான்?
    சோழ நன்னாட்டின் மாபெரும் வணிகர்
    மாசாத்துவானின் மருமகள்,
    கோவலன் மனைவி நான். .
    நெடுஞ்செழியன் :
    ஓகோ. . .!
    கள்வனைக் கொல்லுதல் கடுங்கோலன்று!
    கண்ணகி :
    மன்னவனே சொல். . யாரே கள்வன்?
    குற்றமறியா என் கொற்றவனோ கள்வன்?

    (ஒருகாற்சிலம்பு நியாயம் கேட்கிறது: காட்சி 20)



    6.3.4 வானொலி நாடகம்

    ‘வானொலி' என்னும் ஊடகம் வழியாக, காற்றில் பரவி வரும்
    நாடகம் இது. பாத்திரங்களுக்கிடையிலான உரையாடல் பேச்சு
    வடிவில் ஒலிபரப்பப்படுகிறது. நாடக உரையாடல் மூலமாகவே
    முழு நாடகத்தையும் கேட்போர்க்குக் கொண்டுசெல்லும் வகையில்
    வானொலி நாடகம் வடிவமைக்கப் பட்டிருக்கும்.

    படைப்பு நிலையில் வானொலி நாடகம் தனித்தன்மை வாய்ந்த
    கூறுகளைக் கொண்டு விளங்குகின்றது. நாடகத்தின் வெவ்வேறு
    பாத்திரங்களும் வெவ்வேறு கலைஞர்களால் பேசச்செய்து
    வெளிப்படுத்தப்படும். பாத்திரங்களின்     பண்பு நலன்கள்
    பேசுவோரின்     குரல்வளத்திற்கேற்பவும்,     குரல்ஏற்ற
    இறக்கங்களுக்கேற்பவும் மாறுபட்டு வெளிப்படும்.

    நாடகப்பாத்திரங்கள் உரையாடலின் மூலமாக பேசுவோரால்
    உயிர்பெறுகின்றன. காட்சிகளின் சூழல் வெளிப்பாட்டுக்கு
    இசையும் முக்கிய பங்களிப்புச் செய்கிறது.

    வானொலி நாடகத்தின் தன்மையினை ஓர் எடுத்துக்காட்டு
    மூலமாகக் காண்போம்.

    நாடகம் :
    வாசனைப்பூக்கள் (நெல்லை இராஜன்)
    தபால்காரர் :
    முனுசாமி! முனுசாமி!
    முனுசாமி :
    (வீட்டின் வாசல்வரை வந்து) என்ன தபால்
    காரய்யா.
    தபால்காரர் :
    முனுசாமி என்கிறது?
    முனுசாமி :
    நான் தானுங்கோ

    (வாசனைப்பூக்கள் :காட்சி :2)

    மேலே உள்ள உரையாடலில் நாடகப்பாத்திரங்கள் பேச்சு
    வாயிலாக அறிமுகம் ஆவதைக் காண்கிறோம். தபால்காரர்
    முனுசாமியையும், முனுசாமி     தபால்காரரையும் வானொலி
    நேயர்களுக்கு அறிமுகம் செய்கிறார்கள் அல்லவா! இதுதான்
    வானொலி நாடகத்திற்கான     இன்றியமையாத பாத்திர
    அறிமுகக்கூறு. இது போலவே, நாடகக்காட்சிகளில் இடம் பெறும்
    பொருட்கள் மற்றும் காட்சி நடைபெறும் இடம் போன்றவை கூட,
    பாத்திரங்கள் மூலமாகவே வெளிப்படுத்தப்பட்டாக வேண்டும்.
    எடுத்துக்காட்டு மூலம் இதையும் காண்போம்.

    நாடகம் :
    வாசனைப்பூக்கள் (நெல்லை இராஜன்)
    ஏகாம்பரம் :
    ஏலே, முனுசாமி நம்ம ஊருக்குள்ளே கார்
    வருதுலே!
    முனுசாமி :
    ஆமாம் நாட்டாண்மையா! யாரைப்பார்க்க
    வந்திருக்காங்கன்னு தெரியலியே!
    ஏகாம்பரம் :
    ஏதோ! நம்ம ஊருக்குள்ளே கார் வந்து
    இருக்க... அதுவே எனக்குப் பெருமையா
    இருக்லே!
    முனுசாமி :
    நாட்டாண்மையா அதோ பாருங்க, காரு என்
    வீட்டு வாசலிலே நிக்குது.
    ஏகாம்பரம் :
    ஆமலே! காரிலிருந்து ஒரு பொண்ணு
    இறங்குது. கண்ணுல கறுப்புக்கண்ணாடி. .
    பார்க்க ஒரு மாதிரியா இருக்குது. வால போயி
    பார்க்கலாம்.

    (வாசனைப்பூக்கள் : காட்சி :6)

    மேற்கண்ட நாடகக் காட்சியில், காட்சி நடை பெறக்கூடிய
    இடம் ‘ஊர்‘ என்பதையும், காரிலே கறுப்புக்கண்ணாடி அணிந்த
    பெண் வந்திருப்பதையும் பாத்திரங்களே அறிமுகம் செய்வதைக்
    காண்கிறோம். வானொலி மூலம் நாடகம் கேட்போருக்கு இவை
    உரிய காட்சிச் சூழலை உருவாக்கித் தருகின்றன அல்லவா?

    6.3.5 தொலைக்காட்சி நாடகம்

    நாடகமானது பதிவு செய்யப்பெற்று ‘சின்னத்திரை' எனப்படும்
    தொலைக்காட்சி மூலமாக வெளிப்படும் போது, அது
    தொலைக்காட்சி நாடகமாகக் காட்சி தருகிறது. இதனை
    நாடகத்தின்     திரைவடிவம்     என்றும்     கூறலாம்.
    தொலைக்காட்சி நாடகத்தில் நாடகக்காட்சிகளையும், காட்சிப்
    பொருட்களையும் பார்வையாளர் கண்முன் காட்சிப்படுத்துவது
    எளிதாக அமைகிறது. எனவே உரையாடல் சுருக்கமாகவும்,
    கதைக்குத் தேவையான அளவுக்கு ஏற்ற வகையிலும் அமைந்து
    நிற்கிறது. பாத்திர     அறிமுகம்,     காட்சிகள் மற்றும்
    காட்சிப்பொருட்களின் அறிமுகம் யாவும் காட்சிப்படுத்துதல்
    மூலமாகவே செய்யப்படுகின்றன.

    பல நாடகங்கள் இன்றைய நிலையில் தொலைக்காட்சி
    வடிவத்தில் படைக்கப்பட்டு வருவதை நாம் காண்கிறோம்.
    நாடகமேடையை வீட்டுக்குள்ளேயே கொண்டு செல்லும்
    முயற்சியாகவே இஃது அமைகிறது. வரலாறு, சமூகம், தொன்மம்
    எனப் பலவகையான நாடகங்களும் தொலைக்காட்சியில் இடம்
    பெறுகின்றன. சிறுவர்க்கான நாடகங்களும் குறிப்பிடத்தக்க
    அளவில் தொலைக்காட்சி வடிவம் பெறுகின்றன.

    எடுத்துக்காட்டாகப் பின்வரும் தொலைக்காட்சி நாடகக்
    காட்சிப் பகுதியைக் காணலாம். இது சிறுவர்க்கானது.

    நாடகம் :
    நல்ல விளையாட்டு (ஆலந்தூர்
    கோ.மோகனரங்கன்)
    முத்து :
    சரி! இப்போது நான் உங்கள் இருவரையும்
    கேட்கிறேன். கானிலும் இருக்கும் வானிலும்
    இருக்கும்! அது என்ன?
    சந்திரா :
    கானிலே இருக்கும் மிருகங்கள் வானிலே எப்படி
    இருக்க முடியும்?
    வேலன் :
    வானிலே இருக்கும் நட்சத்திரங்கள் கானிலே
    எப்படிடா இருக்க முடியும்?
    முத்து :
    முடியுமா? முடியாதா? என்று நான் உங்களைக்
    கேட்கவில்லை. தெரியுமா? தெரியாதா?
    என்றுதான் கேட்கிறேன்.
    வேலன் :
    (மௌனம்)
    சந்திரா :
    (மௌனம்)
    முத்து :
    நான் சொல்கிறேன். அம்புலி. அம்புலி என்றால்
    சந்திரன். வானில் இருக்கும். அம்புலி என்றால்
    அழகிய புலி. அது கானில் இருக்கும்.

    (நல்ல விளையாட்டு : காட்சி.1)



    6.3.6 குழந்தைகளுக்கான நாடகம்

    குழந்தைகள் (சிறுவர்) மனநிலையை அடிப்படையாகக்
    கொண்டு உருவாக்கப்பெறும் நாடகம் குழந்தைகளுக்கான நாடகம்
    (Children’s drama) எனப்படுகிறது. குழந்தைகளுக்கான புரிதல்
    திறனையும், அறிதல் திறனையும் அடிப்படையாகக் கொண்டு
    இஃது அமைகிறது.

    தமிழகத்திலும் குழந்தைகள் நாடகம் ஆக்கும் முயற்சி
    நடைபெற்று வந்துள்ளது. இவ்வகையில் 1965 ஆம் ஆண்டு
    மேடைஏறப் பெற்ற ‘அப்பாவின் ஆசை‘ (திருச்சி பாரதன்)
    நாடகமும், அதனைத் தொடர்ந்து மேடை ஏறிய ‘பலாப்பழம்‘
    (திருச்சி பாரதன்) நாடகமும் குறிப்பிடத்தக்க குழந்தைகள்
    நாடகங்கள் ஆகும். இவற்றை, தமிழகத்தின் மிகப் பெரிய நாடகக்
    குழுவினரான டி.கே.எஸ். நாடக சபாவின் (தி.க.சண்முகம்
    சகோதரர்கள்) மேடை ஏற்றினர். இவை தமிழகத்தில் பல
    குழந்தைப் பார்வையாளரை ஈர்த்தன. மேலும் தொடர்ந்து பல
    குழந்தைகள் நாடகங்கள் உருவாகத் தூண்டுகோலாக விளங்கின.

    குழந்தைகள் நாடகம் பிற வகை நாடகங்களினின்று முற்றிலும்
    மாறுபட்டதாகும். எளிய நடை, தெளிவான கதையமைப்பு,
    சிக்கலற்ற பாத்திரப்படைப்பு போன்றவை குறிப்பிடத்தக்க
    கூறுகள் ஆகும் குழந்தைகளே முக்கியமான நடிகர்களாகவும்,
    பார்வையாளர்களாகவும் இடம்பெறுவர்.

    குழந்தைகளை மகிழச் செய்யும் வண்ணம் மேடையில்
    படைக்கப்பெற்ற ‘அப்பாவின் ஆசை' நாடகப் பகுதியை
    இப்போது காண்போம்.

    இராமு :
    (ஆத்திரமாக) ஏய் கிரிஜா. . ஏ. . கிரிஜா. . .
    கழுதை. . இங்க வா,
    (இராமு கூச்சலிடுவதைக் கேட்டு கிரிஜா ஓடி
    வருகிறாள்)
    கிரிஜா :
    என்னண்ணா, ஏன் இப்படி புத்தகங்களைக்
    கலைச்சிட்டு இருக்கே?
    இராமு :
    (கோபமாக) கேள்வியா கேட்டுக்கிட்டு இருக்கே.
    எங்கே அந்தப்படம்?
    கிரிஜா :
    எந்தப்படம் அண்ணா?
    இராமு :
    என் அழகு நிலாபடம்.
    கிரிஜா :
    எனக்கு என்ன தெரியும்?
    இராமு :
    அதை வெச்ச இடத்திலே காணோமே.
    கிரிஜா :
    என்னைக் கேட்டா?
    இராமு :
    நீ தான் எடுத்து ஒளித்து வைத்திருக்கிறே. .

    (அப்பாவின் ஆசை : காட்சி : 10)

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 16:12:30(இந்திய நேரம்)