தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).


முல்லை
21. முல்லை
விரைப் பரி வருந்திய வீங்கு செலல்இளையர்
அரைச் செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ,
வேண்டு அமர் நடையர், மென்மெல வருக!
தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்கு
5
ஏமதி, வலவ, தேரே! உதுக் காண்-
உருக்குறு நறு நெய் பால் விதிர்த்தன்ன
அரிக் குரல் மிடற்ற அம் நுண் பல் பொறிக்
காமரு தகைய கானவாரணம்
பெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில்
10
புலரா ஈர் மணல் மலிரக் கெண்டி,
நாள் இரை கவர மாட்டி, தன்
பேடை நோக்கிய பெருந்தகு நிலையே!
வினை முற்றி மீள்வான்தேர்ப்பாகற்குச் சொல்லியது.-மருதன் இளநாகனார்
42. முல்லை
மறத்தற்கு அரிதால்-பாக! பல் நாள்
அறத்தொடு வருந்திய அல்கு தொழில் கொளீஇய
பழ மழை பொழிந்த புது நீர் அவல
நா நவில் பல் கிளை கறங்க, மாண் வினை
5
மணி ஒலி கேளாள், வாணுதல்; அதனால்,
'ஏகுமின்' என்ற இளையர் வல்லே
இல் புக்கு அறியுநராக, மெல்லென
மண்ணாக் கூந்தல் மாசு அறக் கழீஇ,
சில் போது கொண்டு பல் குரல் அழுத்திய
10
அந் நிலை புகுதலின், மெய் வருத்துறாஅ
அவிழ் பூ முடியினள் கவைஇய
மட மா அரிவை மகிழ்ந்து அயர் நிலையே.
வினைமுற்றி மீள்வான் தேர்ப்பாகற்குச் சொல்லியது.-கீரத்தனார்
59. முல்லை
உடும்பு கொலீஇ, வரி நுணல் அகழ்ந்து,
நெடுங் கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி,
எல்லு முயல் எறிந்த வேட்டுவன் சுவல
பல் வேறு பண்டத் தொடை மறந்து, இல்லத்து,
5
இரு மடைக் கள்ளின் இன் களி செருக்கும்
வன் புலக் காட்டு நாட்டதுவே-அன்பு கலந்து
நம்வயின் புரிந்த கொள்கையொடு, நெஞ்சத்து
உள்ளினள் உறைவோள் ஊரே; முல்லை
நுண் முகை அவிழ்ந்த புறவின்
10
பொறை தலை மணந்தன்று; உயவுமார் இனியே.
வினைமுற்றி மீள்வான்தேர்ப்பாகற்குச் சொல்லியது.- கபிலர்
69. முல்லை
பல் கதிர் மண்டிலம் பகல் செய்து ஆற்றி,
சேய் உயர் பெரு வரைச் சென்று, அவண் மறைய,
பறவை பார்ப்புவயின் அடைய, புறவில்
மா எருத்து இரலை மடப் பிணை தழுவ,
5
முல்லை முகை வாய் திறப்ப, பல் வயின்
தோன்றி தோன்றுபு புதல் விளக்கு உறாஅ,
மதர்வை நல் ஆன் மாசு இல் தெண் மணி,
கொடுங் கோல் கோவலர் குழலோடு ஒன்றி,
ஐது வந்து இசைக்கும் அருள் இல் மாலை,
10
ஆள்வினைக்கு அகன்றோர் சென்ற நாட்டும்
இனையவாகித் தோன்றின்,
வினை வலித்து அமைதல் ஆற்றலர்மன்னே!
வினைவயிற் பிரிதல்ஆற்றாளாய தலைவி சொல்லியது.-சேகம்பூதனார்
81. முல்லை
இரு நிலம் குறையக் கொட்டிப்பரிந்தின்று
ஆதி போகிய அசைவு இல் நோன் தாள்,
மன்னர் மதிக்கும் மாண் வினைப் புரவி
கொய்ம் மயிர் எருத்தில் பெய்ம் மணி ஆர்ப்ப,
5
பூண்கதில்-பாக!-நின் தேரே: பூண் தாழ்
ஆக வன முலைக் கரைவலம் தெறிப்ப
அழுதனள் உறையும் அம் மா அரிவை
விருந்து அயர் விருப்பொடு வருந்தினள் அசைஇய
முறுவல் இன் நகை காண்கம்!-
10
உறு பகை தணித்தனன், உரவு வாள் வேந்தே.
வினை முற்றிய தலைவன்தேர்ப்பாகற்கு உரைத்தது.-அகம்பன்மாலாதனார்
89. முல்லை
கொண்டல் ஆற்றி விண்தலைச்செறீஇயர்,
திரைப் பிதிர் கடுப்ப முகடு உகந்து ஏறி,
நிரைத்து நிறை கொண்ட கமஞ் சூல் மா மழை
அழி துளி கழிப்பிய வழி பெயற் கடை நாள்,
5
இரும் பனிப் பருவத்த மயிர்க் காய் உழுந்தின்
அகல் இலை அகல வீசி, அகலாது
அல்கலும் அலைக்கும் நல்கா வாடை,
பரும யானை அயா உயிர்த்தாஅங்கு,
இன்னும் வருமே-தோழி!-வாரா
10
வன்கணாளரோடு இயைந்த
புன்கண் மாலையும் புலம்பும் முந்துறுத்தே!
'பொருள் முற்றி மறுத்தந்தான்' எனக் கேட்ட தோழி தலைவிக்கு உரைத்தது.-இளம் புல்லூர்க் காவிதி
97. முல்லை
அழுந்து படு விழுப் புண் வழும்பு வாய்புலரா
எவ்வ நெஞ்சத்து எஃகு எறிந்தாங்கு,
பிரிவில புலம்பி நுவலும் குயிலினும்,
தேறு நீர் கெழீஇய யாறு நனி கொடிதே;
5
அதனினும் கொடியள் தானே, 'மதனின்
துய்த் தலை இதழ பைங் குருக்கத்தியொடு
பித்திகை விரவு மலர் கொள்ளீரோ?' என
வண்டு சூழ் வட்டியள் திரிதரும்
தண்டலை உழவர் தனி மட மகளே.
பருவம் கண்டு ஆற்றாளாய தலைவி தோழிக்கு உரைத்தது.-மாறன் வழுதி
99. முல்லை
'நீர் அற வறந்த நிரம்பா நீள்இடை,
துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின்,
அஞ்சுவரப் பனிக்கும் வெஞ் சுரம் இறந்தோர்
தாம் வரத் தெளித்த பருவம் காண்வர
5
இதுவோ?' என்றிசின்-மடந்தை!-மதி இன்று,
மறந்து கடல் முகந்த கமஞ் சூல் மா மழை
பொறுத்தல்செல்லாது இறுத்த வண் பெயல்
கார் என்று அயர்ந்த உள்ளமொடு, தேர்வு இல-
பிடவமும், கொன்றையும் கோடலும்-
10
மடவ ஆகலின், மலர்ந்தன பலவே.
பருவம் கண்டு ஆற்றாளாய தலைவியைத் தோழி, 'பருவம் அன்று' என்று வற்புறுத்தியது.-இளந்திரையனார்
121. முல்லை
விதையர் கொன்ற முதையல் பூழி,
இடு முறை நிரப்பிய ஈர் இலை வரகின்
கவைக் கதிர் கறித்த காமர் மடப் பிணை,
அரலை அம் காட்டு இரலையொடு, வதியும்
5
புறவிற்று அம்ம, நீ நயந்தோள் ஊரே:
'எல்லி விட்டன்று, வேந்து' எனச் சொல்லுபு
பரியல்; வாழ்க, நின் கண்ணி!-காண் வர
விரி உளைப் பொலிந்த வீங்கு செலல் கலி மா
வண் பரி தயங்க எழீஇ, தண் பெயற்
10
கான் யாற்று இகுமணற் கரை பிறக்கு ஒழிய,
எல் விருந்து அயரும் மனைவி
மெல் இறைப் பணைத் தோள் துயில் அமர்வோயே!
வினை முற்றி மறுத்தரும்தலைமகற்குத் தேர்ப்பாகன் சொல்லியது.-ஒரு சிறைப்பெரியனார்
142. முல்லை
வான் இகுபு சொரிந்த வயங்கு பெயற்கடை நாள்,
பாணி கொண்ட பல் கால் மெல் உறி
ஞெலி கோல் கலப் பை அதளொடு சுருக்கி,
பறிப் புறத்து இட்ட பால் நொடை இடையன்
5
நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப,
தண்டு கால் வைத்த ஒடுங்கு நிலை மடி விளி
சிறு தலைத் தொழுதி ஏமார்த்து அல்கும்
புறவினதுவே-பொய்யா யாணர்,
அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்,
10
முல்லை சான்ற கற்பின்,
மெல் இயற் குறுமகள் உறைவின், ஊரே.
வினை முற்றி மீளும்தலைமகன், தேர்ப்பாகற்குச் சொல்லியது.-இடைக்காடனார்
161. முல்லை
இறையும், அருந் தொழில் முடித்தென, பொறைய,
கண் போல் நீலம் சுனைதொறும் மலர,
வீ ததர் வேங்கைய வியல் நெடும் புறவின்,
இம்மென் பறவை ஈண்டு கிளை இரிய,
5
நெடுந் தெரு அன்ன நேர் கொள் நெடு வழி,
இளையர் ஏகுவனர் பரிப்ப, வளை எனக்
காந்தள் வள் இதழ் கவிகுளம்பு அறுப்ப,
தோள் வலி யாப்ப, ஈண்டு நம் வரவினைப்
புள் அறிவுறீஇயினகொல்லோ-தெள்ளிதின்
10
காதல் கெழுமிய நலத்தள், ஏதில்
புதல்வற் காட்டிப் பொய்க்கும்
திதலை அல்குல் தேம் மொழியாட்கே?
வினை முற்றிப் பெயரும்தலைவன், தேர்ப்பாகன் கேட்ப, சொல்லியது.
169. முல்லை
'முன்னியது முடித்தனம் ஆயின், நன்னுதல்!
வருவம்' என்னும் பருவரல் தீர,
படும்கொல், வாழி, நெடுஞ் சுவர்ப் பல்லி-
பரற் தலை போகிய சிரற் தலைக் கள்ளி
5
மீமிசைக் கலித்த வீ நறு முல்லை
ஆடு தலைத் துருவின் தோடு தலைப்பெயர்க்கும்
வெண் போழ் தைஇய அலங்கல்அம் தொடலை
மறுகுடன் கமழும் மாலை,
10
சிறுகுடிப் பாக்கத்து எம் பெரு நகரானே.
வினை முற்றி மறுத்தராநின்றான் நெஞ்சிற்கு உரைத்தது.
181. முல்லை
உள் இறைக் குரீஇக் கார் அணற் சேவல்
பிற புலத் துணையோடு உறை புலத்து அல்கி,
வந்ததன் செவ்வி நோக்கி, பேடை
நெறி கிளர் ஈங்கைப் பூவின் அன்ன
5
சிறு பல் பிள்ளையொடு குடம்பை கடிதலின்,
துவலையின் நனைந்த புறத்தது அயலது
கூரல் இருக்கை அருளி, நெடிது நினைந்து,
ஈர நெஞ்சின் தன் வயின் விளிப்ப,
கையற வந்த மையல் மாலை
10
இரீஇய ஆகலின், இன் ஒலி இழந்த
தார் அணி புரவி தண் பயிர் துமிப்ப
வந்தன்று, பெருவிறல் தேரே;
உய்ந்தன்றாகும், இவள் ஆய் நுதற் கவினே.
வினை முற்றிப் புகுந்தது கண்ட தோழி மகிழ்ந்து உரைத்தது.
221. முல்லை
மணி கண்டன்ன மா நிறக் கருவிளை
ஒண் பூந் தோன்றியொடு தண் புதல் அணிய,
பொன் தொடர்ந்தன்ன தகைய நன் மலர்க்
கொன்றை ஒள் இணர் கோடுதொறும் தூங்க,
5
வம்பு விரித்தன்ன செம் புலப் புறவில்,
நீர் அணிப் பெரு வழி நீள் இடைப் போழ,
செல்க-பாக!-நின் செய்வினை நெடுந் தேர்:
விருந்து விருப்புறூஉம் பெருந் தோட் குறுமகள்,
மின் ஒளிர் அவிர் இழை நல் நகர் விளங்க,
10
நடை நாட் செய்த நவிலாச் சீறடிப்
பூங் கட் புதல்வன் உறங்குவயின் ஒல்கி,
'வந்தீக, எந்தை!' என்னும்
அம் தீம் கிளவி கேட்கம் நாமே.
வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகன் பாகற்குச் சொல்லியது.-இடைக்காடனார்
238. முல்லை
வறம் கொல வீந்த கானத்து, குறும் பூங்
கோதை மகளிர் குழூஉ நிரை கடுப்ப,
வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம்,
மாலை அந்தி, மால் அதர் நண்ணிய
5
பருவம் செய்த கருவி மா மழை!
'அவர் நிலை அறியுமோ, ஈங்கு' என வருதல்
சான்றோர்ப் புரைவதோ அன்றே; மான்று உடன்
உர உரும் உரறும் நீரின், பரந்த
பாம்பு பை மழுங்கல் அன்றியும், மாண்ட
10
கனியா நெஞ்சத்தானும்,
இனிய அல்ல, நின் இடி நவில் குரலே.
தலைமகள் பருவம் கண்டு அழிந்தது.-கந்தரத்தனார்
239. நெய்தல்
ஞான்ற ஞாயிறு குடமலை மறைய,
மான்ற மாலை மகிழ்ந்த பரதவர்
இனிது பெறு பெரு மீன் எளிதினின் மாறி,
அலவன் ஆடிய புலவு மணல் முன்றில்
5
காமர் சிறுகுடிச் செல்நெறி வழியின்,
ஆய் மணி பொதி அவிழ்ந்தாங்கு, நெய்தல்
புல் இதழ் பொதிந்த பூத் தப மிதிக்கும்
மல்லல் இருங் கழி மலி நீர்ச் சேர்ப்பற்கு
அமைந்து தொழில் கேட்டன்றோ இலமே; 'முன்கை
10
வார் கோல் எல் வளை உடைய வாங்கி,
முயங்கு' எனக் கலுழ்ந்த இவ் ஊர்
எற்று ஆவதுகொல், யாம் மற்றொன்று செயினே?
தோழி, தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது.-குன்றியனார்
242. முல்லை
இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப,
புதல் இவர் தளவம் பூங் கொடி அவிழ,
பொன் எனக் கொன்றை மலர, மணி எனப்
பல் மலர் காயாங் குறுஞ் சினை கஞல,
5
கார் தொடங்கின்றே காலை; வல் விரைந்து
செல்க-பாக!-நின் தேரே: உவக்காண்-
கழிப் பெயர் களரில் போகிய மட மான்
விழிக் கட் பேதையொடு இனன் இரிந்து ஓட,
காமர் நெஞ்சமொடு அகலா,
10
தேடூஉ நின்ற இரலை ஏறே.
வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகன் கார் கண்டு பாகற்குச் சொல்லியது.-விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார்
248. முல்லை
'சிறு வீ முல்லைத் தேம் கமழ் பசு வீ,
பொறி வரி நல் மான் புகர் முகம் கடுப்ப,
தண் புதல் அணிபெற மலர, வண் பெயல்
கார் வரு பருவம்' என்றனர்மன்-இனி,
5
பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர்,
அன்பு இன்மையின் பண்பு இல பயிற்றும்
பொய் இடி அதிர் குரல் வாய் செத்து ஆலும்
இன மயில் மடக் கணம் போல,
நினை மருள்வேனோ? வாழியர், மழையே!
பருவம் கண்டு ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி மழை மேல் வைத்துப் பருவம் மறுத்தது.-காசிபன் கீரனார்
266. முல்லை
கொல்லைக் கோவலர் குறும்புனம் சேர்ந்த
குறுங் காற் குரவின் குவி இணர் வான் பூ
ஆடுடை இடைமகன் சூடப் பூக்கும்
அகலுள் ஆங்கண் சீறூரேமே;
5
அதுவே சாலும் காமம்; அன்றியும்,
எம் விட்டு அகறிர்ஆயின், கொன் ஒன்று
கூறுவல்-வாழியர், ஐய!-வேறுபட்டு
இரீஇய காலை இரியின்,
பெரிய அல்லவோ, பெரியவர் நிலையே?
தலைமகனைச் செலவுடன்பட்டது; கடிநகர் வரைப்பில் கண்டு மகிழ்ந்த தலைமகற்குத் தோழி 'நும்மாலே ஆயிற்று' என்று சொல்லியதூஉம் ஆம்.-கச்சிப்பேட்டு இளந்தச்சனார்
289. முல்லை
அம்ம வாழி, தோழி!-காதலர்,
நிலம் புடைபெயர்வதாயினும், கூறிய
சொல் புடைபெயர்தலோ இலரே; வானம்
நளி கடல் முகந்து, செறிதக இருளி,
5
கனை பெயல் பொழிந்து, கடுங் குரல் பயிற்றி,
கார் செய்து, என் உழையதுவே; ஆயிடை,
கொல்லைக் கோவலர் எல்லி மாட்டிய
பெரு மர ஒடியல் போல,
அருள் இலேன் அம்ம; அளியேன் யானே.
பிரிவிடைப் பருவம் கண்டு சொல்லியது.- மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்
321. முல்லை
செந் நிலப் புறவின் புன் மயிர்ப் புருவை
பாடு இன் தெள் மணித் தோடு தலைப்பெயர,
கான முல்லைக் கய வாய் அலரி
பார்ப்பன மகளிர் சாரற் புறத்து அணிய,
5
கல் சுடர் சேரும் கதிர் மாய் மாலை,
புல்லென் வறு மனை நோக்கி, மெல்ல
வருந்தும்கொல்லோ, திருந்துஇழை அரிவை?
வல்லைக் கடவுமதி தேரே; சென்றிக,
குருந்து அவிழ் குறும்பொறை பயிற்ற,
10
பெருங் கலி மூதூர் மரம் தோன்றும்மே.
வினை முற்றி மீள்வான் தேர்ப்பாகற்குச் சொல்லியது.-மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
361. முல்லை
சிறு வீ முல்லைப் பெரிது கமழ் அலரி
தானும் சூடினன்; இளைஞரும் மலைந்தனர்;
விசும்பு கடப்பன்ன பொலம் படைக் கலி மா,
படு மழை பொழிந்த தண் நறும் புறவில்,
5
நெடு நா ஒண் மணி பாடு சிறந்து இசைப்ப,
மாலை மான்ற மணம் மலி வியல் நகர்த்
தந்தன நெடுந்தகை தேரே; என்றும்
அரும் படர் அகல நீக்கி,
விருந்து அயர் விருப்பினள், திருந்துஇழையோளே.
வாயில்களோடு தோழி உறழ்ந்து சொல்லியது.-மதுரைப் பேராலவாயர்
364. முல்லை
சொல்லிய பருவம் கழிந்தன்று; எல்லையும்
மயங்கு இருள் நடு நாள் மங்குலோடு ஒன்றி,
ஆர் கலி வானம் நீர் பொதிந்து இயங்க,
பனியின் வாடையொடு முனிவு வந்து இறுப்ப,
5
இன்ன சில் நாள் கழியின், பல் நாள்
வாழலென் வாழி-தோழி!-ஊழின்
உரும் இசை அறியாச் சிறு செந் நாவின்
ஈர் மணி இன் குரல் ஊர் நணி இயம்ப,
பல் ஆ தந்த கல்லாக் கோவலர்
10
கொன்றைஅம் தீம் குழல் மன்றுதோறு இயம்ப,
உயிர் செலத் துனைதரும் மாலை,
செயிர் தீர் மாரியொடு ஒருங்கு தலைவரினே.
தலைமகள் பிரிவிடை மெலிந்தது.-கிடங்கில் காவிதிப் பெருங் கொற்றனார்
367. முல்லை
கொடுங் கண் காக்கைக் கூர் வாய்ப் பேடை
நடுங்கு சிறைப் பிள்ளை தழீஇ, கிளை பயிர்ந்து,
கருங் கண் கருனைச் செந்நெல் வெண் சோறு
சூருடைப் பலியொடு கவரிய, குறுங் கால்
5
கூழுடை நல் மனைக் குழுவின இருக்கும்
மூதில் அருமன் பேர் இசைச் சிறுகுடி
மெல் இயல் அரிவை! நின் பல் இருங் கதுப்பின்
குவளையொடு தொடுத்த நறு வீ முல்லைத்
தளை அவிழ் அலரித் தண் நறுங் கோதை
10
இளையரும் சூடி வந்தனர்: நமரும்
விரி உளை நன் மாக் கடைஇ,
பரியாது வருவர், இப் பனி படு நாளே.
வரவு மலிந்தது-நக்கீரர்
காயாங் குன்றத்துக் கொன்றை போல,
மா மலை விடர் அகம் விளங்க மின்னி,
மாயோள் இருந்த தேஎம் நோக்கி,
வியல் இரு விசும்பு அகம் புதையப் பாஅய்,
5
பெயல் தொடங்கினவே, பெய்யா வானம்:
நிழல் திகழ் சுடர்த் தொடி ஞெகிழ ஏங்கி,
அழல் தொடங்கினளே ஆயிழை; அதன் எதிர்,
குழல் தொடங்கினரே கோவலர்-
தழங்கு குரல் உருமின் கங்குலானே.
வினை முற்றி மறுத்தராநின்றான் பாகற்குச் சொல்லியது.-ஒளவையார்
374. முல்லை
முரம்பு தலை மணந்த நிரம்பா இயவின்
ஓங்கித் தோன்றும் உமண் பொலி சிறுகுடிக்
களரிப் புளியின் காய் பசி பெயர்ப்ப,
உச்சிக் கொண்ட ஓங்கு குடை வம்பலீர்!
5
முற்றையும் உடையமோ மற்றே-பிற்றை
வீழ் மா மணிய புனை நெடுங் கூந்தல்,
நீர் வார் புள்ளி ஆகம் நனைப்ப,
விருந்து அயர் விருப்பினள் வருந்தும்
திருந்துஇழை, அரிவைத் தேமொழி நிலையே?
வினை முற்றி மீள்வான் இடைச் சுரத்துக் கண்டார்க்குச் சொல்லியது.-வன் பரணர்
381. முல்லை
'அருந் துயர் உழத்தலின் உண்மை சான்ம்' எனப்
பெரும்பிறிது இன்மையின் இலேனும் அல்லேன்;
கரை பொருது இழிதரும் கான் யாற்று இகுகரை
வேர் கிளர் மராஅத்து அம் தளிர் போல,
5
நடுங்கல் ஆனா நெஞ்சமொடு, இடும்பை
யாங்கனம் தாங்குவென் மற்றே?-ஓங்கு செலல்
கடும் பகட்டு யானை நெடு மான் அஞ்சி,
ஈர நெஞ்சமோடு இசை சேண் விளங்க,
தேர் வீசு இருக்கை போல,
10
மாரி இரீஇ மான்றன்றால் மழையே.
பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் பருவ வரவின்கண் சொல்லியது.-ஒளவையார்
384. பாலை
பைம் புறப் புறவின் செங் காற் சேவல்
களரி ஓங்கிய கவை முடக் கள்ளி
முளரி அம் குடம்பை ஈன்று, இளைப்பட்ட
உயவு நடைப் பேடை உணீஇய, மன்னர்
5
முனை கவர் முது பாழ் உகு நெற் பெறூஉம்
அரண் இல் சேய் நாட்டு அதர் இடை, மலர்ந்த
நல் நாள் வேங்கைப் பொன் மருள் புதுப் பூப்
பரந்தன நடக்க, யாம் கண்டனம் மாதோ:
காண் இனி வாழி-என் நெஞ்சே!-நாண் விட்டு
10
அருந் துயர் உழந்த காலை
மருந்து எனப்படூஉம் மடவோளையே.
உடன் போகாநின்றான் மலிந்து தன் நெஞ்சிற்குச் சொல்லியது.-பாலை பாடிய பெருங்கடுங்கோ
394. முல்லை
மரந்தலை மணந்த நனந் தலைக் கானத்து,
அலந்தலை ஞெமையத்து இருந்த குடிஞை,
பொன் செய் கொல்லனின், இனிய தெளிர்ப்ப,
பெய்ம் மணி ஆர்க்கும் இழை கிளர் நெடுந் தேர்,
5
வன் பரல் முரம்பின், நேமி அதிர,
சென்றிசின் வாழியோ, பனிக் கடு நாளே;
இடைச் சுரத்து எழிலி உறைத்தென, மார்பின்
குறும் பொறிக் கொண்ட சாந்தமொடு
நறுந் தண்ணியன்கொல்; நோகோ யானே?
வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகனை இடைச் சுரத்துக் கண்டார் சொல்லியது;வன்சொல்லால் குறை நயப்பித்த தோழி தந்து அளித்ததூஉம் ஆம்.-ஒளவையார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:39:11(இந்திய நேரம்)