தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).


பரத்தை

40. மருதம்
நெடு நா ஒள் மணி கடி மனை இரட்ட,
குரை இலைப் போகிய விரவு மணற் பந்தர்,
பெரும்பாண் காவல் பூண்டென, ஒரு சார்,
திருந்துஇழை மகளிர் விரிச்சி நிற்ப,
5
வெறி உற விரிந்த அறுவை மெல் அணைப்
புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச,
ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈரணிப்
பசு நெய் கூர்ந்த மென்மை யாக்கைச்
சீர்கெழு மடந்தை ஈர்-இமை பொருந்த,
10
நள்ளென் கங்குல், கள்வன் போல,
அகன் துறை ஊரனும் வந்தனன்-
சிறந்தோன் பெயரன் பிறந்தமாறே.
தலைமகட்குப் பாங்கு ஆயினார் கேட்பப் பரத்தை சொல்லியது.-கோண்மா நெடுங்கோட்டனார்

100. மருதம்
உள்ளுதொறும் நகுவேன்-தோழி!-வள்உகிர்
மாரிக் கொக்கின் கூரல் அன்ன
குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன்
தேம் கமழ் ஐம்பால் பற்றி, என் வயின்
5
வான் கோல் எல் வளை வௌவிய பூசல்
சினவிய முகத்து, 'சினவாது சென்று, நின்
மனையோட்கு உரைப்பல்' என்றலின், முனை ஊர்ப்
பல் ஆ நெடு நிரை வில்லின் ஒய்யும்
தேர் வண் மலையன் முந்தை, பேர் இசைப்
10
புலம் புரி வயிரியர் நலம் புரி முழவின்
மண் ஆர் கண்ணின் அதிரும்,
நன்னர் ஆளன் நடுங்கு அஞர் நிலையே.
பரத்தை, தலைவிக்குப்பாங்காயினார் கேட்ப, விறலிக்கு உடம்படச்சொல்லியது.-பரணர்

150. மருதம்
நகை நன்கு உடையன்-பாண!-நும் பெருமகன்:
'மிளை வலி சிதையக் களிறு பல பரப்பி,
அரண் பல கடந்த முரண் கொள் தானை
வழுதி, வாழிய பல! எனத் தொழுது, ஈண்டு
5
மன் எயில் உடையோர் போல, அஃது யாம்
என்னதும் பரியலோ இலம்' எனத் தண் நடைக்
கலி மா கடைஇ வந்து, எம் சேரித்
தாரும் கண்ணியும் காட்டி, ஒருமைய
நெஞ்சம் கொண்டமை விடுமோ? அஞ்ச,
10
கண்ணுடைச் சிறு கோல் பற்றிக்
கதம் பெரிது உடையள், யாய்; அழுங்கலோ இலளே.
தலைநின்று ஒழுகப்படா நின்ற பரத்தை தலைவனை நெருங்கிப் பாணற்கு உரைத்தது.-கடுவன் இளமள்ளனார்

176. குறிஞ்சி
எம் நயந்து உறைவி ஆயின், யாம் நயந்து
நல்கினம் விட்டது என்? நலத்தோன் அவ் வயின்
சால்பின் அளித்தல் அறியாது, 'அவட்கு அவள்
காதலள் என்னுமோ?' உரைத்திசின்-தோழி!-
5
நிரைத்த யானை முகத்து வரி கடுப்பப்
போது பொதி உடைந்த ஒண் செங் காந்தள்
வாழை அம் சிலம்பின் வம்பு படக் குவைஇ,
யாழ் ஓர்த்தன்ன இன் குரல் இன வண்டு,
அருவி முழவின் பாடொடு ஒராங்கு,
10
மென்மெல இசைக்கும் சாரல்,
குன்ற வேலித் தம் உறைவின் ஊரே.
பரத்தை தலைவியின் பாங்கிக்குப் பாங்காயினார் கேட்ப, விறலிக்குச் சொல்லியது.

216. மருதம்
துனி தீர் கூட்டமொடு துன்னார் ஆயினும்,
இனிதே, காணுநர்க் காண்புழி வாழ்தல்;
கண்ணுறு விழுமம் கை போல் உதவி,
நம் உறு துயரம் களையார்ஆயினும்,
5
இன்னாதுஅன்றே, அவர் இல் ஊரே;
எரி மருள் வேங்கைக் கடவுள் காக்கும்
குருகு ஆர் கழனியின் இதணத்து ஆங்கண்,
ஏதிலாளன் கவலை கவற்ற,
ஒரு முலை அறுத்த திருமாவுண்ணிக்
10
கேட்டோர் அனையராயினும்,
வேட்டோர் அல்லது, பிறர் இன்னாரே.
தலைமகட்குப் பாங்காயினார் கேட்பத் தலைமகன் தலைநின்று ஒழுகப் படாநின்ற பரத்தை, பாணற்குஆயினும் விறலிக்குஆயினும் சொல்லுவாளாய், நெருங்கிச் சொல்லியது.-மதுரை மருதன் இளநாகனார்

290. மருதம்
வயல் வெள் ஆம்பல் சூடு தரு புதுப் பூக்
கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில்
ஓய்நடை முது பகடு ஆரும் ஊரன்
தொடர்பு நீ வெஃகினை ஆயின், என் சொல்
5
கொள்ளல்மாதோ, முள் எயிற்றோயே!
நீயே பெரு நலத்தையே; அவனே,
'நெடு நீர்ப் பொய்கை நடு நாள் எய்தி,
தண் கமழ் புது மலர் ஊதும்
வண்டு' என மொழிப; 'மகன்' என்னாரே.
பரத்தை விறலிமேல் வைத்துத் தலைமகளை நெருங்கிச் சொல்லியது; பரத்தையிற்பிரிய, வாயிலாய்ப் புக்க பாணன் கேட்ப, தோழி சொல்லியதூஉம் ஆம்.-மதுரை மருதன் இளநாகனார்

310. மருதம்
விளக்கின் அன்ன சுடர் விடு தாமரை,
களிற்றுச் செவி அன்ன பாசடை தயங்க,
உண்துறை மகளிர் இரிய, குண்டு நீர்
வாளை பிறழும் ஊரற்கு, நாளை
5
மகட் கொடை எதிர்ந்த மடம் கெழு பெண்டே!
தொலைந்த நாவின் உலைந்த குறு மொழி
உடன்பட்டு, ஓராத் தாயரொடு ஒழிபுடன்
சொல்லலைகொல்லோ நீயே-வல்லை,
களிறு பெறு வல்சிப் பாணன் கையதை
10
வள் உயிர்த் தண்ணுமை போல,
உள் யாதும் இல்லது ஓர் போர்வைஅம் சொல்லே?
வாயிலாகப் புக்க விறலியைத் தோழி சொல்லியது; விறலியை எதிர்ப்பட்ட பரத்தை சொல்லியதூஉம் ஆம்.-பரணர்

315. நெய்தல்
ஈண்டு பெருந் தெய்வத்து-யாண்டு பல கழிந்தென,
பார்த் துறைப் புணரி அலைத்தலின், புடை கொண்டு,
மூத்து, வினை போகிய முரி வாய் அம்பி,
நல் எருது நடை வளம் வைத்தென, உழவர்
5
புல்லுடைக் காவில் தொழில் விட்டாங்கு,
நறு விரை நன் புகை கொடாஅர், சிறு வீ
ஞாழலொடு கெழீஇய புன்னை அம் கொழு நிழல்
முழவு முதற் பிணிக்கும் துறைவ! நன்றும்
விழுமிதின் கொண்ட கேண்மை நொவ்விதின்
10
தவறும்; நன்கு அறியாய்ஆயின், எம் போல்,
ஞெகிழ் தோள், கலுழ்ந்த கண்ணர்,
மலர் தீய்ந்தனையர், நின் நயந்தோரே.
தலைமகனைப் பரத்தை நொந்து சொல்லியது.- அம்மூவனார்

320. மருதம்
'விழவும் மூழ்த்தன்று; முழவும் தூங்கின்று;
எவன் குறித்தனள்கொல்?' என்றி ஆயின்-
தழை அணிந்து அலமரும் அல்குல், தெருவின்,
இளையோள் இறந்த அனைத்தற்கு, பழ விறல்
5
ஓரிக் கொன்ற ஒரு பெருந் தெருவில்,
காரி புக்க நேரார் புலம்போல்,
கல்லென்றன்றால், ஊரே; அதற்கொண்டு,
காவல் செறிய மாட்டி, ஆய்தொடி
எழில் மா மேனி மகளிர்
10
விழுமாந்தனர், தம் கொழுநரைக் காத்தே.
பரத்தை தனக்குப் பாங்காயினார் கேட்ப, நெருங்கிச் சொல்லியது.-கபிலர்

400. மருதம்
வாழை மென் தோடு வார்புஉறுபு ஊக்கும்
நெல் விளை கழனி நேர் கண் செறுவின்,
அரிவனர் இட்ட சூட்டு அயல், பெரிய
இருஞ் சுவல் வாளை பிறழும் ஊர!
5
நினின்று அமைகுவென்ஆயின், இவண் நின்று,
இன்னா நோக்கமொடு எவன் பிழைப்பு உண்டோ?
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து,
அறம் கெட அறியாதாங்கு, சிறந்த
கேண்மையொடு அளைஇ, நீயே
10
கெடு அறியாய் என் நெஞ்சத்தானே.
பரத்தை தலைவனைப் புகழ்ந்தது. முன்பு நின்று யாதோ புகழ்ந்தவாறு எனின், 'நின் இன்று அமையாம்' என்று சொன்னமையான் என்பது.-ஆலங்குடி வங்கனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:41:22(இந்திய நேரம்)