தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).


மூங்கில் (கழை, வேய்)

7. பாலை
சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க,
பெரு வரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப,
கல் அலைத்து இழிதரும் கடு வரற் கான் யாற்றுக்
கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்ப,
5
தழங்கு குரல் ஏறொடு முழங்கி, வானம்
இன்னே பெய்ய மின்னுமால்-தோழி!
வெண்ணெல் அருந்திய வரி நுதல் யானை
தண் நறுஞ் சிலம்பில் துஞ்சும்
சிறியிலைச் சந்தின வாடு பெருங் காட்டே.
பட்ட பின்றை வரையாது கிழவோன் நெட்டியிடைக் கழிந்து பொருள்வயிற்பிரிய,ஆற்றாளாய தலைவிக்குத்தோழிசொல்லியது.-நல்வெள்ளியார்

28. பாலை
என் கைக் கொண்டு தன் கண்ஒற்றியும்,
தன் கைக் கொண்டு என் நல் நுதல் நீவியும்.
அன்னை போல இனிய கூறியும்,
கள்வர் போலக் கொடியன்மாதோ-
5
மணி என இழிதரும் அருவி, பொன் என
வேங்கை தாய ஓங்கு மலை அடுக்கத்து,
ஆடு கழை நிவந்த பைங் கண் மூங்கில்
ஓடு மழை கிழிக்கும் சென்னி,
கோடு உயர் பிறங்கல், மலைகிழவோனே!
பிரிவின்கண்ஆற்றாளாகிய தலைவிக்குத் தோழி சொல்லியது; குறை நயப்பும் ஆம்.-முதுகூற்றனார்

46. பாலை
வைகல்தோறும் இன்பமும் இளமையும்
எய் கணை நிழலின் கழியும், இவ் உலகத்து;
காணீர் என்றலோ அரிதே; அது நனி
பேணீர் ஆகுவிர்-ஐய! என் தோழி
5
பூண் அணி ஆகம் புலம்ப, பாணர்
அயிர்ப்புக் கொண்டன்ன கொன்றை அம் தீம் கனி,
பறை அறை கடிப்பின், அறை அறையாத் துயல்வர,
வெவ் வளி வழங்கும் வேய் பயில் அழுவத்து,
எவ்வம் மிகூஉம் அருஞ் சுரம் இறந்து,
10
நன் வாய் அல்லா வாழ்க்கை
மன்னாப் பொருட் பிணிப் பிரிதும் யாம் எனவே.
பிரிவு உணர்த்திய தலைமகற்குத் தோழி சொல்லியது.

51. குறிஞ்சி
யாங்குச் செய்வாம்கொல்-தோழி! ஓங்கு கழைக்
காம்புடை விடர் அகம் சிலம்ப, பாம்பு உடன்று
ஓங்கு வரை மிளிர ஆட்டி, வீங்கு செலல்
கடுங் குரல் ஏறொடு கனை துளி தலைஇப்
5
பெயல் ஆனாதே, வானம்; பெயலொடு
மின்னு நிமிர்ந்தன்ன வேலன் வந்தென,
பின்னு விடு முச்சி அளிப்பு ஆனாதே;
பெருந் தண் குளவி குழைத்த பா அடி,
இருஞ் சேறு ஆடிய நுதல, கொல்களிறு
10
பேதை ஆசினி ஒசித்த
வீ ததர் வேங்கைய மலை கிழவோற்கே?
ஆற்றாது ஏதம் அஞ்சி வேறுபட்டாள், வெறியாடலுற்ற இடத்து, சிறைப்புறமாகச்சொல்லியது.-பேராலவாயர்

62. பாலை
வேர் பிணி வெதிரத்துக் கால் பொரு நரல் இசை
கந்து பிணி யானை அயர் உயிர்த்தன்ன
என்றூழ் நீடிய வேய் பயில் அழுவத்து,
குன்று ஊர் மதியம் நோக்கி, நின்று, நினைந்து,
5
உள்ளினென் அல்லெனோ யானே-'முள் எயிற்று,
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல்,
எமதும் உண்டு, ஓர் மதிநாட் திங்கள்,
உரறு குரல் வெவ் வளி எடுப்ப, நிழல் தப
உலவை ஆகிய மரத்த
10
கல் பிறங்கு உயர் மலை உம்பரஃது' எனவே?
முன் ஒரு காலத்துப்பொருள்வயிற் பிரிந்து வந்த தலைவன், பின்னும் பொருள்வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் செலவு அழுங்குவித்தது.-இளங்கீரனார்

82. குறிஞ்சி
நோயும் நெகிழ்ச்சியும் வீடச்சிறந்த
வேய் வனப்புற்ற தோளை நீயே,
என் உயவு அறிதியோ, நல் நடைக் கொடிச்சி!
முருகு புணர்ந்து இயன்ற வள்ளி போல, நின்
5
உருவு கண் எறிப்ப நோக்கல் ஆற்றலெனே-
போகிய நாகப் போக்கு அருங் கவலை,
சிறு கட் பன்றிப் பெருஞ் சின ஒருத்தல்
சேறு ஆடு இரும் புறம் நீறொடு சிவண,
வெள் வசிப் படீஇயர், மொய்த்த வள்பு அழீஇ,
10
கோள் நாய் கொண்ட கொள்ளைக்
கானவர் பெயர்க்கும் சிறுகுடியானே.
தோழியிற்புணர்ச்சிக்கண் தன்னிலைக் கொளீஇயது.-அம்மூவனார்

85. குறிஞ்சி
ஆய் மலர் மழைக் கண் தெண் பனி உறைப்பவும்,
வேய் மருள் பணைத் தோள் விறல் இழை நெகிழவும்,
அம்பல் மூதூர் அரவம் ஆயினும்,
குறு வரி இரும் புலி அஞ்சிக் குறு நடைக்
5
கன்றுடை வேழம் நின்று காத்து அல்கும்,
ஆர் இருள் கடுகிய, அஞ்சு வரு சிறு நெறி
வாரற்கதில்ல-தோழி!-சாரல்
கானவன் எய்த முளவு மான் கொழுங் குறை,
தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி, கிழங்கொடு
10
காந்தள்அம் சிறுகுடிப் பகுக்கும்
ஓங்கு மலை நாடன், நின் நசையினானே!
தலைவன் வரவு உணர்ந்த தோழி தலைவிக்கு உரைத்தது.-நல்விளக்கனார்

95. குறிஞ்சி
கழை பாடு இரங்க, பல் இயம் கறங்க,
ஆடு மகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று,
அதவத் தீம் கனி அன்ன செம் முகத்
துய்த் தலை மந்தி வன் பறழ் தூங்க,
5
கழைக் கண் இரும் பொறை ஏறி விசைத்து எழுந்து,
குறக் குறுமாக்கள் தாளம் கொட்டும் அக்
குன்றகத்ததுவே, குழு மிளைச் சீறூர்;
சீறூரோளே, நாறு மயிர்க் கொடிச்சி;
கொடிச்சி கையகத்ததுவே, பிறர்
10
விடுத்தற்கு ஆகாது பிணித்த என் நெஞ்சே.
தலைமகன் பாங்கற்கு, 'இவ்விடத்து இத்தன்மைத்து' என உரைத்தது.-கோட்டம்பலவனார்

105. பாலை
முளி கொடி வலந்த முள் அரை இலவத்து
ஒளிர் சினை அதிர வீசி, விளிபட
வெவ் வளி வழங்கும் வேய் பயில் மருங்கில்,
கடு நடை யானை கன்றொடு வருந்த,
5
நெடு நீர் அற்ற நிழல் இல் ஆங்கண்
அருஞ் சுரக் கவலைய என்னாய்; நெடுஞ் சேண்
பட்டனை, வாழிய-நெஞ்சே!-குட்டுவன்
குட வரைச் சுனைய மா இதழ்க் குவளை
வண்டு படு வான் போது கமழும்
10
அம் சில் ஓதி அரும் படர் உறவே.
இடைச் சுரத்து மீளலுற்ற நெஞ்சினைத் தலைமகன் கழறியது.-முடத்திருமாறன்

188. குறிஞ்சி
படு நீர்ச் சிலம்பில் கலித்த வாழைக்
கொடு மடல் ஈன்ற கூர் வாய்க் குவி முகை,
ஒள் இழை மகளிர் இலங்கு வளைத் தொடூஉம்
மெல் விரல் மோசை போல, காந்தள்
5
வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப!
'நன்றி விளைவும் தீதொடு வரும்' என,
அன்று நற்கு அறிந்தனள் ஆயின், குன்றத்துத்
தேம் முதிர் சிலம்பில் தடைஇய
வேய் மருள் பணைத் தோள் அழியலள்மன்னே.
பகற்குறி மறுத்து வரைவு கடாயது.

213. குறிஞ்சி
அருவி ஆர்க்கும் பெரு வரை நண்ணி,
'கன்று கால்யாத்த மன்றப் பலவின்
வேர்க் கொண்டு தூங்கும் கொழுஞ் சுளைப் பெரும் பழம்
குழவிச் சேதா மாந்தி, அயலது
5
வேய் பயில் இறும்பின் ஆம் அறல் பருகும்
பெருங் கல் வேலிச் சிறுகுடி யாது?' என,
சொல்லவும் சொல்லீர்; ஆயின், கல்லென
கருவி மா மழை வீழ்ந்தென, எழுந்த
செங் கேழ் ஆடிய செழுங் குரற் சிறு தினைக்
10
கொய் புனம் காவலும் நுமதோ?-
கோடு ஏந்து அல்குல், நீள் தோளீரே!
மதி உடன்படுக்கும் தலைமகன் சொல்லியது.-கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்

294. குறிஞ்சி
தீயும் வளியும் விசும்பு பயந்தாங்கு,
நோயும் இன்பமும் ஆகின்றுமாதோ;
மாயம் அன்று-தோழி!-வேய் பயின்று,
எருவை நீடிய பெரு வரைஅகம்தொறும்,
5
தொன்று உறை துப்பொடு முரண் மிகச் சினைஇக்
கொன்ற யானைக் கோடு கண்டன்ன,
செம் புடைக் கொழு முகை அவிழ்ந்த காந்தள்
சிலம்புடன் கமழும் சாரல்
இலங்கு மலை நாடன் மலர்ந்த மார்பே!
மணமனையுள் புக்க தோழி தலைமகளது கவின் கண்டு சொல்லியது.- புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான்

322. குறிஞ்சி
ஆங்கனம் தணிகுவதுஆயின், யாங்கும்
இதனின் கொடியது பிறிது ஒன்று இல்லை;
வாய்கொல் வாழி-தோழி! வேய் உயர்ந்து,
எறிந்து செறித்தன்ன பிணங்கு அரில் விடர் முகை,
5
ஊன் தின் பிணவின் உயங்கு பசி களைஇயர்,
ஆள் இயங்கு அரும் புழை ஒற்றி, வாள் வரிக்
கடுங் கண் வயப் புலி ஒடுங்கும் நாடன்
தண் கமழ் வியல் மார்பு உரிதினின் பெறாது,
நல் நுதல் பசந்த படர் மலி அரு நோய்
10
அணங்கு என உணரக் கூறி, வேலன்
இன் இயம் கறங்கப் பாடி,
பல் மலர் சிதறிப் பரவுறு பலிக்கே.
தோழி சிறைப்புறமாகச் சொல்லியது; தலைமகள், பாங்கிக்கு உரைத்ததூஉம் ஆம்.-மதுரைப் பாலாசிரியன் சேந்தன் கொற்றனார்

333. பாலை
மழை தொழில் உலந்து, மா விசும்பு உகந்தென,
கழை கவின் அழிந்த கல் அதர்ச் சிறு நெறிப்
பரல் அவல் ஊறல் சிறு நீர் மருங்கின்,
பூ நுதல் யானையொடு புலி பொருது உண்ணும்
5
சுரன் இறந்து, அரிய என்னார், உரன் அழிந்து,
உள் மலி நெஞ்சமொடு வண்மை வேண்டி,
அரும் பொருட்கு அகன்ற காதலர் முயக்கு எதிர்ந்து,
திருந்திழைப் பணைத் தோள் பெறுநர் போலும்;
நீங்குகமாதோ நின் அவலம்-ஓங்குமிசை,
10
உயர் புகழ் நல் இல் ஒண் சுவர்ப் பொருந்தி
நயவரு குரல பல்லி,
நள்ளென் யாமத்து, உள்ளுதொறும் படுமே.
பொருள்வயிற் பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தது.-கள்ளிக் குடிப் பூதம் புல்லனார்

334. குறிஞ்சி
கரு விரல் மந்திச் செம் முகப் பெருங் கிளை
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி,
ஓங்கு கழை ஊசல் தூங்கி, வேங்கை
வெற்பு அணி நறு வீ கற்சுனை உறைப்ப,
5
கலையொடு திளைக்கும் வரைஅக நாடன்-
மாரி நின்ற ஆர் இருள் நடு நாள்,
அருவி அடுக்கத்து, ஒரு வேல் ஏந்தி;
மின்னு வசி விளக்கத்து வருமெனின்,
என்னோ-தோழி!-நம் இன் உயிர் நிலையே?
தோழி இரவுக்குறி முகம் புக்கது.

366. பாலை
அரவுக் கிளர்ந்தன்ன விரவுறு பல் காழ்
வீடுறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும்
திருந்துஇழை அல்குல், பெருந் தோட் குறுமகள்
மணி ஏர் ஐம்பால் மாசு அறக் கழீஇ,
5
கூதிர் முல்லைக் குறுங் கால் அலரி
மாதர் வண்டொடு சுரும்பு பட முடித்த
இரும் பல் மெல் அணை ஒழிய, கரும்பின்
வேல் போல் வெண் முகை விரியத் தீண்டி,
முதுக் குறைக் குரீஇ முயன்று செய் குடம்பை
10
மூங்கில்அம் கழைத் தூங்க, ஒற்றும்
வட புல வாடைக்குப் பிரிவோர்
மடவர் வாழி, இவ் உலகத்தானே!
உலகியல் கூறிப் பொருள்வயிற் பிரிய வலித்த நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.-மதுரை ஈழத்துப் பூதன் தேவனார்

386. குறிஞ்சி
சிறு கட் பன்றிப் பெருஞ் சின ஒருத்தல்,
துறுகட் கண்ணிக் கானவர் உழுத
குலவுக் குரல் ஏனல் மாந்தி, ஞாங்கர்,
விடர் அளைப் பள்ளி வேங்கை அஞ்சாது,
5
கழை வளர் சாரல் துஞ்சும் நாடன்.
'அணங்குடை அருஞ் சூள் தருகுவென்' என நீ,
'நும்மோர் அன்னோர் துன்னார் இவை' என,
தெரிந்து அது வியந்தனென்-தோழி!-பணிந்து நம்
கல் கெழு சிறுகுடிப் பொலிய,
10
வதுவை என்று அவர் வந்த ஞான்றே.
பரத்தையின் மறுத்தந்த தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி தலைமகளை முகம்புகுவல் என முற்பட்டாள், தலைமகள் மாட்டு நின்ற பொறாமை நீங்காமை அறிந்து, பிறிது ஒன்றன்மேல் வைத்து, 'பாவியேன் இன்று பேதைமை செய்தேன்; எம்பெருமாட்டி குறிப

393. குறிஞ்சி
நெடுங் கழை நிவந்த நிழல் படு சிலம்பின்
கடுஞ் சூல் வயப்பிடி கன்று ஈன்று உயங்க,
பால் ஆர் பசும் புனிறு தீரிய, களி சிறந்து,
வாலா வேழம் வணர் குரல் கவர்தலின்,
5
கானவன் எறிந்த கடுஞ் செலல் ஞெகிழி
வேய் பயில் அடுக்கம் சுடர மின்னி,
நிலை கிளர் மீனின், தோன்றும் நாடன்
இரவின் வரூஉம் இடும்பை நாம் உய,
வரைய வந்த வாய்மைக்கு ஏற்ப,
10
நமர் கொடை நேர்ந்தனர்ஆயின், அவருடன்,
நேர்வர்கொல் வாழி-தோழி!-நம் காதலர்
புதுவர் ஆகிய வரவும், நின்
வதுவை நாண் ஒடுக்கமும் காணுங்காலே?
வரைவு மலிந்தது.-கோவூர் கிழார்

394. முல்லை
மரந்தலை மணந்த நனந் தலைக் கானத்து,
அலந்தலை ஞெமையத்து இருந்த குடிஞை,
பொன் செய் கொல்லனின், இனிய தெளிர்ப்ப,
பெய்ம் மணி ஆர்க்கும் இழை கிளர் நெடுந் தேர்,
5
வன் பரல் முரம்பின், நேமி அதிர,
சென்றிசின் வாழியோ, பனிக் கடு நாளே;
இடைச் சுரத்து எழிலி உறைத்தென, மார்பின்
குறும் பொறிக் கொண்ட சாந்தமொடு
நறுந் தண்ணியன்கொல்; நோகோ யானே?
வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகனை இடைச் சுரத்துக் கண்டார் சொல்லியது;வன்சொல்லால் குறை நயப்பித்த தோழி தந்து அளித்ததூஉம் ஆம்.-ஒளவையார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:25:16(இந்திய நேரம்)