தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


வேங்கை

13. குறிஞ்சி
எழாஅஆகலின், எழில் நலம் தொலைய
அழாஅதீமோ, நொதுமலர் தலையே!-
ஏனல் காவலர் மா வீழ்த்துப் பறித்த
பகழி அன்ன சேயரி மழைக் கண்,
5
நல்ல பெருந் தோளோயே! கொல்லன்
எறி பொன் பிதிரின் சிறு பல தாஅய்
வேங்கை வீ உகும் ஓங்கு மலைக் கட்சி
மயில் அறிபு அறியாமன்னோ;
பயில் குரல் கவரும் பைம் புறக் கிளியே.
இயற்கைப்புணர்ச்சியின் பிற்றை ஞான்று, தலைவியின் வேறுபாடு கண்ட தோழி, தலைவி மறைத்தற்குச் சொல்லியது.- கபிலர்

28. பாலை
என் கைக் கொண்டு தன் கண்ஒற்றியும்,
தன் கைக் கொண்டு என் நல் நுதல் நீவியும்.
அன்னை போல இனிய கூறியும்,
கள்வர் போலக் கொடியன்மாதோ-
5
மணி என இழிதரும் அருவி, பொன் என
வேங்கை தாய ஓங்கு மலை அடுக்கத்து,
ஆடு கழை நிவந்த பைங் கண் மூங்கில்
ஓடு மழை கிழிக்கும் சென்னி,
கோடு உயர் பிறங்கல், மலைகிழவோனே!
பிரிவின்கண்ஆற்றாளாகிய தலைவிக்குத் தோழி சொல்லியது; குறை நயப்பும் ஆம்.-முதுகூற்றனார்

51. குறிஞ்சி
யாங்குச் செய்வாம்கொல்-தோழி! ஓங்கு கழைக்
காம்புடை விடர் அகம் சிலம்ப, பாம்பு உடன்று
ஓங்கு வரை மிளிர ஆட்டி, வீங்கு செலல்
கடுங் குரல் ஏறொடு கனை துளி தலைஇப்
5
பெயல் ஆனாதே, வானம்; பெயலொடு
மின்னு நிமிர்ந்தன்ன வேலன் வந்தென,
பின்னு விடு முச்சி அளிப்பு ஆனாதே;
பெருந் தண் குளவி குழைத்த பா அடி,
இருஞ் சேறு ஆடிய நுதல, கொல்களிறு
10
பேதை ஆசினி ஒசித்த
வீ ததர் வேங்கைய மலை கிழவோற்கே?
ஆற்றாது ஏதம் அஞ்சி வேறுபட்டாள், வெறியாடலுற்ற இடத்து, சிறைப்புறமாகச்சொல்லியது.-பேராலவாயர்

112. குறிஞ்சி
விருந்து எவன்செய்கோ-தோழி!-சாரல்
அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கைச்
சுரும்பு இமிர் அடுக்கம் புலம்பக் களிறு அட்டு,
உரும்பு இல் உள்ளத்து அரிமா வழங்கும்
5
பெருங் கல் நாடன் வரவு அறிந்து, விரும்பி,
மாக் கடல் முகந்து, மணி நிறத்து அருவித்
தாழ் நீர் நனந் தலை அழுந்து படப் பாஅய்,
மலை இமைப்பது போல் மின்னி,
சிலை வல் ஏற்றொடு செறிந்த இம் மழைக்கே?
பருவ வரவின்கண்ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.-பெருங்குன்றூர் கிழார்

125.குறிஞ்சி
'இரை தேர் எண்கின் பகு வாய் ஏற்றை
கொடு வரிப் புற்றம் வாய்ப்ப வாங்கி,
நல் அரா நடுங்க உரறி, கொல்லன்
ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து, அகழும்
5
நடு நாள் வருதல் அஞ்சுதும் யாம்' என,
வரைந்து வரல் இரக்குவம் ஆயின், நம் மலை
நல் நாள் வதுவை கூடி, நீடு இன்று
நம்மொடு செல்வர்மன்-தோழி!-மெல்ல
வேங்கைக் கண்ணியர் எருது எறி களமர்
10
நிலம் கண்டன்ன அகன் கண் பாசறை,
மென் தினை நெடும் போர் புரிமார்
துஞ்சு களிறு எடுப்பும் தம் பெருங் கல் நாட்டே.
வரைவு நீட்டிப்ப, ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.

151. குறிஞ்சி
நல் நுதல் பசப்பினும், பெருந் தோள் நெகிழினும்,
கொல் முரண் இரும் புலி அரும் புழைத் தாக்கிச்
செம் மறுக் கொண்ட வெண் கோட்டு யானை
கல் மிசை அருவியின் கழூஉஞ் சாரல்
5
வாரற்கதில்ல-தோழி!-கடுவன்,
முறி ஆர் பெருங் கிளை அறிதல் அஞ்சி,
கறி வளர் அடுக்கத்து, களவினில் புணர்ந்த
செம் முக மந்தி செய்குறி, கருங் கால்
பொன் இணர் வேங்கைப் பூஞ் சினைச் செலீஇயர்,
10
குண்டு நீர் நெடுஞ் சுனை நோக்கிக் கவிழ்ந்து, தன்
புன் தலைப் பாறு மயிர் திருத்தும்
குன்ற நாடன் இரவினானே!
இரவுக்குறிச்சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.-இளநாகனார்

157. பாலை
இருங் கண் ஞாலத்து ஈண்டு தொழில் உதவிப்
பெரும் பெயல் பொழிந்த வழி நாள் அமையத்து,
பல் பொறி அரவின் செல் புறம் கடுப்ப
யாற்று அறல் நுணங்கிய நாட் பத வேனில்,
5
இணர் துதை மாஅத்த புணர் குயில் விளித்தொறும்,
நம்வயின் நினையும் நெஞ்சமொடு, கைம்மிகக்
கேட்டொறும் கலுழுமால் பெரிதே-காட்ட
குறும் பொறை அயல நெடுந் தாள் வேங்கை
அம் பூந் தாது உக்கன்ன
10
நுண் பல் தித்தி மாஅயோளே.
பொருள்வயிற் பிரிந்த தலைவன் பருவம் உணர்ந்த நெஞ்சிற்கு உரைத்தது.-இள வேட்டனார்

168. குறிஞ்சி
சுரும்பு உண விரிந்த கருங் கால் வேங்கைப்
பெருஞ் சினைத் தொடுத்த கொழுங் கண் இறாஅல்,
புள்ளுற்றுக் கசிந்த தீம் தேன் கல் அளைக்
குறக் குறுமாக்கள் உண்ட மிச்சிலைப்
5
புன் தலை மந்தி வன் பறழ் நக்கும்
நன் மலை நாட! பண்பு எனப் படுமோ-
நின் நயந்து உறைவி இன் உயிர் உள்ளாய்,
அணங்குடை அரவின் ஆர் இருள் நடு நாள்,
மை படு சிறு நெறி எஃகு துணை ஆக
10
ஆரம் கமழும் மார்பினை,
சாரற் சிறுகுடி ஈங்கு நீ வரலே?
தோழி இரவுக்குறி மறுத்தது.

222. குறிஞ்சி
கருங் கால் வேங்கைச் செவ் வீவாங்கு சினை
வடுக் கொளப் பிணித்த விடுபுரி முரற்சிக்
கை புனை சிறு நெறி வாங்கி, பையென,
விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப, யான் இன்று,
5
பசுங் காழ் அல்குல் பற்றுவனன் ஊக்கிச்
செலவுடன் விடுகோ-தோழி!-பலவுடன்
வாழை ஓங்கிய வழை அமை சிலம்பில்,
துஞ்சு பிடி மருங்கின் மஞ்சு பட, காணாது,
பெருங் களிறு பிளிறும் சோலை அவர்
10
சேண் நெடுங் குன்றம் காணிய நீயே?
தோழி, தலைமகன் வரவு உணர்ந்து, சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது.-கபிலர்

232. குறிஞ்சி
சிறு கண் யானைப் பெருங் கை ஈர்-இனம்
குளவித் தண் கயம் குழையத் தீண்டி,
சோலை வாழை முணைஇ, அயலது
வேரல் வேலிச் சிறுகுடி அலற,
5
செங் காற் பலவின் தீம் பழம் மிசையும்
மா மலை நாட!-காமம் நல்கென
வேண்டுதும்-வாழிய! எந்தை, வேங்கை
வீ உக வரிந்த முன்றில்,
கல் கெழு பாக்கத்து அல்கினை செலினே.
பகல் வருவானை இரவு வா எனத் தோழி சொல்லியது.-முதுவெங்கண்ணனார்

257. குறிஞ்சி
விளிவு இல் அரவமொடு தளி சிறந்து உரைஇ,
மழை எழுந்து இறுத்த நளிர் தூங்கு சிலம்பின்,
கழை அமல்பு நீடிய வான் உயர் நெடுங் கோட்டு
இலங்கு வெள் அருவி வியன் மலைக் கவாஅன்-
5
அரும்பு வாய் அவிழ்ந்த கருங் கால் வேங்கைப்
பொன் மருள் நறு வீ கல்மிசைத் தாஅம்
நல் மலை நாட!-நயந்தனை அருளாய்,
இயங்குநர் மடிந்த அயம் திகழ் சிறு நெறிக்
கடு மா வழங்குதல் அறிந்தும்,
10
நடு நாள் வருதி; நோகோ யானே.
தோழி தலைமகனது ஏதம் சொல்லி வரைவு கடாயது.-வண்ணக்கன் சோருமருங்குமரனார்

259. குறிஞ்சி
யாங்குச் செய்வாம்கொல்-தோழி!-பொன் வீ
வேங்கை ஓங்கிய தேம் கமழ் சாரல்,
பெருங் கல் நாடனொடு இரும் புனத்து அல்கி,
செவ் வாய்ப் பைங் கிளி ஓப்பி, அவ் வாய்ப்
5
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி,
சாரல் ஆரம் வண்டு பட நீவி,
பெரிது அமர்ந்து இயைந்த கேண்மை சிறு நனி
அரிய போலக் காண்பேன்-விரி திரைக்
கடல் பெயர்ந்தனைய ஆகி,
10
புலர் பதம் கொண்டன ஏனற் குரலே?
தோழி தலைமகளைச் செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது.-கொற்றங் கொற்றனார்

313. குறிஞ்சி
கருங் கால் வேங்கை நாள் உறு புதுப் பூ,
பொன் செய் கம்மியன் கைவினை கடுப்ப,
தகை வனப்புற்ற, கண்ணழி கட்டழித்து,
ஒலி பல் கூந்தல் அணி பெறப் புனைஇ,
5
காண்டற் காதல் கைம்மிக கடீஇயாற்கு
யாங்கு ஆகுவம்கொல்?-தோழி!-காந்தள்
கமழ் குலை அவிழ்ந்த நயவருஞ் சாரல்
கூதள நறும் பொழில் புலம்ப, ஊர்வயின்
மீள்குவம் போலத் தோன்றும்-தோடு புலர்ந்து
10
அருவியின் ஒலித்தல் ஆனா,
கொய்பதம் கொள்ளும், நாம் கூஉம் தினையே.
தோழி சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய், புனம் அழிவு உரைத்து,செறிப்பு அறிவுறீஇயது.-தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்

334. குறிஞ்சி
கரு விரல் மந்திச் செம் முகப் பெருங் கிளை
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி,
ஓங்கு கழை ஊசல் தூங்கி, வேங்கை
வெற்பு அணி நறு வீ கற்சுனை உறைப்ப,
5
கலையொடு திளைக்கும் வரைஅக நாடன்-
மாரி நின்ற ஆர் இருள் நடு நாள்,
அருவி அடுக்கத்து, ஒரு வேல் ஏந்தி;
மின்னு வசி விளக்கத்து வருமெனின்,
என்னோ-தோழி!-நம் இன் உயிர் நிலையே?
தோழி இரவுக்குறி முகம் புக்கது.

373. குறிஞ்சி
முன்றிற் பலவின் படு சுளை மரீஇ,
புன் தலை மந்தி தூர்ப்ப, தந்தை
மை படு மால் வரை பாடினள் கொடிச்சி,
ஐவன வெண்ணெல் குறூஉம் நாடனொடு
5
சூருடைச் சிலம்பின் அருவி ஆடி,
கார் அரும்பு அவிழ்ந்த கணி வாய் வேங்கைப்
பா அமை இதணம் ஏறி, பாசினம்
வணர் குரற் சிறு தினை கடிய,
புணர்வதுகொல்லோ, நாளையும் நமக்கே?
செறிப்பு அறிவுறீஇயது.-கபிலர்

396. குறிஞ்சி
பெய்து போகு எழிலி வைகு மலை சேர,
தேன் தூங்கு உயர் வரை அருவி ஆர்ப்ப,
வேங்கை தந்த வெற்பு அணி நல் நாள்,
பொன்னின் அன்ன பூஞ் சினை துழைஇ,
5
கமழ் தாது ஆடிய கவின் பெறு தோகை
பாசறை மீமிசைக் கணம் கொள்பு, ஞாயிற்று
உறு கதிர் இள வெயில் உண்ணும் நாடன்!
நின் மார்பு அணங்கிய செல்லல் அரு நோய்
யார்க்கு நொந்து உரைக்கோ யானே-பல் நாள்
10
காமர் நனி சொல் சொல்லி,
ஏமம் என்று அருளாய், நீ மயங்கினையே?
தோழி தலைமகனை வரைவு கடாயது; வரைவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய்ச் சொல் லியதூஉம் ஆம்; இரவுக்குறி மறுத்ததூஉம் ஆம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:30:47(இந்திய நேரம்)