Primary tabs
பாடினோர் முதலியவர்களின் வரலாறு
7. புலத்துறைமுற்றிய கூடலூர்கிழார்:-இத்தொகை
நூலைத் தொகுத்த இவர் மலைநாட்டின்
கண்ணதாகிய கூடலூரை இருப்பிடமாக உடையவர்; வேளாண் மரபினர்; இவருடைய பாடல்கள்
இன்சுவையைத் தருபவை; ஒரு விண்மீனின் வீழ்ச்சியைக்கண்டு கோச் சேரமான் யானைக்கட்சேய்
மாந்தரஞ் சேரலிரும்பொறை என்னும் அரசன் இன்ன நாளில் இறப்பானென்று முதலில்
நிச்சயித்திருந்து அவ்வாறே அவன் இறந்தது கண்டு ஒருவாற்றானும் பிரிவாற்றாது
வருந்தினாரென்று, “ஆடியலழற் குட்டத்து” (புறநா. 229) என்னும் பாடலாலும் அதன்
பின்னுள்ள வாக்கியங்களாலும் தெரிதலால், இவர் கணிதத்திலும் வல்லவராகக் கருதப்படுகிறார்.
இவர் மேற்கூறிய அரசனால் மிக ஆதரிக்கப்பெற்றவர்; அவன் வேண்டுகோளால்
ஐங்குறுநூறென்னும் தொகை நூலைத் தொகுத்தனர். இந்நூலின் இறுதி வாக்கியத்தில்
‘புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்’ என ஆன்றோராற் சிறப்பித்துக் கூறப்பெற்றிருத்தலின்,
இவருடைய பெரும்புலமை நன்கு வெளியாகின்றது;இவர் காலத்துப் புலவர்கள் குறுங்கோழியூர்
கிழார், பொருந்தில் இளங்கீரனார் என்பவர்கள். முதுமொழிக்காஞ்சியை இயற்றிய
மதுரைக்
கூடலூர் கிழார் என்பவர் வேறு; இவர் வேறு. இவரியற்றிய பாடல்கள்-4 :
குறுந்.3, புறநா.1.