தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Paripadal-மையோடக் கோவனார்

மையோடக் கோவனார்

7. வையை


வையைப் புனலின் வருகை

திரை இரும் பனிப் பௌவம் செவ்விதா அற முகந்து,
உர உரும் உடன்று ஆர்ப்ப, ஊர் பொறை கொள்ளாது,
கரை உடை குளமெனக் கழன்று, வான் வயிறு அழிபு,
வரைவரை தொடுத்த வயங்கு வெள் அருவி

5

இரவு இருள் பகலாக, இடம் அரிது செலவு என்னாது,
வலன் இரங்கு முரசின் தென்னவர் உள்ளிய
நிலன் உற நிமிர் தானை நெடு நிரை நிவப்பு அன்ன
பெயலாற் பொலிந்து, பெரும் புனல் பல நந்த,
நலன் நந்த, நாடு அணி நந்த, புலன் நந்த,

10

வந்தன்று, வையைப் புனல்.


புனலின் செயல்

நளி இருஞ் சோலை நரந்தம் தாஅய்,
ஒளிர் சினை வேங்கை விரிந்த இணர் உதிரலொடு,
துளியின் உழந்த தோய்வு அருஞ் சிமைதொறும்
வளி வாங்கு சினைய மா மரம் வேர் கீண்டு,

15

உயர்ந்துழி உள்ளன பயம்பிடைப் பரப்பி;
உழவர் களி தூங்க, முழவு பணை முரல,
ஆடல் அறியா அரிவை போலவும்,
ஊடல் அறியா உவகையள் போலவும்,
வேண்டு வழி நடந்து, தாங்கு தடை பொருது;

20

விதி ஆற்றான் ஆக்கிய மெய்க் கலவை போலப்
பொது நாற்றம் உள்உள் கரந்து, புது நாற்றம்
செய்கின்றே, செம் பூம் புனல்.


வெள்ளப் பெருக்கைக் கண்ட மக்களின் செயல்

'கவிழ்ந்த புனலின் கயம் தண் கழுநீர்
அவிழ்ந்த மலர் மீதுற்றென', ஒருசார்;

25

மாதர் மடநல்லார், மணலின் எழுதிய
பாவை சிதைத்தது' என அழ, ஒருசார்;
'அகவயல் இள நெல் அரிகால் சூடு
தொகு புனல் பரந்தெ'னத் துடி பட, ஒருசார்;
'ஓதம் சுற்றியது ஊர்' என, ஒருசார்;

30

'கார் தூம்பு அற்றது வான்' என, ஒருசார்;
'பாடுவார் பாக்கம் கொண்டென,
ஆடுவார் சேரி அடைந்தென,
கழனி வந்து கால் கோத்தென,
பழன வாளை பாளை உண்டென,

35

வித்து இடு புலம் மேடு ஆயிற்றென',
உணர்த்த உணரா ஒள் இழை மாதரைப்
புணர்த்திய இச்சத்துப் பெருக்கத்தின் துனைந்து,
சினை வளர் வாளையின் கிளையொடு கெழீஇ,
பழன உழவர், பாய் புனல் பரத்தந்து.


வையைப் புனலின் வனப்பு

40

இறு வரை புரையுமாறு இரு கரை ஏமத்து,
வரை புரை உருவின் நுரை பல சுமந்து,
பூ வேய்ந்து, பொழில் பரந்து;
துனைந்து ஆடுவார் ஆய் கோதையர்,
அலர் தண் தாரவர், காதில்

45

தளிர் செரீஇ, கண்ணி பறித்து;
கை வளை, ஆழி, தொய்யகம், புனை துகில்,
மேகலை, காஞ்சி, வாகுவலயம்,
எல்லாம் கவரும் இயல்பிற்றாய்: தென்னவன்
ஒன்னார் உடை புலம் புக்கற்றால் மாறு அட்ட

50

தானையான் வையை வனப்பு.


தோழி புனலணி இன்பம் கூறுதல்

புரிந்த தகையினான் யாறு ஆடுவாருள்
துரந்து புனல் தூவ, தூ மலர்க் கண்கள்
அமைந்தன; ஆங்கண், அவருள் ஒருத்தி,
கை புதைஇய வளை

55

ஏக்கழுத்து நாணான் கரும்பின் அணை மென் தோள்
போக்கிச் சிறைப்பிடித்தாள்; ஓர் பொன் அம் கொம்பு
பரிந்து அவளைக் கைப் பிணை நீக்குவான் பாய்வாள்;
இரும்பு ஈர் வடி ஒத்து மை விளங்கும் கண் ஒளியால்
செம்மைப் புதுப் புனல் சென்று இருளாயிற்றே;

60

வையைப் பெருக்கு வடிவு.


தோழி தலைமகன் காதன்மை கூறுதல்

விரும்பிய ஈரணி மெய் ஈரம் தீர,
சுரும்பு ஆர்க்கும் சூர் நறா ஏந்தினாள் கண் நெய்தல்;
பேர் மகிழ் செய்யும் பெரு நறாப் பேணியவே,
கூர் நறா ஆர்ந்தவள் கண்.

65

கண் இயல் கண்டு ஏத்தி, காரிகை நீர் நோக்கினைப்
பாண் ஆதரித்துப் பல பாட; அப் பாட்டுப்
பேணாது ஒருத்தி பேதுற; ஆயிடை,
'என்னை வருவது எனக்கு?' என்று, இனையா,
நன் ஞெமர் மார்பன் நடுக்குற, நண்ணி;

70

சிகை கிடந்த ஊடலின் செங் கண் சேப்பு ஊர,
வகை தொடர்ந்த ஆடலுள் நல்லவர்தம்முள்
பகை தொடர்ந்து, கோதை பரியூஉ, நனி வெகுண்டு,
யாறு ஆடு மேனி அணி கண்ட தன் அன்பன்
சேறு ஆடு மேனி திருநிலத்து உய்ப்ப, சிரம் மிதித்து,

75

தீர்விலதாகச் செருவுற்றாள் செம் புனல்
ஊருடன் ஆடுங்கடை.


தோழி வையையின் நீரணியின்பம் குறித்துக் கூறுதல்

புரி நரம்பு இன் கொளைப் புகல் பாலை ஏழும்
எழூஉப் புணர் யாழும், இசையும், கூட;
குழல் அளந்து நிற்ப; முழவு எழுந்து ஆர்ப்ப;

80

மன் மகளிர், சென்னியர், ஆடல் தொடங்க;
பொருது இழி வார் புனல் பொற்பு அஃது
உரும் இடி சேர்ந்த முழக்கம் புரையும்
திருமருதமுன்துறை சேர் புனற்கண் துய்ப்பார்
தாமம் தலை புனை பேஎம் நீர் வையை!

85

நின் பயம் பாடி விடிவுற்று ஏமாக்க
நின் படிந்து நீங்காமை இன்று புணர்ந்தெனவே.

தலைமகன் தலைமகளோடு புனல் ஆடினான் எனக் கேட்டு இன்புற்ற செவிலித்தாய்,தோழியை, 'நீங்கள் ஆடிய புனலணி இன்பம் கூறுக' என்றாட்கு, அப் புனலணி இன்ப மும், பல்வேறு வகைப்பட்ட இன்பமும், தலைமகன் காதன்மையும், கூறி, 'என்றும் இந்த நீரணி இன்பம் பெறுக, யாம்' என்றது.

மையோடக் கோவனார் பாட்டு
பித்தாமத்தர் இசை
பண்ணுப் பாலையாழ்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 12:25:36(இந்திய நேரம்)