தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

மலை வரை மாலை

மலை வரை மாலை
10. வையை


வையையில் நீர் வருகை

மலைவரை மாலை அழி பெயல் காலை,
செல வரை காணாக் கடல்தலைக் கூட
நில வரை அல்லல் நிழத்த, விரிந்த
பலவுறு போர்வைப் பரு மணல் மூஉய்,
5
வரி அரி ஆணு முகிழ் விரி சினைய
மாந் தீம் தளிரொடு வாழையிலை மயக்கி,
ஆய்ந்து அளவா ஓசை அறையூஉ, பறை அறையப்
போந்தது வையைப் புனல்.


புனலாடும் பொருட்டு மகளிர் வையைக் கரை சேர்தல்

புனல் மண்டி ஆடல் புரிவான், சனம் மண்டி,
10
தாளித நொய்ந் நூல் சரணத்தர், மேகலை
ஏணிப்படுகால் இறுகிறுகத் தாள் இடீஇ,
நெய்த்தோர் நிற அரக்கின் நீரெக்கி யாவையும்
முத்து நீர்ச் சாந்து அடைந்த மூஉய்த் தத்தி;
புக அரும் பொங்குஉளைப் புள் இயல் மாவும்,
15
மிக வரினும் மீது இனிய வேழப் பிணவும்,
அகவரும் பாண்டியும், அத்திரியும், ஆய் மாச்
சகடமும், தண்டு ஆர் சிவிகையும், பண்ணி;
வகை வகை ஊழ் ஊழ் கதழ்பு மூழ்த்து ஏறி;
முதியர், இளையர்: முகைப் பருவத்தர்,
20
வதி மண வம்பு அலர் வாய் அவிழ்ந்தன்னார்
இரு திற மாந்தரும் இன்னினியோரும்
விரவு நரையோரும் வெறு நரையோரும்
பதிவத மாதர், பரத்தையர்; பாங்கர்;
அதிர் குரல் வித்தகர் ஆக்கிய தாள
25
விதி கூட்டிய இய மென் நடை போல,
பதி எதிர் சென்று, பரூஉக் கரை நண்ணி


கரை சேர்ந்த மகளிர் செயல்
அலர்வாய் அவிழ்ந்தன்ன பருவத்தையுடைய கற்புடைமகளிர், பரத்தையர் இவர்களின் செயல்

நீர் அணி காண்போர்; நிரை மாடம் ஊர்குவோர்;
பேர் அணி நிற்போர்; பெரும் பூசல் தாக்குவோர்;
மா மலி ஊர்வோர்; வயப் பிடி உந்துவோர்;
30
வீ மலி கான் யாற்றின் துருத்தி குறுகி,
தாம் வீழ்வார் ஆகம் தழுவுவோர்; தழுவு எதிராது,
யாமக் குறை ஊடல் இன் நசைத் தேன் நுகர்வோர்;
காமக் கணிச்சியால் கையறவு வட்டித்து,
சேமத் திரை வீழ்த்துச் சென்று, அமளி சேர்குவோர்:


முகைப் பருவத்து மகளிரின் செயல்கள்

35
தாம் வேண்டு காதற் கணவர் எதிர்ப்பட,
பூ மேம்பாடு உற்ற புனை சுரும்பின், சேம
மட நடைப் பாட்டியர்த் தப்பி, தடை இறந்து,
தாம் வேண்டும் பட்டினம் எய்திக் கரை சேரும்
ஏமுறு நாவாய் வரவு எதிர்கொள்வார்போல்,
40
யாம் வேண்டும் வையைப் புனல் எதிர்கொள் கூடல்


களிறு, பிடிகளின் ஒத்த அன்பு

ஆங்க அணி நிலை மாடத்து அணி நின்ற பாங்காம்
மடப் பிடி கண்டு, வயக் கரி மால் உற்று,
நடத்த நடவாது நிற்ப; மடப் பிடி,
அன்னம் அனையாரோடு ஆயா நடை, கரிமேல்
45
செல் மனம் மால் உறுப்ப, சென்று; எழில் மாடத்துக்
கை புனை கிளர் வேங்கை காணிய வெருவுற்று,
மை புரை மடப் பிடி, மட நல்லார் விதிர்ப்புற,
செய் தொழில் கொள்ளாது, மதி செத்து, சிதைதர;
கூம் கை மத மாக் கொடுந் தோட்டி கைந் நீவி
50
நீங்கும் பதத்தால், உருமுப் பெயர்த்தந்து
வாங்கி, முயங்கி வயப் பிடி கால்கோத்து,
சிறந்தார் நடுக்கம் சிறந்தார் களையல்
இதையும் கயிறும் பிணையும் இரியச்
சிதையும் கலத்தைப் பயினான் திருத்தும்
55
திசை அறி நீகானும் போன்ம்.


மகளிர், மைந்தர் இவர்கள் செயல்

பருக் கோட்டு யாழ்ப் பக்கம் பாடலோடு ஆடல்
அருப்பம் அழிப்ப, அழிந்த மனக் கோட்டையர்,
ஒன்றோடு இரண்டா முன்தேறார், வென்றியின்,
பல் சனம் நாணிப் பதைபதைப்பு மன்னவர்
60
தண்டம் இரண்டும் தலைஇத் தாக்கி நின்றவை
ஒன்றியும், உடம்பாடு ஒலி எழுதற்கு அஞ்சி,
நின்ற நிகழ்ச்சியும் போன்ம்.
காமம் கனைந்து எழ, கண்ணின் களி எழ,
ஊர் மன்னும் அஞ்சி ஒளிப்பாரவர் நிலை
65
கள்ளின் களி எழக் காத்தாங்கு, அலர் அஞ்சி,
உள்ளம் உளை எழ, ஊக்கத்தான் உள் உள்
பரப்பி மதர் நடுக்கிப் பார் அலர் தூற்றக்
கரப்பார், களி மதரும் போன்ம்.
கள்ளொடு காமம் கலந்து, கரை வாங்கும்
70
வெள்ளம் தரும், இப் புனல்.


மகளிரது நீர் விளையாட்டு

புனல் பொருது மெலிந்தார் திமில் விட,
கனல் பொருத அகிலின் ஆவி கா எழ,
நகில் முகடு மெழுகிய அளறு மடை திறந்து
திகை முழுது கமழ, முகில் அகடு கழி மதியின்
75
உறை கழி வள்ளத்து உறு நறவு வாக்குநர்,
அரவு செறி உவவு மதியென அங்கையில் தாங்கி,
எறி மகர வலயம் அணி திகழ் நுதலியர்,
மதி உண் அரமகளென, ஆம்பல் வாய் மடுப்ப;
மீப்பால் வெண் துகில் போர்க்குநர்; பூப் பால்
80
வெண் துகில் சூழ்ப்பக் குழல் முறுக்குநர்;
செங் குங்குமச் செழுஞ் சேறு,
பங்கம் செய் அகில் பல பளிதம்,
மறுகுபட அறை புரை அறு குழவியின்
அவி அமர் அழலென அரைக்குநர்;
85
நத்தொடு, நள்ளி, நடை இறவு, வய வாளை,
வித்தி அலையில், 'விளைக! பொலிக'! என்பார்;
இல்லது நோக்கி, இளிவரவு கூறாமுன்,
நல்லது வெஃகி, வினை செய்வார்;
மண் ஆர் மணியின் வணர் குரல் வண்டு ஆர்ப்ப,
90
தண் அம் துவர் பல ஊட்டிச் சலம் குடைவார்;
எண்ணெய் கழல இழை துகள் பிசைவார்;
மாலையும் சாந்தும் மதமும் இழைகளும்,
கோலம் கொள, நீர்க்குக் கூட்டுவார்; அப் புனல்
உண்ணா நறவினை ஊட்டுவார்; ஒண் தொடியார்
95
வண்ணம் தெளிர, முகமும் வளர் முலைக்
கண்ணும் கழியச் சிவந்தன; அன்ன வகை
ஆட்டு அயர்ந்து அரி படும் ஐ விரை மாண் பகழி
அரம் தின் வாய் போன்ம் போன்ம் போன்ம்
பின்னும், மலர்க் கண் புனல்.


புனல் விளையாட்டால் மெலியாத மைந்தர் செயல்

100
தண்டித் தண்டின் தாய்ச் செல்வாரும்,
கண்டல் தண் தாது திரை நுரை தூவாரும்,
வெய்ய திமிலின் விரை புனலோடு ஒய்வாரும்,
மெய்யது உழவின் எதிர் புனல் மாறு ஆடிப்
பைய விளையாடுவாரும், மென் பாவையர்
105
செய்த பூஞ் சிற்றடிசில் இட்டு உண்ண ஏற்பார்,
இடுவார் மறுப்பார் சிறுகு இடையார்
பந்தும் கழங்கும் பல களவு கொண்டு ஓடி,
அம் தண் கரை நின்று பாய்வாராய், மைந்தர்
ஒளிறு இலங்கு எஃகொடு வாள் மாறு உழக்கி,
110
களிறு போர் உற்ற களம்போல, நாளும்
தெளிவு இன்று, தீம் நீர்ப் புனல்.


புனலாடி மீண்டவாறு

மதி மாலை மால் இருள் கால் சீப்ப, கூடல்
வதி மாலை, மாறும் தொழிலான், புது மாலை
நாள் அணி நீக்கி, நகை மாலைப் பூ வேய்ந்து,
115
தோள் அணி, தோடு, சுடர் இழை, நித்திலம்;
பாடுவார் பாடல், பரவல், பழிச்சுதல்,
ஆடுவார் ஆடல், அமர்ந்த சீர்ப் பாணி,
நல்ல கமழ் தேன் அளி வழக்கம், எல்லாமும்,
பண் தொடர் வண்டு பரிய எதிர் வந்து ஊத,
120
கொண்டிய வண்டு கதுப்பின் குரல் ஊத,
தென் திசை நோக்கித் திரிதர்வாய்; மண்டு கால் சார்வா,
நளிர் மலைப் பூங்கொடித் தங்குபு உகக்கும்
பனி வளர் ஆவியும் போன்ம், மணி மாடத்து
உள் நின்று தூய பனிநீருடன் கலந்து,
125
கால் திரிய ஆர்க்கும் புகை.


வையையை வாழ்த்துதல்

இலம்படு புலவர் ஏற்ற கை ஞெமரப்
பொலம் சொரி வழுதியின், புனல் இறை பரப்பி,
செய்யில் பொலம் பரப்பும் செய் வினை ஓயற்க
வருந்தாது வரும் புனல் விருந்து அயர் கூடல்,
130
அருங் கறை அறை இசை வயிரியர், உரிமை
ஒருங்கு அமர் ஆயமொடு, ஏத்தினர் தொழவே.


பருவம் கண்டு வன்புறை எதிர் அழிந்த தலைமகளது ஆற்றாமை கண்டு, தோழி தூது விட, சென்ற பாணன், பாசறைக்கண், தலைமகற்குப் பருவ வரவும், வையை நீர் விழவு அணியும், ஆங்குப் பட்ட செய்தியும், கூறியது.

கரும்பிள்ளைப் பூதனார் பாட்டு
மருத்துவன் நல்லச்சுதனார் இசை
பண்ணுப் பாலையாழ்

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 12:31:13(இந்திய நேரம்)