தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

அஞ்சி

அஞ்சி
115. பாலை
அழியா விழவின், அஞ்சுவரு மூதூர்ப்
பழி இலர்ஆயினும், பலர் புறங்கூறும்
அம்பல் ஒழுக்கமும் ஆகியர்; வெஞ் சொல்
சேரிஅம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக;
5
நுண் பூண் எருமை குட நாட்டன்ன என்
ஆய்நலம் தொலையினும் தொலைக; என்றும்
நோய் இலராக, நம் காதலர் வாய் வாள்
எவ்வி வீழ்ந்த செருவில் பாணர்
கைதொழு மரபின் முன் பரித்து இடூஉப் பழிச்சிய
10
வள் உயிர் வணர் மருப்பு அன்ன, ஒள் இணர்ச்
சுடர்ப் பூங் கொன்றை ஊழுறு விளைநெற்று
அறைமிசைத் தாஅம் அத்த நீளிடை,
பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானை,
சினம் மிகு முன்பின், வாம் மான், அஞ்சி
15
இனம் கொண்டு ஒளிக்கும் அஞ்சுவரு கவலை,
நன்னர் ஆய்கவின் தொலைய, சேய் நாட்டு,
நம் நீத்து உறையும் பொருட்பிணிக்
கூடாமையின், நீடியோரே.
பிரிவிடை வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார்
352. குறிஞ்சி
'முடவு முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம்
பல் கிளைத் தலைவன் கல்லாக் கடுவன்,
பாடு இமிழ் அருவிப் பாறை மருங்கின்,
ஆடு மயில் முன்னது ஆக, கோடியர்
5
விழவு கொள் மூதூர் விறலி பின்றை
முழவன் போல அகப்படத் தழீஇ,
இன் துணைப் பயிரும் குன்ற நாடன்
குடி நன்கு உடையன்; கூடுநர்ப் பிரியலன்;
கெடு நா மொழியலன்; அன்பினன்' என, நீ
10
வல்ல கூறி, வாய்வதின் புணர்த்தோய்;
நல்லை; காண், இனி காதல் அம் தோழீஇ!
கடும் பரிப் புரவி நெடுந் தேர் அஞ்சி,
நல் இசை நிறுத்த நயம் வரு பனுவல்,
தொல் இசை நிறீஇய உரை சால் பாண்மகன்
15
எண்ணு முறை நிறுத்த பண்ணினுள்ளும்,
புதுவது புனைந்த திறத்தினும்,
வதுவை நாளினும், இனியனால் எமக்கே.
வரைந்து எய்திய பின்றை மண மனக்கண் சென்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது; வரைவு மலிந்து சொல்லிய தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - அஞ்சியத்தை மகள் நாகையார்
372. குறிஞ்சி
அருந் தெறல் மரபின் கடவுள் காப்ப,
பெருந் தேன் தூங்கும் நாடு காண் நனந்தலை,
அணங்குடை வரைப்பின், பாழி ஆங்கண்,
வேள் முது மாக்கள் வியல் நகர்க் கரந்த
5
அருங் கல வெறுக்கையின் அரியோள் பண்பு நினைந்து,
வருந்தினம்மாதோ எனினும், அஃது ஒல்லாய்,
இரும் பணைத் தொடுத்த பலர் ஆடு ஊசல்,
ஊர்ந்து இழி கயிற்றின், செல வர வருந்தி,
நெடு நெறிக் குதிரைக் கூர் வேல் அஞ்சி
10
கடு முனை அலைத்த கொடு வில் ஆடவர்
ஆடு கொள் பூசலின் பாடு சிறந்து எறியும்,
பெருந் துடி வள்பின் வீங்குபு நெகிழா,
மேய் மணி இழந்த பாம்பின், நீ நனி
தேம்பினை வாழி, என் நெஞ்சே! வேந்தர்
15
கோண் தணி எயிலின் காப்புச் சிறந்து,
ஈண்டு அருங்குரையள், நம் அணங்கியோளே.
அல்லகுறிப்பட்டுப் போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 15:21:32(இந்திய நேரம்)