தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

குட்டுவன்

குட்டுவன்

 

91. பாலை
விளங்குபகல் உதவிய பல் கதிர் ஞாயிறு
வளம் கெழு மா மலை பயம் கெடத் தெறுதலின்,
அருவி ஆன்ற பெரு வரை மருங்கில்
சூர்ச் சுனை துழைஇ நீர்ப்பயம் காணாது,
5
பாசி தின்ற பைங் கண் யானை
ஓய் பசிப் பிடியொடு ஒருதிறன் ஒடுங்க,
வேய் கண் உடைந்த வெயில் அவிர் நனந்தலை
அரும் பொருள் வேட்கையின் அகன்றனர் ஆயினும்,
பெரும் பேர் அன்பினர் தோழி!-இருங் கேழ்
10
இரலை சேக்கும், பரல் உயர் பதுக்கைக்
கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த
நெடுங் கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர்,
விசிபிணி முழவின் குட்டுவன் காப்ப,
பசி என அறியாப் பணை பயில் இருக்கை,
15
தட மருப்பு எருமை தாமரை முனையின்,
முடம் முதிர் பலவின் கொழு நிழல் வதியும்,
குடநாடு பெறினும் தவிரலர்
மடமான் நோக்கி! நின் மாண் நலம் மறந்தே.
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மாமூலனார்

 

212. குறிஞ்சி
தா இல் நல் பொன் தைஇய பாவை
விண் தவழ் இள வெயிற் கொண்டு நின்றன்ன,
மிகு கவின் எய்திய, தொகுகுரல் ஐம்பால்,
கிளைஅரில் நாணற் கிழங்கு மணற்கு ஈன்ற
5
முளை ஓரன்ன முள் எயிற்றுத் துவர் வாய்,
நயவன் தைவரும் செவ்வழி நல் யாழ்
இசை ஓர்த்தன்ன இன் தீம் கிளவி,
அணங்கு சால் அரிவையை நசைஇ, பெருங் களிற்று
இனம் படி நீரின் கலங்கிய பொழுதில்,
10
பெறல் அருங் குரையள் என்னாய், வைகலும்,
இன்னா அருஞ் சுரம் நீந்தி, நீயே
என்னை இன்னற் படுத்தனை; மின்னு வசிபு
உரவுக் கார் கடுப்ப மறலி மைந்துற்று,
விரவு மொழிக் கட்டூர் வேண்டுவழிக் கொளீஇ,
15
படை நிலா இலங்கும் கடல் மருள் தானை
மட்டு அவிழ் தெரியல் மறப் போர்க் குட்டுவன்
பொரு முரண் பெறாஅது விலங்கு சினம் சிறந்து,
செருச் செய் முன்பொடு முந்நீர் முற்றி,
ஓங்குதிரைப் பௌவம் நீங்க ஓட்டிய
20
நீர் மாண் எஃகம் நிறத்துச் சென்று அழுந்தக்
கூர் மதன் அழியரோ நெஞ்சே! ஆனாது
எளியள் அல்லோட் கருதி,
விளியா எவ்வம் தலைத் தந்தோயே.
அல்லகுறிப்பட்டு நீங்கும் தலைமகன் தன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது. -பரணர்

 

270. நெய்தல்
இருங் கழி மலர்ந்த வள் இதழ் நீலம்,
புலாஅல் மறுகின் சிறுகுடிப் பாக்கத்து
இன மீன் வேட்டுவர், ஞாழலொடு மிலையும்
மெல் அம் புலம்ப! நெகிழ்ந்தன, தோளே;
5
சேயிறாத் துழந்த நுரை பிதிர்ப் படு திரை
பராஅரைப் புன்னை வாங்கு சினைத் தோயும்
கானல்அம் பெருந் துறை நோக்கி, இவளே,
கொய் சுவற் புரவிக் கை வண் கோமான்
நல் தேர்க் குட்டுவன் கழுமலத்து அன்ன,
10
அம் மா மேனி தொல் நலம் தொலைய,
துஞ்சாக் கண்ணள் அலமரும்; நீயே,
கடவுள் மரத்த முள் மிடை குடம்பைச்
சேவலொடு புணராச் சிறு கரும் பேடை
இன்னாது உயங்கும் கங்குலும்,
15
நும் ஊர் உள்ளுவை; நோகோ, யானே.
பகற்குறிக்கண் வந்து நீங்கும் தலைமகனைத் தோழி வரைவு கடாயது. -சாகலாசனார்

 

290. நெய்தல்
குடுமிக் கொக்கின் பைங் காற் பேடை,
இருஞ் சேற்று அள்ளல் நாட் புலம் போகிய
கொழு மீன் வல்சிப் புன் தலைச் சிறாஅர்,
நுண் ஞாண் அவ் வலைச் சேவல் பட்டென,
5
அல்குறு பொழுதின் மெல்கு இரை மிசையாது,
பைதல் பிள்ளை தழீஇ, ஒய்யென,
அம் கண் பெண்ணை அன்புற நரலும்
சிறு பல் தொல் குடிப் பெரு நீர்ச் சேர்ப்பன்,
கழி சேர் புன்னை அழி பூங் கானல்,
10
தணவா நெஞ்சமொடு தமியன் வந்து, நம்
மணவா முன்னும் எவனோ தோழி!
வெண் கோட்டு யானை விறற் போர்க் குட்டுவன்
தெண் திரைப் பரப்பின் தொண்டி முன்துறை,
சுரும்பு உண மலர்ந்த பெருந் தண் நெய்தல்
15
மணி ஏர் மாண் நலம் ஒரீஇ,
பொன் நேர் வண்ணம் கொண்ட என் கண்ணே?
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்,தலைமகள் சொல்லியது. - நக்கீரர்

 

376. மருதம்
செல்லல், மகிழ்ந! நிற் செய் கடன் உடையென்மன்
கல்லா யானை கடி புனல் கற்றென,
மலி புனல் பொருத மருது ஓங்கு படப்பை,
ஒலி கதிர்க் கழனி, கழாஅர் முன்துறை,
5
கலி கொள் சுற்றமொடு கரிகால் காண,
தண் பதம் கொண்டு, தவிர்ந்த இன் இசை
ஒண் பொறிப் புனை கழல் சேவடிப் புரள,
கருங் கச்சு யாத்த காண்பின் அவ் வயிற்று,
இரும் பொலம் பாண்டில், மணியொடு தெளிர்ப்ப,
10
புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து,
காவிரி கொண்டு ஒளித்தாங்கும் அன்னோ!
நும்வயின் புலத்தல் செல்லேம்; எம்வயின்
பசந்தன்று, காண்டிசின் நுதலே; அசும்பின்
அம் தூம்பு வள்ளை அழற் கொடி மயக்கி,
15
வண் தோட்டு நெல்லின் வாங்கு பீள் விரிய,
துய்த் தலை முடங்கு இறாத் தெறிக்கும், பொற்புடைக்
குரங்குஉளைப் புரவிக் குட்டுவன்
மரந்தை அன்ன, என் நலம் தந்து சென்மே!
காதற்பரத்தை புலந்து சொல்லியது. - பரணர்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 15:31:46(இந்திய நேரம்)