தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

கரந்தை

கரந்தை
259
ஏறுடைப் பெரு நிரை பெயர்தர, பெயராது,
இலை புதை பெருங் காட்டுத் தலை கரந்து இருந்த
வல் வில் மறவர் ஒடுக்கம் காணாய்;
செல்லல், செல்லல்; சிறக்க, நின் உள்ளம்,
5
முருகு மெய்ப் பட்ட புலைத்தி போலத்
தாவுபு தெறிக்கும் ஆன்மேல்
புடை இலங்கு ஒள் வாள் புனை கழலோயே!
திணை கரந்தை; துறை செரு மலைதல்; பிள்ளைப் பெயர்ச்சியும் ஆம்.
.......................கோடை பாடிய பெரும்பூதனார் பாடியது.

260
வளரத் தொடினும், வௌவுபு திரிந்து,
விளரி உறுதரும் தீம் தொடை நினையா,
தளரும் நெஞ்சம் தலைஇ, மனையோள்
உளரும் கூந்தல் நோக்கி, களர
5
கள்ளி நீழல் கடவுள் வாழ்த்தி,
பசி படு மருங்குலை, கசிபு, கைதொழாஅ,
'காணலென்கொல்?' என வினவினை வரூஉம்
பாண! கேண்மதி, யாணரது நிலையே:
புரவுத் தொடுத்து உண்குவைஆயினும், இரவு எழுந்து
10
எவ்வம் கொள்குவைஆயினும், இரண்டும்,
கையுள் போலும்; கடிது அண்மையவே
முன் ஊர்ப் பூசலின் தோன்றி, தன் ஊர்
நெடு நிரை தழீஇய மீளியாளர்
விடு கணை நீத்தம் துடி புணை ஆக,
15
வென்றி தந்து, கொன்று கோள் விடுத்து,
வையகம் புலம்ப வளைஇய பாம்பின்
வை எயிற்று உய்ந்த மதியின், மறவர்
கையகத்து உய்ந்த கன்றுடைப் பல் ஆன்
நிரையொடு வந்த உரையன் ஆகி,
20
உரி களை அரவம் மான, தானே
அரிது செல் உலகில் சென்றனன்; உடம்பே,
கானச் சிற்றியாற்று அருங் கரைக் கால் உற்று,
கம்பமொடு துளங்கிய இலக்கம் போல,
அம்பொடு துளங்கி ஆண்டு ஒழிந்தன்றே;
25
உயர் இசை வெறுப்பத் தோன்றிய பெயரே,
மடம்சால் மஞ்ஞை அணி மயிர் சூட்டி,
இடம் பிறர் கொள்ளாச் சிறு வழி,
படம் செய் பந்தர்க் கல் மிசையதுவே.
திணை அது; துறை கையறு நிலை; பாண்பாட்டும் ஆம்.
......................வடமோதங் கிழார் பாடியது.

261
அந்தோ! எந்தை அடையாப் பேர் இல்!
வண்டு படு நறவின் தண்டா மண்டையொடு
வரையாப் பெருஞ் சோற்று முரி வாய் முற்றம்,
வெற்று யாற்று அம்பியின் எற்று? அற்று ஆகக்
5
கண்டனென், மன்ற; சோர்க, என் கண்ணே;
வையம் காவலர் வளம் கெழு திரு நகர்,
மையல் யானை அயாவுயிர்த்தன்ன
நெய் உலை சொரிந்த மை ஊன் ஓசை
புதுக்கண் மாக்கள் செதுக்கண் ஆரப்
10
பயந்தனை, மன்னால், முன்னே! இனியே
பல் ஆ தழீஇய கல்லா வல் வில்
உழைக் குரல் கூகை அழைப்ப ஆட்டி,
நாகு முலை அன்ன நறும் பூங் கரந்தை
விரகு அறியாளர் மரபின் சூட்ட,
15
நிரை இவண் தந்து, நடுகல் ஆகிய
வென் வேல் விடலை இன்மையின் புலம்பி,
கொய்ம் மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய
கழி கல மகடூஉப் போலப்
புல்லென்றனையால், பல் அணி இழந்தே.
திணையும் துறையும் அவை.
.....................ஆவூர் மூலங் கிழார் பாடியது.

263
பெருங் களிற்று அடியின் தோன்றும் ஒரு கண்
இரும் பறை இரவல! சேறிஆயின்,
தொழாதனை கழிதல் ஓம்புமதி; வழாது,
வண்டு மேம்படூஉம், இவ் வறநிலை ஆறே
5
பல் ஆத் திரள் நிரை பெயர்தரப் பெயர்தந்து,
கல்லா இளையர் நீங்க நீங்கான்,
வில் உமிழ் கடுங் கணை மூழ்க,
கொல் புனல் சிறையின் விலங்கியோன் கல்லே.
திணை கரந்தை; துறை கையறுநிலை.
......................................................................

264
பரலுடை மருங்கின் பதுக்கை சேர்த்தி,
மரல் வகுந்து தொடுத்த செம் பூங் கண்ணியொடு,
அணி மயில் பீலி சூட்டி, பெயர் பொறித்து,
இனி நட்டனரே, கல்லும்; கன்றொடு
5
கறவை தந்து பகைவர் ஓட்டிய
நெடுந்தகை கழிந்தமை அறியாது,
இன்றும் வரும்கொல், பாணரது கடும்பே?
திணையும் துறையும் அவை.
....................உறையூர் இளம்பொன் வாணிகனார் பாடியது.

265
ஊர் நனி இறந்த பார் முதிர் பறந்தலை,
ஓங்கு நிலை வேங்கை ஒள் இணர் நறு வீப்
போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்து,
பல் ஆன் கோவலர் படலை சூட்ட,
5
கல் ஆயினையே கடு மான் தோன்றல்!
வான் ஏறு புரையும் நின் தாள் நிழல் வாழ்க்கைப்
பரிசிலர் செல்வம் அன்றியும், விரி தார்க்
கடும் பகட்டு யானை வேந்தர்
ஒடுங்கா வென்றியும், நின்னொடு செலவே.
திணையும் துறையும் அவை.
......................சோணாட்டு முகையலூர்ச் சிறு கருந் தும்பியார் பாடியது.

270
பல் மீன் இமைக்கும் மாக விசும்பின்
இரங்கு முரசின், இனம்சால் யானை,
நிலம் தவ உருட்டிய நேமியோரும்
சமங்கண் கூடித் தாம் வேட்பவ்வே
5
நறு விரை துறந்த நாறா நரைத் தலைச்
சிறுவர் தாயே! பேரில் பெண்டே!
நோகோ யானே; நோக்குமதி நீயே;
மறப் படை நுவலும் அரிக் குரல் தண்ணுமை
இன் இசை கேட்ட துன் அரு மறவர்
10
வென்றி தரு வேட்கையர், மன்றம் கொண்மார்,
பேர் அமர் உழந்த வெருவரு பறந்தலை,
விழு நவி பாய்ந்த மரத்தின்,
வாள் மிசைக் கிடந்த ஆண்மையோன் திறத்தே.
திணை கரந்தை; துறை கையறு நிலை.
(கண்டார் தாய்க்குச் சொல்லியது)
கழாத்தலையார் பாடியது.

286
வெள்ளை வெள் யாட்டுச் செச்சை போலத்
தன் ஓரன்ன இளையர் இருப்ப,
பலர் மீது நீட்டிய மண்டை என் சிறுவனைக்
கால் கழி கட்டிலில் கிடப்பி,
5
தூ வெள் அறுவை போர்ப்பித்திலதே!
திணை கரந்தை; துறை வேத்தியல்.
ஒளவையார் பாடியது.

287
துடி எறியும் புலைய!
எறி கோல் கொள்ளும் இழிசின!
காலம் மாரியின் அம்பு தைப்பினும்,
வயல் கெண்டையின் வேல் பிறழினும்,
5
பொலம் புனை ஓடை அண்ணல் யானை
இலங்கு வால் மருப்பின் நுதி மடுத்து ஊன்றினும்,
ஓடல் செல்லாப் பீடுடையாளர்
நெடு நீர்ப் பொய்கைப் பிறழிய வாளை
நெல்லுடை நெடு நகர்க் கூட்டுமுதல் புரளும்,
10
தண்ணடை பெறுதல் யாவது? படினே,
மாசு இல் மகளிர் மன்றல் நன்றும்,
உயர் நிலை உலகத்து, நுகர்ப; அதனால்
வம்ப வேந்தன் தானை
இம்பர் நின்றும் காண்டிரோ, வரவே!
திணை கரந்தை; துறை நீண்மொழி.
சாத்தந்தையார் பாடியது.

290
இவற்கு ஈத்து உண்மதி, கள்ளே; சினப் போர்
இனக் களிற்று யானை, இயல் தேர்க் குருசில்!
நுந்தை தந்தைக்கு இவன் தந்தை தந்தை,
எடுத்து எறி ஞாட்பின் இமையான், தச்சன்
5
அடுத்து எறி குறட்டின், நின்று மாய்ந்தனனே;
மறப் புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும்,
உறைப்புழி ஓலை போல,
மறைக்குவன் பெரும! நிற் குறித்து வரு வேலே.
திணை கரந்தை; துறை குடிநிலை உரைத்தல்.
ஒளவையார் பாடியது.

291
சிறாஅஅர்! துடியர்! பாடு வல் மகாஅஅர்!
தூ வெள் அறுவை மாயோற் குறுகி,
இரும் புள் பூசல் ஓம்புமின்; யானும்,
விளரிக் கொட்பின், வெள் நரி கடிகுவென்;
5
என் போல் பெரு விதுப்புறுக, வேந்தே
கொன்னும் சாதல் வெய்யோற்குத் தன் தலை
மணி மருள் மாலை சூட்டி, அவன் தலை
ஒரு காழ் மாலை தான் மலைந்தனனே!
திணை அது; துறை வேத்தியல்.
நெடுங்கழுத்துப் பரணர் பாடியது.

298
எமக்கே கலங்கல் தருமே; தானே
தேறல் உண்ணும் மன்னே; நன்றும்
இன்னான் மன்ற வேந்தே, இனியே
நேரார் ஆர் எயில் முற்றி,
5
வாய் மடித்து உரறி, 'நீ முந்து' என்னானே.
திணை கரந்தை; துறை நெடுமொழி.
ஆலியார் பாடியது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 23:32:45(இந்திய நேரம்)