தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பகன்றை

பகன்றை
16
வினை மாட்சிய விரை புரவியொடு,
மழை உருவின தோல் பரப்பி,
முனை முருங்கத் தலைச் சென்று, அவர்
விளை வயல் கவர்பூட்டி,
5
மனை மரம் விறகு ஆகக்
கடி துறை நீர்க் களிறு படீஇ,
எல்லுப் பட இட்ட சுடு தீ விளக்கம்
செல் சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்ற,
புலம் கெட இறுக்கும் வரம்பு இல் தானை,
10
துணை வேண்டாச் செரு வென்றி,
புலவு வாள், புலர் சாந்தின்,
முருகற் சீற்றத்து, உரு கெழு குருசில்!
மயங்கு வள்ளை, மலர் ஆம்பல்,
பனிப் பகன்றை, கனிப் பாகல்,
15
கரும்பு அல்லது காடு அறியாப்
பெருந் தண் பணை பாழ் ஆக,
ஏம நல் நாடு ஒள் எரி ஊட்டினை,
நாம நல் அமர் செய்ய,
ஓராங்கு மலைந்தன, பெரும! நின் களிறே.
திணை வஞ்சி; துறை மழபுலவஞ்சி.
சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியைப் பாண்டரங் கண்ணனார் பாடியது.

235
சிறிய கள் பெறினே, எமக்கு ஈயும்; மன்னே!
பெரிய கள் பெறினே,
யாம் பாட, தான் மகிழ்ந்து உண்ணும்; மன்னே!
சிறு சோற்றானும் நனி பல கலத்தன்; மன்னே!
5
பெருஞ் சோற்றானும் நனி பல கலத்தன்; மன்னே!
என்பொடு தடி படு வழி எல்லாம் எமக்கு ஈயும்; மன்னே!
அம்பொடு வேல் நுழை வழி எல்லாம் தான் நிற்கும்; மன்னே!
நரந்தம் நாறும் தன் கையால்,
புலவு நாறும் என் தலை தைவரும்; மன்னே!
10
அருந் தலை இரும் பாணர் அகல் மண்டைத் துளை உரீஇ,
இரப்போர் கையுளும் போகி,
புரப்போர் புன்கண் பாவை சோர,
அம் சொல் நுண் தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்று வீழ்ந்தன்று, அவன்
15
அரு நிறத்து இயங்கிய வேலே!
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்கொல்லோ?
இனி, பாடுநரும் இல்லை; பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை;
பனித் துறைப் பகன்றை நறைக் கொள் மாமலர்
சூடாது வைகியாங்கு, பிறர்க்கு ஒன்று
20
ஈயாது வீயும் உயிர் தவப் பலவே!
திணையும் துறையும் அவை.
அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.

393
பதிமுதல் பழகாப் பழங்கண் வாழ்க்கைக்
குறு நெடுந் துணையொடு கூமை வீதலின்,
குடி முறை பாடி, ஒய்யென வருந்தி,
அடல் நசை மறந்த எம் குழிசி மலர்க்கும்
5
கடன் அறியாளர் பிற நாட்டு இன்மையின்,
'வள்ளன்மையின் எம் வரைவோர் யார்?' என,
உள்ளிய உள்ளமொடு உலை நசை துணையா,
.................... கவகம் எல்லாம் ஒருபால் பட்டென,
மலர் தார் அண்ணல் நின் நல் இசை உள்ளி,
10
ஈர்ங்கை மறந்த என் இரும் பேர் ஒக்கல்
கூர்ந்த எவ்வம் விட, கொழு நிணம் கிழிப்ப,
கோடைப் பருத்தி வீடு நிறை பெய்த
மூடைப் பண்டம் மிடை நிறைந்தன்ன,
வெண் நிண மூரி அருள, நாள் உற
15
ஈன்ற அரவின் நா உருக் கடுக்கும் என்
தொன்று படு சிதாஅர் துவர நீக்கி,
போது விரி பகன்றைப் புது மலர் அன்ன,
அகன்று மடி கலிங்கம் உடீஇ, செல்வமும்,
கேடு இன்று நல்குமதி, பெரும! மாசு இல்
20
மதி புரை மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி,
ஆடுமகள் அல்குல் ஒப்ப வாடி,
'கோடை ஆயினும், கோடி...............................
காவிரி புரக்கும் நல் நாட்டுப் பொருந!
வாய் வாள் வளவன்! வாழ்க! எனப்
25
பீடு கெழு நோன் தாள் பாடுகம் பலவே.
திணையும் துறையும் அவை.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை நல்லிறையனார் பாடியது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 02:28:29(இந்திய நேரம்)