தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kainilai-முன்னுரை


முன்னுரை

அமிழ்தினும் இனிய நம் தமிழ் மொழி யிலக்கியங்களிற் சிறந்தன சங்ககால இலக்கியங்கள் எனச் சாற்றுவர் புலவர். அவை பத்துப்பாட்டு, எட்டுத்தொகை பதினெண் கீழ்க்கணக்கு எனப்பெயர்பெறும். பத்துப்பாட்டு இன்ன இன்ன என அறிவதற்கு "முருகு பொருநாறு" என்ற வெண்பாத் துணை புரிகின்றது. எட்டுத்தொகை நூல்களை "நற்றிணை நல்ல" என்ற வெண்பா எடுத்துக் காட்டுகின்றது. அவ் வெண்பாக்களிற் கூறிய முறைப்படியே தொகுக்கப்பட்டுப் பின்னர் அச்சிற் பதிக்கப்பட்டு அவைகள் உலவுகின்றன. பண்டைக்காலப் பாவலர் பாடிய பாக்கள் தாம் எனத் துணிவதற்கு அந் நூல்களிலுள்ள கவி ஒவ்வொன்றும் சான்றாம். கற்றுவல்ல சான்றோர் அவற்றில் ஒன்றையேனும் பழங்காலத்தது அன்று எனப் பகர்வாரிலர். பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் முழுவதும் அவ்வாறு தெளிவுறப் பதிந்து வெளிவந்தில, வந்தவை சில அக்காலத்தின வல்லவெனத் துணிவதற்கு அவ்வந் நூற்கவிகள் சான்றாய்த் தோன்றா நின்றன. திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, கார்நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணையைம்பது, திணை மொழியைம்பது, ஐந்திணையெழுபது, திணைமாலை நூற்றைம்பது, பழமொழி நானூறு ஆகிய நூற்கவிகள் பண்டைக் காலத்தன வென்னலாம். கற்றோர்க்குக் கருத்து வேறுபாடு தோன்றாது. மற்றை நூற்கவிகளை நோக்கின் ஐயமே உள்ளத்திலெழும், துணிவு பிறவாது. இது நிற்க. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் எண்ணு முறையுங் காட்டும் ஒரு வெண்பாவும் இதுகாறும் ஐயத்திற்கிடமாகவே உள்ளது. நாலடி நான் மணி நானாற்ப தைந்திணைமுப், பால் கடுகங்கோவை பழமொழி-மாமூலம், இன்னிலை காஞ்சியுடனேலாதி யென்பவே, கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு."


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 05:17:03(இந்திய நேரம்)