Primary tabs
பதிப்புரை
செந்தமிழ் மொழி நூல்கள் ஒவ்வொன்றையும் தேடியெடுத்து நன் முறையில் ஆய்ந்துபிழையின்றித் தெளிவாக விளங்குமாறு நல்லுரை வரைந்து புதுமையாக அச்சிற்பித்து வெளியிட வேண்டும் என்பதே கழகத்தின் நோக்கமாகும். இதுகாறும் எட்டுத் தொகை பத்துப் பாட்டு முதலிய சங்கத் தமிழ் நூல்கள், சீவகசிந்தாமணி, பெருங்கதை முதலிய புராணங்கள் கழகவாயிலாக வெளிவந்தவற்றைக் கண்டார்க்கு இவ்வுண்மை புலனாகும். அம்முறையிற் பதினென் கீழ்க்கணக்கு நூல்கள் ஒவ்வொன்றும் நல்லுரையுடன் வெளிவந்துலவுகின்றன. பதினேழு நூல்களைக் காண்பீர்கள்; பதினெட்டாவது நூல் இன்னது எனத் துணிவின்றிப் புலவருலகம் மயங்குகிறது. "நாலடி நான்மணி" என்ற வெண்பாவின் பாடவேறுபாடு இம்மயக்கத்திற்குக் காரணமாம். இதனை இந்நூலின் முன்னுரையிற் காண்க. துணிவாக ஒன்றைத் தேர்ந்தெடுத்த பின்னர் உரையெழுதி வெளியிடக் கருதிக் காலந் தாழ்த்திருந்தும் பயனின்றாய் முடிந்தது. இன்னிலையும், கைந் நிலையும், பதினெட்டாம் நூல் எனப் புலவருலகம் எண்ண ஏட்டிலிருந்து கொண்டுவந்து காட்டிப் பதித்து வெளியிட்டனர் இருசான்றோர். எதனைக் கொள்ளுவது எதனைத் தள்ளுவது என மயங்கி நிற்கும் காலம் இது.
இவ்வமையத்தில் இவ்விரு நூல்களையும் ஆய்ந்து உரையெழுதுவித்துப் பதித்து வெளியிடின் புலவர் பலரும் இரண்டின் வரலாறு, அருமை, பெருமை, சொல்லின்பம், பொருளின்பம் கண்டு இது சிறந்தது அது சிறந்தது என ஆராய்ந்தறிந்து ஒன்றைத் தேர்ந்து பதினெண் கீழ்க்கணக்கின்