Primary tabs
வினைகள், காதி அகாதி என இரண்டு வகைப்படும். அவை ஒவ்வொன்றும் நான்கு பிரிவினை யுடையதாக, வினைகள் எட்டாகும். எண்வினைகளுள், ஒளியை மறைக்கும் இருள் போல உயிரின்இயற்கைக்குணமான அறிவை விளங்க வொட்டாது தடுப்பது ஞானாவரணீயம் என்றும், காட்சியை விளங்க வொட்டாது தடுப்பது தரிசனாவரணீயம் என்றும், தேனையும் விஷத்தையும் பூசப்பெற்றவாளாயுதத்தின் இரண்டு வாயிலும் முறையே நா வைத்து அறுபட்டவன் அடையும் இன்ப துன்பம் போலப் பிறவியின் சுக துக்கத்தை
அளிப்பது வேதனீயம் என்றும், கள்குடித்தவனைப்போல
உண்மைப்பொருள்களை அறியவொட்டாது மயங்கச் செய்வது மோஹநீயம் என்றும்,காலிற் பூட்டிய இருப்புத்தளை போலக் கதிகளில் தங்கச் செய்வது ஆயுஷ்ய கருமம் என்றும், ஓர் ஓவியன், பல சித்திரங்கள் வரைந்தாற் போன்று உடலின் உருவம் முதலியனஅமையச் செய்வது நாமகருமம் என்றும், சிறிதும் பெரிதுமாகிய பாண்டங்களைச் செய்யுங் குயவனைப் போல உச்சநீசக் குலங்களிற் பிறக்கச் செய்வது கோத்திரகருமம் என்றும், பிறர் துய்க்க வொட்டாது தடுக்குங் காவற் காரனைப் போலப் போகம் முதலிய சுகம் அடைய வொட்டாது தடுப்பது அந்தராயகருமம் என்றும் சொல்லப்படும். இவ்விஷயத்தை வாமன முனிவர்(மேரு. 613,4-.ல்) கூறி யிருப்பதனாலும் அறியலாகும். இவ் வெண் வினைகளும் உட்பிரிவினால் நூற்று நாற்பத்தெட்டாகும். இதனை‘காதியகாதியும் நூற்று நாற்பத்தெட்டு கர்மங் கெடுத்தமணியே‘ எனபதனாலு முணரலாகும். அவை வருமாறு.