தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Kachchik Kalambagam-என்னெஞ் - 44




தூது (நெஞ்சு)

நேரிசை வெண்பா

      என்னெஞ் சினுமினியார் இல்லையென எண்ணியதைத்
      துன்னற் கருங்கச்சித் தூயவர்பால் - இன்னலறப்
      பூங்கொன்றைத் தாரிரக்கப் போதி யெனவிடுத்தேன்
      தீங்கொன்றைச் சூழ்ந்திலா தேன்.                        (44)


(இ-ள்.) என்னெஞ்சினும் - என் நெஞ்சைக் காட்டிலும், இனியார் - எனக்கு இனிமையைச் செய்பவர், இல்லை என எண்ணி - இல்லை என்று நினைந்து, அதை - அந்த நெஞ்சினை, துன்னற்கு அரு - நெருங்குதற்கரிய, கச்சித் தூயவர்பால் - காஞ்சிபுரத்தில் எழுந்தருளிய குற்றமற்ற நற்றிறம் உற்றாராகிய ஏகாம்பரநாதரிடத்து, இன்னல் அற - எனது துன்பம் ஒழிய, கொன்றை பூ தார் - கொன்றைப் பூவால் ஆகிய மாலையை, இரக்கப் போதியென - பணிந்து வாங்கி வரப்போவாய் என்று, தீங்கு ஒன்றைச் சூழ்ந்திலாதேன் - அங்ஙனம் அனுப்புவதால் வரும் தீங்கு ஒன்றையும் ஆராய்ந்தறியாத யான், விடுத்தேன் - அதனை அனுப்பினேன் (என் அறியாமை இருந்தவாறு என்னே!)

கொன்றை மாலை: திருவரங்கக் கலம்பகம் (24) நோக்குக.

‘இன்னல் அற’ என்றது, தலைவனைப் பிரிந்து வருந்தி நின்ற தலைவிக்கு அத்தலைவன் அணியும் மாலையைப் பெற்று அணிவதால் வருத்தம் தீரும் ஆதலால், அவ் வருத்தம் அற என்றவாறு.

‘ஒன்று’ என்ற இனைத்தென்றறி பொருளில் வந்த எண்ணுப் பெயர் வினைப்படுத்து உரைக்குங்கால் பெறுதற்குரிய உம்மை, விகாரத்தால் தொக்குநின்றது.  அதனை விரித்துரைத்துக் கொள்க.

அத் தீங்கு யாதெனில்: நெஞ்சானது பெருமானிடத்திலேயே பதிந்து விடும்; திரும்பி வாராது என்பது.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 07-10-2019 15:34:56(இந்திய நேரம்)