தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Ramanadaga Keerthanigal


வெளியீட்டாளர் முகவுரை

இணையில்லா இலக்கிய, இலக்கண, மருத்துவ நூற்பதிப்புகளைத்
தொடர்ந்து வெளியிட்டு வருகின்ற ஒப்பற்ற பணியினைச் சரசுவதி மகால்
நூலகம் ஆற்றிவருகின்றது.

அவ்வகையில் இப்பொழுது ‘இராமநாடகக் கீர்த்தனைகள்’ என்னும்
நூல் பதிப்பித்து வெளியிடப்படுகின்றது.

இசைத்தமிழ் வித்தகரான அருணாசலக் கவிராயரால் இயற்றப்பட்ட
பெருமைமிகுந்த இப்பனுவல், சரசுவதி மகால் நூலகத்தின் சுவடியை
அடிப்படையாகக் கொண்டும் முன்னர் வெளிவந்த அச்சு நூற்பதிப்புகளைத்
துணையாகக் கொண்டும் ஆய்வுப் பதிப்பு நூலாக இங்குப்
பதிப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நூலினைக் கம்பராமாயணத்துடன் ஒப்பிட்டு ஒப்புமை காட்டியும்,
ஆய்வு முகவுரை அகராதிகள் அமையவும் மிகச்சிறப்பாகப் பதிப்பித்து
அளித்திருக்கின்றார் பெரும்புலவர் பாவலரேறு ச.பாலசுந்தரனார் அவர்கள்.

இராமாயணக் கதையினைக் கம்பனை அடியொற்றிக் கீர்த்தனை
வடிவில் வழங்கியுள்ள இந்நூலினைச் செம்மையாகப் பதிப்பித்தளித்த
பதிப்பாசிரியருக்கு என் பாராட்டுகள். இந்நூலின் கையெழுத்துப்பிரதியை
நுண்ணாய்வு செய்தளித்த சேக்கிழார் அடிப்பொடி திரு தி.ந.இராமச்சந்திரன்
அவர்களுக்கு நன்றி. இந்நூலினை வெளியிட வழக்கம்போல நிதியுதவி
அளித்துள்ள நடுவண் அரசுக்கு என் நன்றியை உரித்தாக்கி மகிழ்கின்றேன்.

இந்நூல் நன்முறையில் வெளிவர ஆவன செய்துள்ள சரசுவதி மகால்
நூலக நிருவாக அலுவலர் திரு.எம்.உத்திராபதி அவர்களுக்கும், நூலக
வெளியீட்டு மேலாளர் திரு.அ.பஞ்சநாதன் அவர்களுக்கும் என் பாராட்டுகள்.

இந்நூலை நன்முறையில் அச்சிட்டளித்த சீர்காழி ஸ்ரீ சரவணா
அச்சகத்தார்க்கும், இந்நூல் வெளிவரத் துணைநின்ற ஏனையோருக்கும் நன்றி.

இப்பதிப்பு தமிழுலகின் வரவேற்பைப் பெறுதல் திண்ணம்.

தஞ்சாவூர் 
10.1.97.  

தங்கள்,
வி.கு.ஜெயக்கொடி இ.ஆ.ப.,
மாவட்ட ஆட்சித் தலைவர்
மற்றும் இயக்குநர், சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 02:44:36(இந்திய நேரம்)