தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU


கைக்கிளையை ஒருதலைக் காமமெனவும் பெருந்திணையைப்
பொருந்தாக் காமமெனவும் இடைக்காலத்தே வரையறுத்து எழுதிவிட்டதை
இந்நூல் முற்றிலுமாக மறுக்கின்றது. அகத்திணைக்குள் வரும் இவை ஐந்திணை
போலச் சிறப்புடையனவே என நிறுவும் பாங்கு. தமிழிலக்கியப் பண்பாட்டு
விளக்கமாகவும் அமைகிறது. அகத்திணை அன்றைய மக்கள் வாழ்விலிருந்து
முகிழ்த்தது. “இலக்கியம் வாழ்விலிருந்து நேரடியாகத் தோன்றுவது என்றால்,
ஒரு தனிமனிதன் வாழ்விலிருந்து தோன்றுவது என்றா பொருள்? மக்கள் பலர்
கூடிவாழும் சமுதாயக் கூட்டுறவிலிருந்து இலக்கியம் முகிழ்க்கும் என்று
கொள்க. அடுத்து நிலமும் காலமும் பற்றிய அடிப்படை அகப்பாடல்களின்

தோற்றத்திற்குக் காரணமானதும் அன்றைய மக்களின் உளவியல்
துணையானதும் தெளிவுபெற எடுத்துரைக்கப்படுகின்றன.

எழுத்தெண்ணிக் கற்றவர்கள் என்று கூறுவதுண்டு. சங்க இலக்கிய
அகப்பாக்கள் 1862. சங்க இலக்கியத்து இவ் அகப்பாக்களுள் கைக்கிளைக்கு
நான்கும் பெருந்திணைக்குப் பத்துமே உரியவாகக் காண்கின்றோம்.
இடந்தலைப்பாடு பற்றி மூன்று பாடல்களே சங்க இலக்கியத்து உள. பாங்கற்
கூட்டம் பற்றி 27 அகப்பாடல்கள் உள. இவற்றுள் பாங்கன் கூற்றாய் வருவன
இரண்டே. இத்தகைய புள்ளிகள் இந்நூல் முழுதும் தரப்பெற்றிருப்பது,
ஆசிரியரின் ஆழ்ந்து நுணுகிக் கற்ற புலமை வேரைக் காட்டுகின்றது; மேலே
ஆய்பவர்கட்கு உற்ற துணையும் ஆகின்றது.

மறுப்புக்கள்

இந்நூலுள் பழைய உரையாசிரியர்கள் முதல் இன்றைய
திறனாய்வாளர்கள் வரை மென்மையாகவும் வன்மையாகவும் மறுக்கப்படும்
இடங்கள் கூர்ந்து படிக்கப்பட வேண்டியவை.

     கரணத்தின் அமைந்து முடிந்த காலை
     நெஞ்சுதளை அவிழ்ந்த புணர்ச்சி

எனும் தொல்காப்பிய நூற்பாப் பகுதிக்கு, நச்சினார்க்கினியர் எழுதியுள்ள
உரையை இவர் மறுக்குமிடம் அவற்றுள் ஒன்று. அவ்வுரையாசிரியரைப்
போற்றத்தக்க இடத்தில் போற்றத் தவறாத இவர். பிழை கண்டவிடத்து
வன்மையாக இடித்துரைக்கிறார். இத்தகைய மறுப்புக்கள் இந்நூலுள்
பலவுளவாதலின், சான்றுக்கு ஒன்று காட்டுதல் தகும்.

     “இவ்வெளிய இனிய கற்பியல் நூற்பாவிற்கு நச்சினார்க்கினியர்
     ஒழுக்கமில்லுரை எழுதியிருக்கின்றார் என்று வரைய என்கோல்
     நடுங்கினும், எடுத்துக் காட்டினாற்றானே தெரியும் என்ற முறையில்,
     எழுத என் மனம் ஒப்புகிறது”.

திருமணத்தின்போது ஒருபெண்ணை முதல்நாள் சந்திரனுக்கும்
இரண்டாம்நாள் கந்தருவருக்கும் மூன்றாம்நாள் அங்கிக்(அக்கினி)கும்
அளிப்பார்களாம். இம்மூன்று தெய்வங்களுடனும் அப்பெண் உடலுறவு
கொள்வாளாம். நான்காம் நாள்தான், அங்கியங் கடவுள் மணமகனுக்கு


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 21:34:25(இந்திய நேரம்)