தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


என்னவென்று?

காதலன்:

ஓடற ஓட்டத்திலே
ஓட்டாங் குச்சிப் பள்ளத்திலே
கஞ்சாக் குடிக்கையிலே
கையூனி நிக்கையிலே
தங்கக் குடம் கொண்டு
தண்ணிக்குப் போற பொண்ணே!
தங்கக் கையினாலே
தண்ணி குடுத்தா ஆகாதோ?

காதலி:

வாய்க்காலுந் தண்ணியிலே
வண்டு வரும் தூசு வரும்
குப்பத்துக்கு வந்திருந்தா
குளுந் தண்ணி நாந் தருவேன்

காதலன்:
வீடுந் தெரியாது வாசலுந் தெரியாது

காதலி:

ஒரு பத்தாஞ் செட்டி வீட்டோரம்
ரெண்டு தென்னம்பிள்ளை அடையாளம்
அதுக் கடியில் உட்கார்ந்திரு நாவாரே

வந்தபின்னர் காதலி:

பாலும் அடுப்பில் தான்
பாலகனும் தொட்டிலிலே
பாலகனைப் பெத்தெடுத்த
பாட்டனாரும் கட்டிலிலே
போவச் சொன்னா பொல்லாப்பு
நிக்கச் சொன்னா நிட்டூரம்

காதலன்:
கிழக்கு வெளுத்துப் போச்சு
கீழ் வானம் கூடிப் போச்சு
கண்ணாத்தா வாசலிலே
காத்திருந்து வீணாச்சு!

வட்டார வழக்கு: நாவாரே-நான் வாரேன்.

குறிப்பு: “பாலகனைப் பெத்தெடுத்த பாட்டனாரும் கட்டிலிலே, இந்த அடியில் ஒரு சமூக உண்மை பொதிந்திருக்கிறது. கொங்கு நாட்டில் கடந்த இரண்டு தலைமுறைக்கு முன்னர் வரையிலும் தன் வீட்டுக்கு வரக்கூடிய மருமகளுக்கு மாமனார் தான் கணவனாக இருப்பான். கோவில் குளங்களுக்கோ, ஊர் சேதிகளுக்கோ போவதானாலும், மாமனாரும், மருமகளும்தான் சேர்ந்து போவார்கள். இது சமூகத்தின் முன்னால் இழிவாகக் கருதப்பட்டதில்லை. ஒரு கௌரவமாகவே கருதப்பட்டு வந்தது. பொதுவாக கொங்கு வேளாளர் குடும்பங்களில் தந்தையை அண்ணன் என்றும், பாட்டனாரை அப்பன் என்றும் இந்தத் தலைமுறையில் கூட கூப்பிட்டு வருவது இதற்கு ஒரு சான்றாக அமையலாம். மருமகளை மாமனார் ஆண்டு வருவதை பின்தங்கிய கிராமங்களில் இன்னும் கூடப் பார்க்கலாம்,”

(குறிப்புரை-கு.சின்னப்பபாரதி)

உதவியவர்:
பொன்னுசாமி

இடம்:
ஓலப்பாளையம்.




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 05:10:45(இந்திய நேரம்)