தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


குறவர் மகனோ?

(மணமகள் கட்சியினர் பாடுவது)

பெண்ணைப் பற்றி கேலிப்பாட்டுப் பாடிய மணமகனது உறவினருக்குப் பதில் அளிக்கும் முறையில் மணமகளது உறவினர் பாட்டுப் பாடுகிறார்கள். அப்பாட்டில் மணமகனைக் கேலி செய்து குறவன் மகனென்றும், அவன் காக்கைக் கருப்பென்றும் வருணிக்கிறார்கள்.

அந்தி ரயில் ஏறத்தெரியாது
அபிமன்னன் வீட்டுக்கு நீயா மருமகன்?
ஈச்சங் கொடி புடுங்கி
இருலட்சம் கட்டை பின்னும்
இந்திரர் வீட்டுக்கு
நீயா மருமகன்?
ஈச்சம் பழத்திலும்
இருண்ட கருப்பையா
இந்த மாப்பிள்ளை
நாகப்பழத்திலும்-இது
நல்ல கருப்பையா

ஆகாசம் மேலேறி
ஆடுதப்பா உன்கருப்பு
பந்தல் மேலேறி
பறக்குதப்பா உன் கருப்பு
ஒட்டுத் திண்ணை தூங்கிக்கு
பட்டுப் பாய் ஒண்ணா?
ஓணான் முதுகுக்கு
ஒரு ரூபாய் சந்தனமாம்
அரிசி பொறுக்கி மவன்
ஆனைமேல் வரும் போது
அரிச்சந்திரன் பெத்த மவள்
கால் நடையா வரலாமா?
கொள்ளு பொறுக்கி மவன்
குதிரை மேல் வருகையிலே
கோவலனார் பெத்த செல்வம்
கால் நடையா வரலாமா?
பருப்பு பொறுக்கி மவன்
பல்லக்கில் வருகையிலே
பாண்டியனார் பெத்த செல்வம்
கால் நடையா வரலாமா
கள்ளுக் கடை போவாராம்
கையில் மொந்தை எடுப்பாராம்
என்ன வென்று கேட்டால்
பசும்பால் என்று சொல்வாராம்
குதிரையடி போலே
கொழுக் கட்டை நூறுவச்சேன்
அத்தனையும் தின்னானே
அந்த உதடி மவன்
ஆனை அடி போலே
அதிரசம் நூறுவச்சேன்
அத்தனையும் தின்னானே
அந்த உதடி மவன்

வட்டார வழக்கு : அந்திரயில் தெரியாதவன்-மாலைக் கண்ணன் ; உதடி-வசைச்சொல், இந்த வசைகள் எல்லாம் மணமகனுக்காகி வந்தது.

உதவியவர் :
வாழப்பாடி சந்திரன்

இடம் :
வாழப்பாடி,
சேலம் மாவட்டம்.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 05:30:29(இந்திய நேரம்)