தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


மோதிரம் போடவில்லை

முன்னூறு ரூபாய் பரிசம் போட்டுப் பெண்ணைக் கட்டிவைத்தான் தன் மகனுக்கு. தகப்பனது நோக்கம் 300 ரூபாய் பரிசம் போட்டால், பெண்ணின் குடும்பச் சொத்து தன்னைச் சேரும் என்று நினைத்தான். ஆனால் கலியாணத்துக்குப் பின் அவளுக்குச் சொத்து எதுவும் கிடையாது என்று அறிந்தான். அதன்பின் அவளை அவன் கொடுமைப்படுத்தத் தொடங்கினான். மகனும் பெண் அழகாயில்லை என்ற சாக்கால் அவளை வெறுத்தான். மூவரும் தங்கள் கருத்தை ஒருவருக்கொருவர் வெளியிடும் நாடகக் காட்சியே பின்வரும் பாடல்கள்.

மாமனார் :
முன்னூரு பரிசம் போட்டு
முட்டாதாரு பெண்ணைக் கட்டி
மோதிரம் போடலைண்ணு
மூணு நாளா அழுகுறாண்டி
 

மருமகள் :
பரிசமும் போடவேண்டாம்
பந்தி பருமாற வேண்டாம்
ஏழை பெத்த பொண்ணு நானு
ஏத்துக் கொங்க மாமனாரே
 

மகன் :
உள்ளு வளசலடி
உன் முதுகு கூனலடி
ஆக்கங் கெட்ட கூனலுக்கோ
ஆசை கொள்வேன் பெண்மயிலே !

வட்டார வழக்கு : முட்டாதாரு-மிட்டாதார் ; பந்தி பருமாற-விருந்துகள் வைக்க வேண்டாம் ; பெத்த-பெற்ற

குறிப்பு : பெற்றோர் மடமையாலும் மோசத்தாலும் பெண் வாழ்விழந்து போகிறாள்.

சேகரித்தவர் :
S.M. கார்க்கி

இடம் :
சிவகிரி,
நெல்லை மாவட்டம்.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 05:34:54(இந்திய நேரம்)