Primary tabs
சந்தனத் தேவன்
சந்தனத்தேவன் பிரபலமான திருடன். இவனைப் பிடிக்கப் போலீசாரால் முடியவில்லை. பிடித்துத் தருபவர்களுக்கு ரூ,1000 வெகுமதி அளிப்பதாகப் பறைசாற்றப் பட்டது. பிடிக்க முன்வர யாருக்கும் தைரியமில்லை. கூட இருந்த ஒருவன் காட்டிக் கொடுத்துவிட்டான். பின்னர் சந்தனம் தூக்கிலிடப்பட்டான். அவன் மனைவி, அவனுடைய தாயாரிடம் அழுது சொல்லுவது போல கடைசிப் பாடல்கள் அமைந்துள்ளன. ஆயினும் பொருள் தெளிவாக விளங்கவில்லை.
விளம்பரம்
ஆயிரம் ரூபா தாரேன்
ஐக்கோட்டு வேலை தாரேன்
சந்தனத்தை பிடித்தவருக்கு
சருக்காரு வேலை தாரேன்
மக்களின் அச்சம்
ஆயிரம் ரூபா வேண்டாம்
ஐக்கோட்டு வேலை வேண்டாம்
சந்தனத்தை பிடிக்க வேண்டாம்
சருக்காரு வேலை வேண்டாம்
சந்தனத்தின் வீரம்
ஏட்டை இழுத்து வச்சு
இன்ஸ்பட்டரை கட்டி வச்சு
துவரங்காயைத் தின்னச் சொல்லி
மாட்டுரானே சந்தனமும்
மகனுக்குப் பரிசு
மகனுக்கு மல்லு வேட்டி
தாயாருக்கு சாயச் சீலை
பெண்டாட்டிக்குப் பொட்டுச் சீலை
போய் எடுத்தான் சந்தனமும்