Primary tabs
விதவையை யாரும் மதிக்கமாட்டார்கள். துணைவனோடு வாழும்போது அவளுக்குத் துணிவு இருந்தது. ஆதரவு இருந்தது. இப்பொழுது பழைய வேலைகளுக்கு அவள் போனால் அவளை யாராவது கொடுமைப்படுத்தினால் அவளுக்கு ஆதரவு யார்? எல்லோரும் இழிவாக கருதுவதனால் வேலைக்கு போகாமல் இருக்க முடியுமா? வேலை செய்தால்தானே கஞ்சி காய்ச்ச முடியும்?
அமங்கலி
வாழயிலை கொண்டு-ஒங்க
வளசலுக்கே போனாலும்
வாழலைக்குச் சாதமில்லை-ஒங்க
வளசலோட ஆசையில்ல
தேக்க இலைகொண்டு
தெருவோட போனாலும்
தேக்கிலைக்குச் சாதமில்லை-எங்க
தெருவோட ஆசையில்ல
அல்லியும் தாமரையும்
அடரிப் படர்ந்தாலும்
அல்லி பாக்க வந்தவுக-என்னை
அசநாட்டார் என்பாக
முல்லையும் தாமரையும்
முறுக்கிப் படர்ந்தாலும்
முல்லை பாக்க வந்தவுக-எனை
மூதேவி என்பாக
படியில் அரிசி கொண்டு
பழனிமலை போனாலும்
பழனிமலைப் பூசாரி-எனக்கு
பலனும் இல்லை என்பாரு
சொளவு அரிசி கொண்டு
சுருளிமலை போனாலும்
சுருளிமலைப் பூசாரி-எனக்கு
சுகமில்லை என்பாரு