Primary tabs
பகவான் அழைச்சானோ
இவள் கணவன் கிராமத்தில் அதிகாரியாக வாழ்ந்தவன். அவன் இறந்தவுடன் அவள் அவனது பெருமையையெல்லாம் சொல்லி ஆற்றுகிறாள். இவன் திடீரென்று இறந்து விட்டதால் எதிர்பாராத துக்கத்தில் மனைவி ஆழ்ந்து விட்டாள். பல உவமைகள் மூலம் அவள் தனது துன்பத்தை வெளியிடுகிறாள்.
ஏக்கம்
சித்திரக்காலி செவந்த-நான்
செவந்த மணவாரி
உப்பூத்தி நெல்லிலே-என்ன
ஊட கலந்தியளே
நந்தவனம் பூஞ்சோலை
நடுக்கிணறு சாவடியாம்
தங்கப் புண்ணியர்-இல்லாமே-அய்யா
புதுக்கிணறு பாழாச்சே
செப்போடு போட்டு
சிங்கம் போல் தூணிறுத்தி
எப்போதும் போல-மன்னா-உம்மை
உடனிருக்கத் தேடுதனே
பத்து வகைப் பச்சிலையாம்
பார்வதியாள் மாத்திரையாம்
பார்வதியாள் உரைக்குங்குள்ளே-உம்ம
பகவான் அழைச்சானோ?
பெருமை
தூணுல சாஞ்சு-நீங்க துரைகளோட வாதாடி
தூணும் துணுக்கிட-உங்க
துரை அடிமை வாக்குரைப்பான்
கல்லில சாஞ்சு-நீங்க
கணக்கனுட வாக்குரைக்க
கல்லும் துணிக்கிட்டா-அந்தக்
கணக்கனுமே வாக்குரைப்பான்
விரலும் கணக்கெழுதும்-உங்க
வெள்ளை மொழி தூதாகும்-உங்க
கையும் கணக்கெழுதும்-உங்க
கருத்த மொழி தூதாகும்
சட்டிமேல் சட்டி வச்சு-நான்
சரியாய் பிழைச்சு வந்தேன்
சட்டி கவுந்ததென்ன?-எனக்கு
சனியன் தொயந்த தென்ன?
மடிகட்டிக் கல் எறக்கி
மண்டபங்கள் உண்டு பண்ணி,
கோபுரத்தின் கீழே நான்
குழந்தை குடியிருந்தேன்,
கூடவித்துக் கல்லெறக்கி,
கோபுரங்கள் உண்டு பண்ணி,
கோபுரத்தின் கீழே-நான்
குழந்தை குடி இருக்கேன்,
பொங்கி பொரிச்சுவச்சு-நான்
புளியம் பூச் சோறாக்கி
;
பொங்கிய சோறு உங்கக்குள்ள-எனக்குப்
போட்டானே கெடியாரம்
ஆக்கி அடுக்கி வச்சு-நான்
ஆவாரம்பூச் சோறாக்கி
ஆக்கின சோறு உங்கக்குள்ள-எனக்கு
அடிச்சானே கெடியாரம்
!