Primary tabs
தாழம்பூக் கெண்டியிலே
தண்ணீரோ கொண்டு வந்தார்
தண்ணீர் இறங்கவில்லை
தாமரைப்பூ மேனியிலே
மாதாளம்பூக் கெண்டியிலே
மருந்து வகை கொண்டுவந்தார்
மருந்தோ இறங்க வில்லை
மல்லிகைப் பூ மேனியிலே
பஞ்சு கொண்டு பாலொழுக்கி
பட்டு கொண்டு வாய் துடைத்து
என்ன வேணுமின்னு சொல்லி
ஈஸ்வரனார் கேட்டாராம்
பொன்னும் வேண்டாம்
பொருளும் வேண்டாம்
பூலோகம் வேணுமின்னார்
காசு வேண்டாம், பணமும் வேண்டாம்
கயிலாசம் வேணுமின்னார்
அப்போ மகானிவர்க்கு
ஆயுள் முடிந்ததுவே
செப்பியதோர் காலதூதர்
சீக்கிரமாய்த் தான் வளைஞ்சார்
காலன் கொண்டு போறானே
கைலாசம் தீர்த்தமாட
எமன் கொண்டு போறானே
எமலோகம் தீர்த்தமாட
முத்துப் போல் கண்ணீரை-மக்கள்
முகமெல்லாம் சோர விட்டார்
பவளம் போல் கண்ணீரை-மக்கள்
பக்கமெல்லாம் சோர விட்டார்
குளிப்பாட்டி கோடி கட்டி,
கொண்டு வைத்தார் குறிச்சியிலே
முன்னூறு மூங்கியிலே
முதல் மூங்கி கொண்டு வந்தார்
நானூறு மூங்கியிலே
நல்மூங்கி கொண்டு வந்தார்.
மூங்கில் பாய் தானெடுத்து
முத்தமெல்லாம் பந்தலிட்டார்