தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Viyasa Vilakkam


முகவுரை

எந்த மொழியையும் பிழையறப் பேசவும் எழுதவும் அதன் இலக்கணவறிவு இன்றியமையாததென்பது எவரும் மறுக்கொணாதது.

இலக்கணம் பொதுவாய் மாணவர்க்கு வெறுப்பை விளைத்தற்கு, அதன் அரிதுணர் பொருண்மையினும் அதில் அவர்க்கு விருப்பின்மையே பெரிதுங் காரணமாகும். மாணவர் மனம் பெரும்பாலும் ஆங்கிலமயமா யிருக்கின்ற இக்காலத்தில், ஆங்கிலத்தினும் மிக விரிந்த தமிழிலக்கணம்அவர்க்கு ஏற்கின்றிலது. நன்னூல் மிகையென நீக்கி அதிற் சில இன்றியமையாத பகுதிகளையே புது முறைப் பள்ளியிறுதிப் பாடத்திட்டக் கழகத்தார் பாடமாக ஏற்படுத்தினும் அவையும் மிகையென மாணவரால் மதிக்கப்படுகின்றது. இலக்கண வறிவின்றிப் பிழையறப் பேசுவதும் எழுதுவதுமோ முயற்கோடும் ஆமையிறகுமே யாகும். இலக்கண வறிவின்மையானேயே பல பாடசாலைகளில் ஆறாம் பார மாணவர்கூட ஆறாம் வகுப்பு மாணவர் போன்றே பிழை மலிய எழுதுகின்றனர். அவரது வியாசங்களை ஆசிரியர் கைவலிக்கவும் மனஞ்சலிக்கவும் ஓயாது திருத்தித் திருத்தி ஓய்வு நேரத்தையெல்லாம் ஒழிப்பினும் அம்மாணவரது அறிவு திருந்தாமையின் அவ் வாசிரியர் உழைப்பெல்லாம் விழலுக்கிறைத்த நீர்போல் வீணாகிறது.

மாணவர் இலக்கண நூல்கள் எல்லாம் வியாசத்திற்கு வேண்டியவும் வேண்டாதனவுமான பல இலக்கணங்களை விரவிக் கூறுவன. அவற்றுள் வியாசத்திற்கு மிக வேண்டிய புணரியலோ சொற்புணர்ச்சிகளைத் திட்டம்பட வகுக்காமல் பெரும்பாலும் தவிர்ப்பும் (Exception) உறழ்ச்சியும் (Alternative) படவே வகுத்துக்கூறும். இதனால் மாணவர்க்குத் தெளிவான அறிவு பிறப்பதில்லை. ஆதலால், வியாசத்திற்கு வேண்டிய இலக்கணங்களை மட்டும் இயன்றவரை சுருக்கமாகவும் விளக்கமாகவும் கற்பிப்பின் மாணவர்க்குப் பயன்படுமென்றெண்ணி, பல ஆண்டுகளாக ஆயத்தம் செய்து இந் நூலை எழுதத் துணிந்தேன். ஈராண்டுகட்கு முன்னரே இந் நூல் எழுதப்பட்டதேனும் சில தடை பற்றி இதுகாறும் வெளிவந்திலது. மாணவர் பிழைகள் பெரும்பாலும் எழுத்துப் பிழையும் சொற்பிழையுமா யிருத்தலின் அவற்றை நீக்குவதற்குப் பல வழிகள் இந் நூல் நெடுமையும் கையாளப்பட்டன. உதாரணமாக ரகர றகர பேதங்களையும், வலி மிகும் இடங்களையும் நோக்குவார்க்கு இவ் வுண்மை இனிது புலானம்.

இந் நூற்றிருத்தம்பற்றி அறிஞர் தம் கருத்துகளைத் தெரிவிப்பின் அவை நன்றியறிவுடன் அடுத்த பதிப்பிற் றழுவப்படும்.

 

புத்தூர், திருச்சிராப்பள்ளி
12.12.1936

ஞா.தேவநேயன்


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 12:32:43(இந்திய நேரம்)