தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஐயரவர்களின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்


ix

ஐயரவர்களின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்

இந்த நூற்றாண்டில் தமிழ் இலக்கிய உலகில் இரண்டு பெரிய
மலைகளைப் போன்ற பெரியவர்கள் தமிழ்மொழிக்குப் புதிய ஒளியைக்
கொடுத்தார்கள். ஒருவர் ஸ்ரீசுப்பிரமணிய பாரதியார். மற்றொருவர் ஸ்ரீ
மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்கள் கவிஞர் பாரதியார்
தம்முடைய புதிய கவிகளால் தமிழ்த்தாய்க்குப் புதிய அணிகளைப் பூட்டினார்.
ஐயரவர்களோ, பல காலமாக மங்கி மறைந்து கிடந்த பழைய அணிகளை
மீட்டும் எடுத்துக் கொணர்ந்து துலக்கி மெருகூட்டிப் பூட்டி அழகு
பார்த்தார்கள்.

தமிழ்த் தாத்தா என்று தமிழ்க் குழந்தைகளால் அன்புடன்
போற்றப்பெறும் ஐயரவர்கள் உண்மையில் சென்ற நூற்றாண்டிலேயே
தம்முடைய அரும்பெருந் தொண்டைத் தொடங்கிவிட்டார்கள். அவர்கள்
1855-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி தோன்றினார்கள்.
அவர்கள் தோன்றிய காலத்தில் இருந்த தமிழின் நிலைக்கும் அவர்கள்
மறைந்த காலத்தில் (ஏப்ரல், 1942) தமிழ் உயர்ந்து நின்ற நிலைக்கும்
எவ்வளவோ வேற்றுமை உண்டு. அவர்கள் 1887-ஆம் ஆண்டில்
சீவகசிந்தாமணியை அச்சிட்டு வெளியிட்டார்கள். அது முதல் இறுதிக்
காலம் வரையில் தமிழ்த்தாயின் அணிகளை ஒவ்வொன்றாகப் புதுப்பிக்கும்
அற்புதமான தொண்டில் தம் காலம் முழுவதையும் அவர்கள் செலவிட்டார்கள்,

அவர்கள் தோன்றிய காலத்தில் பெரும் புலவர்களும் சங்க நூல்கள்
என்று பெயரளவிலே தெரிந்து கொண்டிருந்தார்களே ஒழிய அவை இன்னவை
என்பது அவர்களுக்குத் தெரியாது. கோவலன் கதை என்ற ஒரு நாடோடிக்
கதையையும் அதில் வரும் கண்ணகியையும் மாதவியையும் அறிவார்களே
யன்றிச் சிலப்பதிகாரத்தையும் அதில் உள்ள பாத்திரங்களையும்
அறியமாட்டார்கள். அகநானூறு, புறநானூறு என்ற இரண்டுக்கும் உள்ள
வேறுபாடு இன்னதென்று தெரியாது, மணிமேகலை எந்தச் சமயத்தைப் பற்றிய
நூல் என்பதும் தெரியாது.

இன்றோ பள்ளிக்கூடத்திற் பயிலும் மூன்றாம் வகுப்பு மாணவனுக்கும்
பாரியைப்பற்றிய வரலாறு தெரியும். சேரன் செங்குட்டுவனுடைய வெற்றியைப்
பற்றி மேல் வகுப்பு மாணாக்கர்கள் படிக்கிறார்கள். பள்ளிக் கூடங்களிலும்
கல்லூரிகளிலும் புறநானூறு, குறுந்தொகை பத்துப்பாட்டு முதலிய சங்க
நூல்களிலுள்ள பகுதிகளைப் பாடமாக வாசிக்கிறார்கள் பிள்ளைகள்.


புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 12:37:19(இந்திய நேரம்)