Primary tabs


லக்கணம் கூறினார்; இது கைக்கிளை பெருந்திணைக்கு உரிய
இயல்பு உணர்த்துதல் நுதலிற்று.
எ திணை மருங்கினும் - எல்லாக் குலத்தினிடத்தினும், மகடூஉ
மடல்மேல் (இல்லை) - பெண்பால் மடலேறுதல் இல்லை; பொற்புடை
நெறிமை இன்மையான - பொலிவுபெறு நெறிமை இல்லாமையான்.
'மடன்மேல்' என்பது மடலேறுதல் என்னும் பொருள் குறித்தது.
இல்லை என்பது மேலைச் சூத்திரத்தினின்று தந்துரைக்கப்பட்டது.
'பொற்புடை நெறிமை' என்பது பெண்பாற்கு இன்றியமையாத நாணம்
முதலாயின. மகடூஉ மடலேறுதல் இல்லை எனவே ஆடூஉ மடலேறுதல்
உண்டு என்பது பெற்றாம். இது,"புணரா இரக்கமாகிய கைக்கிளைக்கும்,"
"தேறுதலொழிந்த காமத்து மிகுதிறன்" (அகத். 51) ஆகிய
பெருந்திணைக்கும் உரித்தாகியவாறு கண்டுகொள்க. [ஈற்றகரம்சாரியை.]
39. தன்னும் அவனும் அவளுஞ் சுட்டி
மன்னும் நிமித்தம் மொழிப்பொருள் தெய்வம்
நன்மை தீமை அச்சஞ் சார்தலென்று
அன்ன பிறவும் அவற்றொடு தொகைஇ
முன்னிய கால மூன்றொடு விளக்கித்
தோழி தேஎத்துங் கண்டோர் பாங்கினும்
போகிய திறந்து நற்றாய் புலம்பலும்
ஆகிய கிளவியு மவ்வழி உரிய.
இது, மேற்கூறப்பட்ட இருவகைப்பிரிவினுள் (அகத். 13) தமரைப்
பிரிதலாகிய உடன்போக்கில் நிகழ்ந்த நற்றாய்மாட் டுளதாய கிளவி
உணர்த்துதல் நுதலிற்று.
தன்னும் அவனும் அவளும் சுட்டியென்பது, தன்னையும்
தலைமகனையும் தலைமகளையும் குறித்து என்றவாறு.
மன்னுநிமித்தமாவது, ஆட்சி பெற்ற நிமித்தம் ; அது பல்லி
முதலாயினவாம். மொழிப்பொருளாவது, பிறர் தம்முள் கூறும்
மொழிப்பொருளை நிமித்தமாகக் கோடல்; அதனை நற்சொல் என்ப.
தெய்வம் என்பது, உலகினுள் வாழும் இயக்கர் முதலாயினார்
ஆவேசித்துக் கூறும் சொல். நன்மை தீமை அச்சம் என்பது,
தனக்கும் அவர்க்கும் உளதாகிய நன்மையும் தீமையும் அச்சமும்
என்றவாறு. சார்தல் என்பது, அவர் தன்னை வந்து சார்தல். என்று
என்பது இடைச்சொல். அன்னபிறவும் என்பது, அத்தன்மைய பிறவும்
என்றவாறு. அவற்றொடு தொகைஇ என்பது, மேற்சொல்லப்பட்ட
நிமித்தம் முதலாயினவற்றோடு கூட்டி என்றவாறு. அவ்வழியாகிய
கிளவியும் உரிய என்பது, அவ்விடத்தாகும் கூற்றும் உரிய என்றவாறு.
போகிய திறத்து நற்றாய் தன்னும் அவனும் அவளும் சுட்டி -
தலைமகள் உடன் போகியவழி நற்றாய் தன்னையும் அவனையும்
அவளையும் சுட்டி, மன்னும் நிமித்தம் - நிலை பெற்ற நிமித்தம்,
மொழிப்பொருள் தெய்வம் அவற்றொடு - மொழிப் பொருள் தெய்வம்
என்பனவற்றொடு, நன்மை தீமை அச்சம் சார்தல் என்று - தனக்கும்
அவர்க்கும் உளதாகிய நன்மை தீமை அச்சம் சார்தல் என்பனவும்,
அன்னபிறவும் அவற்றொடு தொகைஇ - அத் தன்மை பிறவும்
அவற்றோடு கூட்டி, முன்னிய காலம் மூன்றொடு விளக்கி - குறித்த
காலம் மூன்றும் ஒருங்கு தோற்றுவித்து, தோழி தேஎத்தும் கண்டோர்
பாங்கினும் புலம்பலும் - தோழிமாட்டும் கண்டோர்மாட்டும் புலம்
புதலும். அவ் வழி ஆகிய கிளவியும் உரிய -அவ்வழி நிகழும் கூற்றும்
உரிய.
"போகிய திறத்து நற்றாய்" என்றதனை முன்னே கூட்டுக.
"அவற்றொடு" என்பதனைத் தெய்வம் என்பதனோடும் கூட்டுக.
முன்னியகாலம் மூன்றுடன் விளக்குதலாவது, முன்பு இத் தன்மை
யளாயினாள்; இப்பொழுது இத் தன்மையளாகா நின்றாள்; மேல்
இன்னளாகுவள் என மூன்று காலமும் ஒருங்கு தோற்றுவித்துப்
புலம்புதல். அவ்வழி ஆகிய கிளவியும் என மொழிமாற்றுக.
அவற்றிற்குச் சில உதாரணங்கள் :
"தோழியர் சூழத் துனறமுன்றில் ஆடுங்கால்
வீழ்பவள் போலத் தளருங்கால் - தாழாது
கல்லதர் அத்தத்தைக் காதலன் பின்போதல்
வல்லவோ மாதர் நடை " (ஐந்திணை ஐம்பது - 37)
என்பது தலைமகள் உடன்போயவழி நற்றாய் கவன்றுரைத்தது.
"மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை
அன்புடை மரபின்நின் கிளையோ டாரப்
பச்சூன் பெய்த பைந்நிண வல்சி
பொலம்புனை கலத்தில் தருகுவென் மாதோ
வெஞ்சின விறல்வேற் காளையோடு
அஞ்சில் ஓதியை வரக்கரைந் தீமே" (ஐங்குறு - 31)
என்பது நற்றாய் உடன்போய தலைமகள் பொருட்டாகக் காகத்திற்குப்
பராய்க் கடன் உரைத்தது.
"வேறாக நின்னை வினவுவேன் தெய்வத்தால்
கூறாயோ கூறுங் குணத்தினனாய் - வேறாக
என்மனைக் கேறக் கொணருமோ எல்வளையைத்
தன்மனைக்கே உய்க்குமோ தான் " (திணைமாலை நூற். 90)
என்பது நற்றாய் தலைமகளின் உடன்போக் கெண்ணிப் படிமத்தானை
வினாஅயது.
பிறவும் அன்ன. 'ஈன்றவள் புலம்பலும்' என்ற உம்மையால் செவிலி
புலம்பலும் கொள்ளப்படும்.
உதாரணம்
"பெயர்த்தனென் முயங்கயான் வியர்த்தனென் என்றனள்
இனியறிந் தேனது துனியா குதலே
கழல்தொடி யாஅய் மழைதவழ் பொதியில்
வேங்கையுங் காந்தளும் நாறி
ஆம்பல் மலரினுந் தான்தண் ணியளே" (குறுந்- 84)
என்பது, உடன்போக்கிய செவிலி கவன் றுரைத்தது.
"என்னும் உள்ளினள் கொல்லோ தன்னை
நெஞ்சுணத் தேற்றிய வஞ்சினக் காளையோடு
அழுங்கல் மூதூர் அலரெழச்
செழும்பல் குன்றம்