தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   717


 

எச்சப்     பொருண்மையினை  உடைய   உம்மையும்,    எதிர்மறை
உம்மையும்-அதனை   முடிக்கவரும்  எதிர்மறைப்  பொருண்மையினை
உடைய  உம்மையும்,   தத்தமுள்  மயங்கும்;-தொடராய் வந்து தம்முள்
மயங்கும்;  உடனிலை  இலவே-அங்ஙனம் மயங்கினவேனும் தன்வினை
ஒன்றிய முடிபு கொள்ளா, எ-று.
 

(எ-டு.)    ‘சாத்தனும் வந்தான்: இனிக் கொற்றனும் வரினும் வரும்,’
என்புழிச் ‘சாத்தனும்  கொற்றனும்’ என்னும் எச்ச உம்மைகள் ‘வரினும்’
என்னும்    எதிர்மறை   உம்மையொடு   தொடர்ந்து   நின்று   ஒரு
வினைகொள்ளாது,   இறப்பும்   எதிர்வும்பற்றி  வரும்  வேறு  வினை
கொண்டவாறு   காண்க.  இங்ஙனம்  உலக  வழக்கு  உண்மையானும்,
ஆசிரியர்  ‘மயங்கி  உடனிலை  இல,’ என்னாது, ‘மயங்கும் உடனிலை
இல,’  எனச்   சூத்திரம்  செய்தமை  யானும், இதுவே பொருள் என்று
உணர்க.  இவ்விரண்டு உம்மையும் எச்சமாதலின், இவற்றிற்கே மயக்கம்
உளது என்று கூறினார்.
 

‘ஒன்றென    முடித்தல்’ என்பதனான், ‘வடுகரசரும் வந்தார்; இனித்
தமிழ்நாட்டு  மூவேந்தரும்  வரினும் வருவர்,’ என எச்ச உம்மையொடு
முற்றுமை தொடர்ந்து வேறு வினைகோடலுங் கொள்க. (35)
 

எச்சஉம்மை நிற்றற்குரிய இடம்
 

286.

எஞ்சுபொருட் கிளவி செஞ்சொ லாயின்
பிற்படக் கிளவார் முற்படக் கிளத்தல்.
 

இஃது, எச்ச உம்மைக்கண் சொல்லுதல் வகைமை கூறுகின்றது.
 

(இ-ள்.)    எஞ்சு பொருட்கிளவி - எச்ச உம்மையான் தழுவப்படும்
எஞ்சுபொருட்  கிளவி, செஞ்சொல் ஆயின் பிற்படக் கிளவார் முற்படக்
கிளத்தல்  -  உம்மையில்  சொல்லாயின்  அவ்வும்மையில்  சொல்லை
அவ்வும்மைத்  தொடர்க்குப்   பின்சொல்லாது   முன்சொல்லுக, எ-று.

(எ-டு.) சாத்தன் வந்தான் கொற்றனும் வந்தான்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:58:45(இந்திய நேரம்)